காப்பிய இலக்கியக் கட்டுரைகள்

சிலப்பதிகாரத்தில் காட்சிக்கலை

முனைவர் மு. பழனியப்பன்

இணைப்பேராசிரியர்,
மா.மன்னர் கல்லூரி
புதுக்கோட்டை
தமிழ் இலக்கியப் பரப்பில் இளங்கோவடிகள் காப்பிய வடிவத்தையும், காப்பிய மரபுகளையும் தொடங்கி வைக்கும் முதன்மையாளராக விளங்குகின்றனார். காப்பியம் என்ற நீண்ட வடிவத்தின் இழுவைத் தன்மை குன்றாமல், சுவைத்திறன் மாறாமல் படைத்துச் செல்லும் திறன் மிக்க காப்பியப் படைப்பாளராகவும் இளங்கோவடிகள் விளங்குகின்றார். தன் காப்பியத்தை ஒரு தழுவலாகவும், வேறுமொழி இலக்கியச் சாயல் உள்ளதாகவோ அவர் படைத்துக்காட்டாமல் சுயம்புத் தன்மை மிக்கதாக தன் படைப்பினை உருவாக்கியிருப்பது கண்டுகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
இலக்கிய வகைகளை முதன் முதலாகப் படைத்துக் கொள்ளும் படைப்பாளருக்கும் பற்பல விடுதலைகள் இருப்பதுபோன்றே பற்பல இடைஞ்சல்களும் உண்டு. விடுதலைகள், இடைஞ்சல்கள் இவற்றைத் தாண்டி முழுமைமிக்கப் படைப்பாக, அனைத்துப் பார்வைகளுக்கும், போக்குகளுக்கும், பிற்கால உலகினர்க்கும் இடமளிக்கின்ற உயிர்ப்பு மிக்கக் களமாக தன் படைப்பினை காலகாலத்திற்கும், நிலைநிறுத்திவிடுகிற படைப்பாளனின் தன்மை நினைந்து நினைந்து போற்றுதற்குரியது.
அவ்வகையில் சிலப்பதிகாரம் தமிழ்ப்பரப்பில் முதல் காப்பியம் என்றாலும் அது முழுமை பெற்ற காப்பியமாக முதிர்ச்சி பெற்ற காப்பியமாக அள்ள அள்ளக் குறையாத சுவையமைப்பு, கட்டமைப்பு உடையதாக விளங்கி நிற்கின்றது. ஒன்றே செய்தாலும் அதனை நன்றே செய்து என்றைக்கும் படைப்புலகில் தன்னிகரற்று விளங்குகின்றதன்மை உடையவராக இளங்கோவடிகள் எக்காலத்தும் உணரப்படுவார்.
இவரின் சிலப்பதிகாரத்தில் காட்சிக் கலைகள் குறித்த செய்திகளை இக்கட்டுரை வழங்கி நிற்கிறது.
காட்சிக்கலைகள் ஒரு அறிமுகம்
விஷூவல் ஆர்ட்ஸ் என்று ஆங்கிலத்தில் உணரப்படுகிற இந்தக் காட்சிக் கலைகள் தற்போது அதிக அளவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாடகம், தொலைக்காட்சி நிகழ்வுகள், திரைப்படம் போன்ற மேடை சார்ந்த கலைகள், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற நாட்டுப்புற ஆடல்கலைகள் போன்ற பதிவு செய்து திருத்தப்பட்ட, பதிவு செய்யப்படாத, திருத்தப்படாத குழு சார்ந்து இயங்கும் அனைத்து வடிவங்களையும் காட்சிக்கலைக்குள் கொண்டு வர இயலும் என்றாலும் தனி மனித படைப்புகள் காட்சிக் கலையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
குறிப்பாக விளம்பரங்கள், துண்டு அறிக்கைகள், முகப்பு அட்டைகள் (டுயடெநள), செயற்கைப் பூக்கள், தாவரங்கள், துணிகள் மற்றும் சில பொருள்களில் செய்யப்படும் கலைவேலைப்பாடுகள், வரைபடங்கள், நிலவரைபடங்கள், கேலிச்சித்திரங்கள், உருவாக்கப் பெற்ற கேலிச்சித்திரப் பாத்திரங்கள், பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், வண்ணமற்ற ஓவியங்கள், வண்ண ஓவியங்கள், கலை வடிவம் கொண்ட வாழ்த்து அட்டைகள், நகை வடிவங்கள், விளையாட்டுகள், புதிர்கள், ஊசித் தையல்கள், தரைக்கற்களில் வரையப்படும் ஓவியம் சார்ந்த மாதிரிகள், கணினியால் வரையப்பெற்ற மாதிரிகள், புகைப்படங்கள், குறிப்பேடுகளுக்கு போடப்படும் முன் அட்டை மாதிரிகள், சிலைகள், கண்ணாடி மற்றும் மண் போன்றவற்றால் ஆன பொருள்களின் மீது வரையப்பெறும் கலைவடிவங்கள், பல முறை வரைவதற்காக உறுதியான பொருள்களால் ஏற்படுத்தப் பெற்ற மாதிரிகள், பொருள்களின் வடிவம், கட்டடங்களின் வடிவம் போன்றன கருதி வரையப் பெறுகின்ற வரைபட மாதிரிகள் போன்ற பலவும் தனிமனித காட்சிக் கலைகள் ஆகும்.
குழுக் காட்சிக்கலைகளைவிட இந்தத் தனிமனிதக் காட்சிக்கலைகள் தற்போது உலகஅளவில் பதிவு பெறத்தக்கனவாக, ஒருவரின் உரிமைக்கு உரியனவாக பதிப்புரிமை செய்யப் பெறுகின்றன. உலக அளவில் இதற்கான சட்டம் வரையப் பெற்றுள்ளது. ஊடிலசபைவ சுநபளைவசயவடி கடிச றடிசமள டிக வாந ஏளைரயட _சவ என்ற சட்டம் தற்போது உலக அளவில் ஏற்படுத்தப் பெற்றுள்ளது. 1989க்குப் பின் இந்தச் சட்டம் அனைத்து நிலைகளிலும் ஒரு காப்புறுதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. இதற்குப்பின் படைக்கப் பெற்ற அனைத்தும் இந்தக் காப்புறுதிச் சட்டத்திற்கு உரியவை ஆகின்றன. இதன்படி ஒருவருக்குச் சொந்தமான கலைப்படைப்பு, மிகப் பெரிய அளவில் ஒரு வெளியீடாக வெளிப்படுத்தப்படுகிற நிலையில் காப்புறுதியை உறுதி செய்து அந்தப் படைப்பாளருக்கு உரிய பங்குத் தொகை அளிக்கப்படவேண்டும்.
சிலப்பதிகாரமும் காட்சிக்கலையும்
சிலப்பதிகாரத்தில் சுட்டப்படும் அனைத்துக் கலைப் பொருட்களும் காட்சிக்கலை சார்ந்தவை என்பது தற்போது புரியவரும். சிலப்பதிகாரம் என்ற பெயரே காட்சி கலை சார்ந்துதான் வைக்கப் பெற்றுள்ளது. சிலம்பு என்ற அணியின் கலைவடிவம், அதன் உள்ளிடு பொருள் ஆகியன ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நிலையில் அமைக்கப் பெற்றுள்ளது. சிலம்பின் காட்சி ஒற்றுமை ஒரே தன்மையதாக இருந்தாலும் உள்ளிடு பொருளின் வேறுபாடுதான் சிலம்பின் வேறுபாடு, காட்சி நுணுக்கமாக அமைந்து விடுகின்றது.
“நற்றிரம் படராக் கொற்கை வேந்தே
என்கால் பொற்சிலம்பு மணியுடை அரியே எனத்
தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே
தருகென தந்து தான் முன் வைப்ப
கண்ணகி அணி மணிக் கால்ச்சிலம்பு உடைப்ப
மன்னவன் வாய் முதல் தெரித்தது மணியே மணி கண்டு
தாழ்ந்த குடையன்”
(வழக்குரை காதை 6673)
என்ற பகுதியில் சிலம்பின் அடையாளங்கள் அக்காலத்திலேயே ஒரு வரையறைக்கு உட்பட்டுச் செய்யப் பெற்றுள்ளன என்பதை உணர முடிகின்றனது. கண்ணகியின் கால் சிலம்பு மாணிக்கப் பரல்களை உடையது. பாண்டிய மன்னனின் சிலம்பு கொற்கை முத்துக்களை உடையது.
கண்ணகி பாண்டிய அரசனின் சிலம்பைப் பார்த்தவள் இல்லை. இருப்பினும் பாண்டிய அரசர்களின் அணிகலன் முறைகளை அறிந்து கொண்டவளாக இருக்கிறாள். கொல்லனால் கண்டறியப்படாத நுணுக்கமான அணி வேறுபாடு வணிக மரபினர்க்குத் தெரிந்திருக்கிறது. ஏனெனில் இவர்கள் உலகம் சார்ந்த வணிகத்தைச் செய்தவர்கள். அந்தஅந்தக் கலாச்சாரத்தின் மண்ணின் வாசனையை அறிந்தவர்கள்.
காட்சிக் கலைக்குச் சிலம்புகளே அடிப்படையாக விளங்குகின்றன. கண்ணகி உடைத்தது எந்த சிலம்பு என்பதில் வேறுபாடு இருக்கலாமே தவிர இந்தக் காட்சிப் பிழைகளில் தவறு உள்ளது என்பதில் வேறுபாடு அறிஞர்களிடத்தில் இல்லை.
மாதவி எழுதிய அகமடல்கள் உருவாக்கப் பட்ட முறைமையும் தனித்துவமானது.
முதல்மடல் மலர்களின் கூட்டுச்சேர்க்கையால் உருவானது. கொண்டு சென்றவள் மாதவியின் தோழியான வயந்தமாலை. அம்மடல் தாழம்பூவின் மடலில், சுற்றிலும் பல்வகைப் பூக்கள் பொருத்தப்பட்டு, செம்பஞ்சுக் குழம்பு மையாகவும், பித்திகையின் மொட்டு எழுத்தாணியாகவும் கொண்டு எழுதப் பெற்றுள்ளது.
“மாதவியோலை மலர்க்கையின் நீட்ட
உடன் உறை காலத் துரைந்த நெய்வாசம்
குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணரத்திக்
காட்டியது ஆதலின் கைவிடல் ஈயான்”
(புறஞ்சேரி இறுத்த காதை, 8184)
மாதவி தனிப்பட எழுதிய அவளின் சொந்தத் தயாரிப்பு இந்த மடல். இந்தச் சொந்தத் தயாரிப்பில் முக்கிய இடம் வகிப்பன மண் முத்திரையும், தலைமுடியும். இவை இரண்டும் மாதவியின் நினைவினை, அவளின் வாத்தினைக் கோவலனுக்கு உணர்த்தின. ஆனால் இவற்றைப் பிரித்த கோவலன் இவற்றை விடுத்தே தன் பெற்றோருக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்க வேண்டும். காட்சிக் கலைக்குரிய கலைச் சின்னங்களாக மண்பொறியும், மாதவியின் தலைமுடியும் விளங்கியிருக்கின்றன. அவற்றைத் தனக்கானதாக எடுத்துக் கொண்ட கோவலன் மடலின் செய்தியைத் தன் பெற்றோருக்கு அளித்து விடுகிறான்.
மிக்க நுணுக்கமான இடங்களில் நுணுக்கமான செய்தி வேறுபாடுகளைப் படைத்துக் காட்டுவதில் காட்சி நிலைக் கவிஞராக இளங்கோவடிகள் விளங்குகின்றார்.
இவரின் முன்று காண்டங்களிலும் காட்சிக் கலை நிகழ்வுகள் எடுத்துரைக்கப் பெற்றுச் சிறப்பிக்கப்பெறுகின்றன. புகார் காண்டத்தில் இடம்பெறும் நாடுகாண் காதை, மதுரைக் காண்டத்தில் இடம்பெறும் காடு காண் காதை, ஊர்காண் காதை, வஞ்சிக் காண்டத்தில் இடம்பெறும் காட்சிக் காதை போன்றன காட்சிக்கலை சார்ந்தன. இவற்றின் பெயர் அமைப்பிலேயே காட்சிகள் இருப்பது தெளிவு.
நாடுகாண் காதையில் கவுந்தியடிகளின் காட்சி முதன்மை பெறுகிறது. காடுகாண் காதை, ஊர்காண் காதையில் கோவலனின் காட்சி முதன்மை பெறுகிறது. காட்சிக்காதையில் மலைமக்களின் காட்சி முதன்மைப் படுத்தப்படுகிறது. இவர்களின் கண்களின் வழியாக இளங்கோவடிகள் காட்சிகளைக் காப்பியத்தில் நிகழ்த்துகிறார்.
நாடுகாண் காதை காட்சிக் கலைத்திறன்
கோவலனும் கண்ணகியும் நாட்டினை விட்டுப் புறப்பட எண்ணுகின்றனர். இந்தத் துயரமான சூழ்நிலையில் இந்தக் கதை மாந்தர்களின் சித்திரப்பு மிகச் சிறந்த அவலக் காட்சியாக காப்பியத்தில் விரிகின்றது.
” வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன் திகழ் விசும்பின் வெண்மதி நீங்க
காரிருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினை கடைஇ உள்ளம் துறப்ப
ஏழகத்தகரும் எகினக் கவரியும்
தூமயிர் அன்னமும் துணைஎனத்திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீணொடு வாயில நெடுங்கடை கழிந்தாங்கு
அணிகிளர் அரவம் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலசெயாக கழிந்து ”
(நாடுகாண் காதை, 110)
கோவலன் புறப்படுகிறான். கதை செய்யும் படைப்பாளனுக்கு அவன் இனி திரும்பப்போவதில் என்பது தெரிந்துவிட்டது. அவன்மேல் படைப்பாளர் இரக்கம் கொள்கிறார்.
வெண்மதி நீங்க, கடைநாள் போன்றன கோவலன் திரும்பான் என்பதற்கான குறிச்சொற்கள். மேலும் ஆடு, கவரிமான், அன்னம் என்ற முன்றும் செல்லப்போகின்ற முவரின் குறியீடுகள். ஆடாகக் கோவலனை,கவரிமானாக கவுந்தி (கவரி)யை, அன்னமாகக் கண்ணகியை நினைந்து காணலாம்.
ஊரை விட்டுப்போகிறவர்கள் காலைப் பொழுதில் கிளம்புகிறார்கள். ஊரில் சொல்லிச் செல்ல இயலாது. அதனால் கோயில்களுக்குப் போவார்போல கைகளில் அதிக சுமையின்றிச் செல்கின்றனர். இருக்கின்ற ஒரே பொருள் இணையான சிலம்புகள். அவை கண்ணகியின் கால்களில் பாதுகாப்புடன் இருக்கின்றன. வேறெதும் கொண்டுபோக இயலாத சூழலில் திருமால் கோயில், புத்த விகாரம், சமணர் கோயில் அனைத்தும் தொழுது செல்லும் இந்த ஆதரவற்ற நிலையை வருத்தத்துடன் படைப்பாளர் படைக்கின்றார்.
வீட்டைவிடடுவிட்டுச் செல்கிறவர்கள் படும் பாட்டை “நீணொடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு” என்ற அடிகள் உணர்த்துகின்றன. கோவலனின் வீடு பெரிய நிலைக்கதவுகளை உடையதாம். அதற்கேற்ற நிலையில் அதற்குத் தாழ் உண்டு. இந்தக் கதவினைச் சாத்திக் கொள்ளவும், தாழ் போட்டுக் கொள்ளவும் கூட யாருமில்லாத மாளிகை அந்த மாளிகை.
துணைக்கு கவுந்தியும் பயணப்படுகிறார். மதுரையில் உள்ள சமணப் பள்ளிகளைக் கண்டு தரிசிக்க இவர்களுடன் வருகிறார். அவர் வழிநடையில் ஏற்படும் துயரங்களை, அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்ற சூழலில் அவர்கள் நடக்கின்றனர்.
அப்போது நாட்டில் நடைபெறும் பல்வகை ஒலிகளைக் கொண்டு நாட்டின் நிலைப்பாட்டை இளங்கோவடிகள் எடுத்துரைக்கிறார்.
கம்புள் கோழியும், கனைகுரல் நாரையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழுஉக் குரல் பரந்த ஓதையும்
( நாடுகாண் காதை 116119)
என்பன பறவைகள் எழுப்பிய ஓசைகள். இதுதவிர எருமைகளின் செயல்பாடுகள், பயிர்த்தொழில் செய்பவரின் செயல்பாடுகள் எனக் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக இவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
காட்சிப்பிழையாகத் தோன்றும் காட்சி ஒன்றும் இங்கு இடம் பெறுகிறது. வம்பப்பரத்தை, வருமொழியாளன் என்ற இரு பாத்திரங்கள் காட்சிப்பிழைக்கு உள்ளாகின்றன. இவர்கள் கவுந்தியடிகளிடம் “யார் இவர்கள்” என்று கோவலன், கண்ணகியைக் கேட்க அவரோ “மக்கள் காணீர்” என்று உரைக்கின்றார்.
உடன் வயின்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ என்ற சந்தேகம் கேள்வி கேட்டவர்களுக்கு வருகின்றது. கண்ணகியும் கோவலனும் உடன்பிறப்புகள் என்ற நிலையைத் தாண்டி அன்பொழுக நடந்து கொண்டுள்ளனர் என்பதை இந்தக் காட்சிப்பிழை எடுத்துரைக்கின்றது. இதனைக் கேட்ட கண்ணகி உள்ளம் நடுங்க கேள்வி கேட்டவர்கள் முதுநரிகளாக மாறும் சாபக்காட்சி அங்கு அரங்கேறுகிறது.
காடுகாண் காதை காட்சிக் கலைத்திறன்
பூம்புகார் விட்டு திருச்சியை நோக்கி இவர்கள் பயணிக்கிறார்கள். காவிரியின் போக்கிலேயே இவர்கள் நடந்து வருவதால் யாரிடமும் செல்லும் இடம் பற்றி விசாரிக்க வேண்டி வரவில்லை. இவர்கள் முவரும் திருவரங்கம் அடைந்துப் பின் உறையூர் வருகின்றனர்.
உறையூரைத் தாண்டி வரும்போது மாங்காட்டு மறையவன் எதிர்ப்படுகிறான். இவனிடம் மதுரை செல்லும் வழி யாது என்று வினவுகின்றபோது இவன் இவர்களின் வருகைக்காக இரங்குகிறான். வேனில் காலத்தில் காரிகையை அழைத்துவருவது குறித்துக் கவலைப்படுகிறான். அப்போதுதான் பாலை என்ற நிலத்தின் இயல்பு தமிழுலகிற்கு காட்சிப்படுத்தப்படுகிறது.
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிமம் கொள்ளும்”
(காடுகாண்காதை 6466)
படிமம் என்ற காட்சி சார்பான உத்திமுறை தமிழுக்கு அறிமுகமான இடமும் இதுவே. இரங்கிப் பேசிய இவன் முன்று வழிகளைச் சுட்டுகிறான்.
முதலாவதாக இவன் அடையாளம் காட்டுவது கொடும்பாளுர், நெடுங்குளம் என்ற இரண்டு இடமாகும். இந்த இடத்திற்குச் சென்ற பிறகு மதுரை முன்று நிலையில் செல்லலாம் என்பது இவனது கருத்து.
“கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய
அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்”
(காடு காண் காதை, 71- 73)
என்ற இவ்வடிகளில் சூலம் போன்று முவழிகள் தோன்றும் என்று மாங்காட்டு மறையவன் கூறுகின்றார்.
முவழிகளில் முதல்வழி வலப்புற வழியாகும். இது சிறுமலை வழியாக மதுரைக்குப் போகும் பாதை. இரண்டாவது அழகர் மலை என்ற திருமாலிருஞ்சோலை வழியாக இடப்புறமாக மதுரைக்குச் செல்லும் வழி. இவை இரண்டிற்கும் இடையில் காடுகள் சூழந்த இடைவழி ஒன்றுண்டு. இதில் செல்வதும் நல்லதே. இதில் சென்றால் ஒரு அணங்கை எதிர் கொள்ளவேண்டும் என்று பல செய்திகளை மாங்காட்டு மறையவன் எடுத்துரைக்கிறான்.
வலப்புற வழியின் காட்சித்தன்மை
இவ்வழியில் ஓமை, வெண்கடம்பு, முங்கில் போன்ற நீரற்றுச் சுருங்கிக்கிடக்கும். நீர் இல்லாத காடு, எயினர் குடியிருப்பு முதலானவற்றை இவ்வழியில் காண இயலும். அடுத்துச் சிறுமலை தோன்றும். இம்மலைப் பழங்கள் அன்றும்,இன்றும் சிறப்பிற்குரிய பழங்களாகும்.
“வாழையும்,கமுகும், தாழ்குலைத் தெங்கும்
மாவும் பலாவும் சூழடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை”
(காடுகாண்காதை 8385)
என்ற இக்காட்சி இன்னமும் மெய்யாக உள்ளது. சிலப்பதிகார எச்ச மிச்சங்கள் அழிந்த இந்த காலச் சூழலில் அவர் காட்டிய இயற்கைக்காட்சிகள் இன்னம் மிச்சம் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. சிறுமலையின் வலப்புறமாகச் சென்றால் மதுரையை அடையலாம் என்ற இந்தக் குறிப்பு வரைபடக் காட்சிகலைக்குச் சான்று.
இடப்புற வழியின் காட்சித்தன்மை
இடப்புறவழி திருமாலிருஞ்சோலை வழியாகும். இவ்வழி மருத நிலம் சார்ந்த பல பகுதிகளை உடையது. இவ்வழியில் செல்லும்போது புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் முன்று பொய்கைகள் காணப்பெறும். இவை ஒவ்வொன்றில் முழ்கினால் ஒவ்வொரு பலன் கிட்டும். பின் சிலம்பாறு தோன்றும். இந்த ஆற்றைத் தொடர்ந்தால் இயக்கமாது தோன்றுவாள். அவளின் வினாக்களுக்கு பதில் இறுத்துப் பின் திருமாலிருஞ்சோலை அடையலாம். எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து திருமாலிடம் அடைக்கலம் பெறலாம் என்று இந்த வழி பற்றிய செய்திகள் அறிவிக்கப் பெறுகின்றன.
இவற்றில் முன்று குளங்கள் பெயரில் கூட இன்று இல்லை. சிலம்பாறு என்ற பெயர் அழகர்கோயில் தீர்த்தங்களில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. தற்காலத்தில் அழைக்கப் பெறும் நூபுர கங்கை என்ற தீர்த்தம் சிலம்பாறு என்று அழைக்கப்படுகிறது.
இவ்வாறு இவ்வழி இளங்கோவடிகள் சொன்ன இயற்கைக் காட்சிகள் பொருந்திய நிலையில் உள்ளது.
இடைவழி
குறிக்கத்தக்க எவ்வித அடையாளங்களும் இல்லாத காட்டுவழியாக இது அமைகின்றது. இவ்வழியில் கானுறை தெய்வம் ஒன்று எதிர்ப்படும் என்று இவ்வந்தணன் குறிப்பிடுகிறான். இவ்வழியிலேயே செல்ல முவரும் ஒருப்படுகின்றனர்.
இக்கானுறை தெய்வம் வழியிடையீடு செய்துக் கோவலனை வெருட்டியபோதும் அவன் கொற்றவை வழிபாட்டின் துணையால் அத்தெய்வத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுகிறான்.பின்னர் இவர்கள் ஒரு காளி கோயிலின் பக்கத்தில் இளைப்பாறுகின்றனர்.
இவளோ கொங்கச் செல்வி குடமலையாட்டி
தென்தமிழ்ப்பாவை, செய்தவக் கொழுந்து
ஒருமாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி
(வேட்டுவ வரி 4749)
என்ற இந்தப் புகழ்மொழிகளைச் சாலினி உரைக்கின்றாள். இதில் மணி என்ற சொல் பின்னால் நிகழ உள்ள சிலம்பின் மணிகள் பற்றிய குறிப்பு என்பது நினைவில் கொள்ளவேண்டும். குறிப்பாக இங்குக் கண்ணகியை மட்டும் வாழ்த்துவதால் அது உலகிலிருந்து எழக்கூடிய திருமாமணி என்பதால் மற்ற இருவரும் இறப்பை நாடப் போகின்றனர் என்பதும் அவர்களை இத்தெய்வம் ஏறிய பாரட்டவில்லை என்பதும் எண்ணிப் பார்க்கத்தக்கது.
ஊர்காண்காதை
காடு, நகரம், நாடு, உலகம் என்று தன் காட்சிக்கண்களை விரித்துக் கொண்டே போகின்றார் இளங்கோவடிகள். நாட்டையும், காட்டையும் காட்டியவர் இப்போது ஊராக மதுரை மாநகரத்தைக் காட்ட ஊர்காண் காதையைச் செய்கிறார்.
இதில் கோவலன் கண்களில் புகுந்து மதுரைக் காட்சிகளைப் பதியவைக்கிறார். மதுரை மாநகர கோட்டைக்குள் நுழைந்து வணிக வீதிகளைப் பார்வையிடுகிறான் கோவலன்.
கடிமதில் வாயில் காவலில் சிறந்த
அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்காங்கு
ஆயிரம் கண்ணோன் அருங்கலச் செப்பு
வாய்திறந்து அன்ன மதில்
( ஊர்காண்காதை, 6668 )
என்ற இந்த அடிகளில் மதுரை மாநகரின் காப்புகை மிக்க கடிமதில் எடுத்துக்காட்டப் பெறுகின்றது. அருங்கலச் செப்பு என்ற இந்தச் சொல்லாக்கம் அருமையான அணிகலன்களை வைக்கும் பாதுகாப்பு அறை என்ற பொருளில் கையாளப் பெற்றுள்ளது. கலை வண்ணம் காட்சி வண்ணம் சிறந்த இந்தத் தொடர் பின்னாளில் நூல் பெயராக வளர்ந்தது என்பதும் இளங்கோவிற்குப் பெருமை அளிக்கத்தக்க கூறாகவே உள்ளது.
இதன்பின் மகளிர் விளையாட்டு, பருவ வருணனை போன்ற காப்பியப் பண்புகளுக்கு இளங்கோவடிகள் இடம் தருகின்றார். மதுரை நகரின் பருவ வருணனை இங்கு இடம் பெற்றுச் சிறக்கிறது. இதில் காட்டப் பெறும் வருணனைகளும் காட்சித் திறம் சார்ந்தவை என்றாலும் கட்டுரையின் விரிவஞ்சி இவை சுட்டுதலாக மட்டும் அமைகின்றன.
இதன்பின் அரசர், செல்வர் பயிலும் காமக்கிழத்தியர் பகுதிகளுக்குச் சென்றான் கோவலன். தொடர்ந்து எண்ணெண் கலைஞர்கள் வீதி, அங்காடி வீதி, நவரத்தின வீதி, பொன்மிகு கடைவீதி, துணிக்கடைவீதி, கூல வணிக வீதி முதலான பல வீதிகளைப் பார்வையிடுகிறான்.
எண்ணெண் கலைஞர்கள் என்று குறிப்பிடப்படுவோர் ஆயகலைகள் அறுபத்துநான்கினையும் கற்றுத் தேர்ந்த கூத்தியர்கள் வாழும் பகுதியாகும். முடியரசு ஒடுங்கும் கடிமண வாழ்க்கை என்று இளங்கோவால் குறிக்கப்படுகிறது. கூத்தியர் வீட்டுக்கு வந்திருப்பவர் யார் என்று யாராலும் அறியப்பட முடியா அளவிற்குக் காப்பு மிகுந்த நிலையில் இக்கலைஞர்கள் வீடுகள் அமைக்கப் பெற்றிருந்தன.
சிலப்பதிகார காலத்தில் பல வகைகள் சார்ந்த தங்கம் இருந்துள்ளது. “சாதருபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் ” என்ற நான்குவகையின அவற்றில் குறிக்கத்தக்கனவாகும்.
அதுபோல் துணியில் கலைநயம் மிக்க படைப்புகள் அக்காலத்தில் இருந்துள்ளன. “நூலினும், மயிரினும், நுழைநூல் பட்டினும் பால்வகை தெரியாது பன்னூறு அடுக்கத்து நறுமடி சிறந்த அறுவை வீதி” என்று துணிக்கடை வீதியின் சிறப்பு குறிக்கப்படுகிறது. நூல், மயிரிழை, பட்டு முதலானவற்றில் இழையடுக்கு தெரியாத வண்ணம் துணிகள் நெய்யப்பட்டு அக்காலத்தில் இருந்துள்ளன. இவை வகை தெரியாமல் பல நூறாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணி வீதியைக் கோவலன் கண்டான்.
இவ்வாறு கடைகள், கலைகள் பற்றிய காட்சி வருணனை காட்சியியலின் பாற்பட்டதே ஆகும்.
காட்சிக் காதையும் காட்சிச்சிறப்பும்
காட்சிக்காதையில் முக்கியத்துவம் பெறுவது கண்ணகி வானுலகு சென்ற காட்சியேயாகும். மலைவளம் காணச் சென்ற செங்குட்டுவன் மலைவாழ் குறவர் இனமக்கள் தாங்கள் கண்டதாகக் கூறிய காட்சிகளைக் கேட்டறிகிறான்.
“ஏழ்பிறப்படியேம் வாழ்க நின் கொற்றம்
கான வேங்கைக் கீழோர் காரிகை
தான்முலை இழந்து தனித்துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானகம் போற்ற வானகம் பெற்றனள்
எந்நாட்டவர்கொல்? யார்மகள் கொல்லோ?
நின்னாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம்
பன்னூறு ஆயிரத் தாண்டு வாழியர் என
மண்களி நெடுவேல் மன்னவன் கண்டு
கண்களி மயக்கத்துக் காதலோடிருந்த”
( காட்சிக்காதை, 5865)
என்பது குறவர்கள் கண்ட காட்சிச் செய்தியாகும். இச்செய்தியில் மார்பகம் இழந்து, தனித்துயர் எய்திய பெண் ஒருத்தி வானகம் புக்கதை அவர்கள் கண்டுள்ளனர். இந்தக் காட்சி புதுமை செறிந்தது. இக்காட்சியின் வியப்பே கண்ணகிக்குக் கோயில் காணச் செய்த விதையாகும்.
பின்பு சாத்தனார் ” கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்றெனக் காட்டி இறைக்குரைப்பனள் போல் தன்னாட்டாங்கண் தனிமையில் செல்லாள் நின்னாட்டு அகவையின் அடைந்தனள் நங்கை” என்று துயருற்ற கண்ணகி அவள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லாது உன்நாட்டிற்கு வந்துள்ளாள் என்று இக்காட்சியின் நிகழ்வுகளைக் காரணகாரியத்துடன் கூறி முடிக்கிறார்.
இதுகேட்ட மன்னன் அரசவாழ்வின் நிலையாத்தன்மையை வெளிப்படுத்துகிறான். “மன்பதை காக்கும் நன்குடிப்பிறத்தல் துன்பமல்லது தொழுதகவில்லென” உணருகிறான். அல்லது இளங்கோவடிகள் உணர்த்துகிறார். இதன் தொடர்வாக சேரமாதேவியிடம் “உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும், செயிருடன் வந்த இச்சேயிழை தன்னினும் நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார்?’ எனச் சேரன் வினவுகின்றான்.
சேரமாதேவி “காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து அத்திறம் நிற்கநம் அகனாடு அடைந்தஇப் பத்தினித் தெய்வத்தைப பரசல் வேண்டுமென” தன் விருப்பத்தை எடுத்துரைக்கிறாள்.
இந்தக் காட்சியே இமயம்வரை சென்று சேரனை வெற்றி பெற வைக்கின்றது. கண்ணகியை இறைவியாகக் காண்கின்றது. உலகம் போற்ற உயர்த்துகின்றது. “எம்நாட்டு ஆங்கண் இமயவரம்பனின் நன்னாள் செய்த நாளணி வேள்வியில் வந்தீக ” என்று மன்னர்கள் இறைஞ்ச “தந்தேன் வரமென்று ” கண்ணகி தெய்வவாக்கு அருளுகிறாள்.
இவ்வகையில் காட்சிக்கலையின் சிறப்பு தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம் துலங்குவதாகச் சிலப்பதிகாரம் படைக்கப் பெற்றுள்ளது.
முடிவுகள்
1. காட்சிக்கலை என்பது நுண்ணிய படைப்பாற்றல் கலை சார்ந்தது.தற்போது இக்கலை ஆவணப்படுத்தப் பெற்று பதிப்புரிமையை உலக அளவில் பெற்று உயர்ந்துள்ளது.
2. இவ்வாறு இக்கலை வளர்வதற்கு பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே காட்சிக்கலையைச் சிலப்பதிகார ஆசான் இளங்கோவடிகள் நேர்த்தியுடன் படைத்துள்ளார்.
3. சிலப்பதிகாரம் என்பதே அழகாகச் செய்யப் பெற்ற இரு இணைச் சிலம்புகளின் குழப்பத்தால் ஏற்பட்டது. உள்ளிருக்கும் பொருளை நுண்ணிதின் வேறுபடுத்தி கலைப் பொருள்களின் காட்சி வடிவு மிகப் பெரும் சாட்சியாக ஏற்கப்பட்டிருக்கிறது.
4. மாதவியின் மடல்கள் காட்சி வடிவம் சார்ந்தவை. அவற்றில் தனித்த மாதவிகோவலன் இருவருக்கான காட்சிப் பொருள்கள் இருந்துள்ளன. இவை அடையாளக் குறிகள் ஆகும்.
5. இளங்கோவடிகள் காட்சியளவையை ஊர், காடு, நாடு, உலகு என்று வளர்த்தெடுத்துள்ளார்.இவற்றிற்கு ஊர்காண்காதை, காடுகாண் காதை, நாடுகாண்காதை, காட்சிக் காதை போன்ற சான்றுகளாகும்.
6. நாடுகாண் காதை வருத்தக்காட்சியாக புனையப் பெற்றுள்ளது. கோவலன், கண்ணகி, கவுந்தி முவரும் புகார் திரும்பப்போவதில்லை என்ற சோகம் இளங்கோவடிகளால் உணரப்பெற்றிருக்கிறது. ஆனால் பாத்திரங்கள் உணர்ந்து கொள்ளாமல் விதிப்படி தன் பயணத்தைத் தொடருகின்றனர். வருத்தத்தோடு தன் காட்சிகளை எடுத்துக் கொண்டு இளங்கோவடிகளும் பின்செல்லுகின்றார்.
7. காடுகாண் காதையில் முவகை வழிகள் விளக்கப்படுகின்றன. அவற்றில் சுட்டப்படுகின்றன இயற்கை இன்னமும் அழியாமல் இருப்பது கோவலன் உள்ளிட்ட முவர் நடந்த பாதைக்குக் காட்சியாக உள்ளது.
8. ஊர்காண்காதையில் மதுரை என்ற ஊரின் கலைவடிவக் காட்சிகள் விளக்கப்படுகின்றன. கடைவீதி வருணனை காட்சியியலின் முன்னுரையாகின்றது.
9. காட்சிக்காதையில் குறவர்கள் கண்ட காட்சி கண்ணகியை உயர்த்துகிறது. இமயத்தை எட்டுகிறது. இலங்கைக்குச் செல்ல உறுதியாகின்றது.
10. காட்சிகளின் வல்லமை நுணுக்கமாகப் பற்பல இடங்களில் சிலப்பதிகாரத்தில் கையாளப் பெற்றுள்ள போக்கு சிலப்பதிகாரத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

வீட்டை விட்டுப் பிரியும் கோவலனும் கண்ணகியும்

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்
தமிழாய்வுத்துறைத் தலைவர்
மன்னர் துரைசிங்கம் நினைவு கல்லூரி
சிவகங்கை
மனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்குப் பலப்பல பதில்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். வீடு என்பது ஒரு தனிமனிதனின் விடுதலை மிக்க இடமாகும். ஒரு மனிதன் தனக்கான வசதிகளை தானெ தேடிச் சேர்த்து அவற்றை அனுபவிக்கும் நிம்மதியான இடம். இந்த நிம்மதியான வீட்டை விட்டு அம்மனிதன் துரத்தப்பட்டால், அல்லது இடம் மாற்றப்பட்டால், என்ன என்ன கவலைகளை அனுபவிக்க வேண்டி இருக்கிறது. வீட்டினை மாற்றினால் அல்லது வீட்டினைவிட்டுப் பிரிந்தால் ஒரு தனிமனிதனின் நிலைப்புத் தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. அதில் இருந்து அவன் மீண்டு அவன் இன்னொரு வீட்டினைக் கட்டியாக வேண்டும். பழைய வீட்டின் மாதிரியை உள்வாங்கி இன்னும் பல வகை வசதிகளை உடையதாக ஒரு பெரிய வீட்டை அவன் உருவாக்கி அங்கு வாழப் பழகவேண்டும்.
சிலப்பதிகாரத்தில் கோவலனும் கண்ணகியும் தங்கி வாழ்ந்த வீட்டினைவிட்டுப் பிரிய வேண்டிய காலம் வந்தது. பூம்புகார் நகரத்தில இருந்து அவர்கள் மதுரையை நோக்கிப் பயணப்படப் போகிறார்கள். அந்தச் சூழலை இளங்கோவடிகள் பண்பாடு சார்ந்து படைத்தளிக்கிறார்.
வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
காரிருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப
என்று கோவலன் பிரிந்த காலத்தை இளங்கோவடிகள் சுட்டுகின்றார். இந்தப் பாடல் பகுதியில் ஞாயிறு தோன்றாத வைகறைப் பொழுதில் கோவலனும் கண்ணகியும் புகார் நகரத்தை விட்டுக் கிளம்புகின்றனர். வானத்தில் விண்மீன்களும், நிலவும் மறையத் தொடங்கிவிட்டன. அந்த அடர் இரவுப் பொழுதில் அவர்கள் மதுரையை நோக்கி ஊழ்வினை துரத்தச் சென்றனர் என்று பாடுகிறார் இளங்கோவடிகள்.
இதுவரை நிலையாக நினைத்து வந்த மாளிகை வாழ்க்கை இனி இல்லாமல் போகப் போகிறது. நாளை எங்கு எப்படி விடியும் எங்கு தங்குவது என்பது எதுவும் தெரியாமல் இவர்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
கோவலனும் கண்ணகியும் மாளிகையை விட்டுக் கிளம்புகையில் கையில் எப்பொருளையும் எடுத்துச் செல்ல எண்ணவில்லை. இக்காலத்தைப்போல கிளம்புதற்கு முன்னால் ஊர் பயணத்திற்குத் தேவைப்படுவனவற்றைத் தொகுத்து எடுத்துச் செல்ல நேரமும் அவர்களுக்கு இல்லை. மனமும் இல்லை. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்த நிலையை இளங்கோவடிகள்
‘‘ நீணெடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு ’’
என்று குறிப்பிடுகின்றார். நீண்ட நெடிய வாயிலை இருவரும் கடக்கின்றனர். நெடுங்கடை கழிந்தாங்கு என்ற குறிப்பு அக்கால கட்டிடக் கலை சார்ந்த குறிப்பு ஆகும். அதாவது நெடிய பத்தியை உடைய வீட்டின் தலைவாசல் நெடிய கதவுகளுடன் இருக்கும் என்ற குறிப்பு இங்கு கிடைக்கிறது. இந்தக் குறிப்பு அப்படியே நகரத்தார் வீடுகளுக்குப் பொருந்துகிற குறிப்பு ஆகும். நெடியவாயில் கடக்கும் அவர்கள் சாவி கொண்டு தன் வீட்டைப் பூட்டியதாக குறிப்பு இல்லை. பூட்டினால் சாவியை யாரிடம் கொடுப்பது. கொண்டு செல்லவும் முடியாத அளவிற்கு அச்சாவி பெரியது. இதனால் பூட்டாமலே அவர்கள் சென்றதாக கருத இயலும். வீட்டைப் பூட்டாமல் சென்றதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அதாவது திரும்ப வருவோம் என்ற நம்பிக்கை இருந்தால்தானே அந்த வீட்டைப் பாதுகாக்க வேண்டும். திரும்புவதில்லை என்ற நிலையில்தான் இவர்கள் கிளம்புகிறார்கள்.
வீட்டினை விட்டு வெளியே வந்த பின் உடனே அவர்கள் மதுரைப் பயணத்தைத் தொடங்கிவிடவில்லை. பாம்பணையில் துயிலும் மணிவண்ணன் கோயில், அரசமரத்தின் அருகில் இருக்கும் புத்த தேவரின் அருளுரைகளை விரித்துரைக்கும் ஏழு இந்திர விகாரங்கள், அருகப் பெருமான் கோயில், அருகப் பெருமானின் உரைகளை எடுத்துரைக்கும் சிலாவட்டம் என்னும் சந்திரகாந்தக் கல்லால் ஆன மேடை ஆகியனவற்றைக் கண்டு வணங்கிச் செல்கின்றனர்.
இந்தச்சூழலை எண்ணிப் பார்க்கையில் கோவலன் எவ்வளவு தூரம் தான் பிறந்த நகரத்தினை நேசித்து இருக்கிறான் என்பது தெரியவரும். ஊருக்குப் போகிறோம். திரும்பித் தன் ஊருக்கு மீண்டும் வருவோம் என்ற உறுதி இல்லாத சூழலில் கோவலன் தன் வீட்டை விட்டு வெளியேறுகையில் தன் ஊர்த் தெய்வங்களை வணங்கி விடைபெறும் முறைமை இக்காலத்திலும் மக்கள் ஏற்றுச் செய்து கொண்டிருக்கும் முறைமை, செய்யவேண்டிய முறைமை என்பது குறிக்கத்தக்கது.
கோவலன் பல பாராட்டுகளைப் பெற்றுத் தன் பிறந்த நகரத்தை விட்டுச் செல்லவில்லை. அவனின் விதி அவனிடம் விளையாடிய காரணத்தினால் அவன் ஊரைவிட்டுச் செல்ல வேண்டியவனானான். இந்த நிலையில் ஊராருக்குச் சொல்லாமல், தன் உறவினர்களுக்குச் சொல்லாமல், தன் பெற்றோருக்குச் சொல்லாமல் பிரியும் இந்தப் பிரிவு சிலப்பதிகாரத்தினைப் படிப்பவர்கள் இடையில் பெருத்த வருத்தத்தைத் தந்து விடுகின்றது.
ஒரு மனிதனின் இடப் பெயர்வு என்பது அவனின் நிலைப்பாட்டை, அவன் சார்ந்த குடும்ப நிலைப்பாட்டை சற்றே இடையீடு செய்வது என்பதற்கு இதைவிட சிறந்த சான்று இலக்கியத்தில் இருக்க முடியாது.
சங்க காலத்தில் தலைவனும் தலைவியும் பிரிவதற்கு நண்பகல் சிறுபொழுதாக குறிக்கப் பெற்றிருந்தாலும் இளங்கோவடிகள் ஏன் காலைப் பொழுதைப் பிரிவிற்காக இங்கு எடுத்துக் கொண்டார் என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. பகல் பொழுதில் பிரியும் பிரிவு இடையீடு பட்டு விடும் என்று எண்ணிய கோவலன் காலையில் கிளம்பியிருக்கலாம் என்றாலும், கோவலனின் பிரிவு என்பது ஊடல் சார்ந்த பிரிவு. பரத்தை ஒருத்தியின் இணைப்பால் ஏற்பட்ட இழப்பு என்பதால் ஊடலுக்கான சிறுபொழுதான வைகறையைத் தேர்ந்து எடுத்திருக்கலாம் என்று முடியலாம். எவ்வாறு ஆனாலும் சிற்சில் வரிகளில இலக்கிய மாந்தரின் இதயத்தை எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கவராக இளங்கோ விளங்குகிறார் என்பதற்கு மேற்காட்டிய பகுதி சான்றாகிறது.

மதுரையில் ஆடிய குரவைக்கூத்து

முனைவர் மு. பழனியப்பன்


தமிழாய்வுத் துறைத்தலைவர்
மன்னர் துரைசிஙகம்அரசு கலைக்கல்லூரி
சிவகங்கை
;கண்ணகி கணவன் பின் செல்லும் சாதாரண பெண்ணாக மதுரைக்குள் நுழைகிறாள். மன்னனை எதிர்த்து வழக்காடும்  போர்க்குணம் உடையவளாக ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு மாற்றம் பெற்றுவிடுகிறாள்.  இந்த மாற்றத்திற்குக் காரணம் எந்நிகழ்வுகளாக இருக்கமுடியும் என்று எண்ணிப் பார்க்கவேண்டிஇருக்கிறது. வேற்றிடத்திலிருந்து மதுரைக்கு வந்துள்ள பெண் கண்ணகி. அவள் கோவலனைப்போல் மதுரையைச் சுற்றிப் பார்க்கவம் இல்லை. ஊரார் நிலை பற்றி அறிந்தவளும் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் நாடு அறிந்து நகர் அறிந்து, அரண்மனை வாயில் சென்று அவள் நியாயம் கேட்கத் துணிந்த நிலைக்கு ஏதாவதொரு காரணம் இருந்;திருக்கவேண்டும் என்பது உறுதி. பேரிலக்கியப் படைப்பாளியான இளங்கோவடிகள் அதற்கான சூழல்களைப் புனைந்தளித்துள்ளார்.
அடைக்கலப்படுத்தப் பட்ட கண்ணகி, கணவனான கோவலன் மதுரை நகர் நோக்கிச் சென்றதும் ஆய்ச்சியர் பெண்களுடன் கலந்து உறவாடுகிறாள். இந்நேரத்தில் பால் உறையாமல் இருந்தல், பசுவின் கண்களில் கண்ணீர் சுரத்தல் போன்ற தீ நிமித்தங்களைக் காண்கிறாள்   மாதரி அவள் தன் மகள் ஐயை அழைத்துக் கொண்டு, அந்நிமித்தங்களின் தீமை பெரிதும் சாராமல் இருக்க ஆய்ச்சியர் பெண்களைக் குரவைக் கூத்து ஆடச் செய்கிறாள். இப்பெண்கள் ஆடும் குரவை ஆட்டத்தைக் கண்ணகி கண்டுகளிக்கிறாள்.
மனமயங்காதே மண்ணின் மதர்க்கணிணாகிய கண்ணகியும்
தான் காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்
தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வல்
நெடுங்கண்  பிஞ்ஞையோ டாடிய குரவை ஆடுதும் (  ஆய்ச்சியர் குரவை 10-13)
என்ற பாடலடிகளில் கண்ணகி இக்குரவைக் கூத்தினைக் கண்டாள் என்று குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள். ஒரு செயலை நேரடியாகப் பிறருக்கு மொழிதல் என்பது ஏற்படுத்தும் தாக்கத்தைவிட நேரடியாக காணுதல் என்னும் நாடகப் பாங்கு பெருத்த விளைவை காண்பவர் நெஞ்சில் ஏற்படுத்தும். குரவைக் கூத்து என்னும் காட்சி விளைவால் கண்ணகி ஈர்க்கப்பட்டு அதன்வழி நியாயத்திற்குப் போராடும் குணத்தினைப் பெற்றவளாக இளங்கோவடிகள் கண்ணகியை வடித்துள்ளார்.
கண்ணகி  ஒருத்தியே ஆயர் அரங்கில் காண்கிற நோக்கர். அவள் இதுவரை இப்படி ஓர் ஆட்டத்தைக் கண்டதில்லை. பொதுமக்கள் அரங்கில் பொதுமக்கள் ஆடும் இக்கூத்து அவளுக்குப் புதிது. மற்ற பங்கேற்பளார்களான ஆயர் பெண்கள் இக்கூத்தினைப் பல முறை ஆடியுள்ளனர். கண்டும் உள்ளனர். இவர்களுக்கு ஏற்படாத எழுச்சி கண்ணகியின் மனதில் ஏற்பட்டிருக்கிறது.
அரக்கர்களைக் கண்ணன் அழித்த நிகழ்வுகளைப் பாடலாகவும், ஆடலாகவும் ஆயர் குல மகளிர் குரவை ஆடினர். அநியாயத்தை அழிக்கும் ஒற்றை மனிதனாக இங்குக் கண்ணன் காட்சிப்படுத்தப்;படுகிறான்.
1.    கன்றினைக் குறுந்தடியாகக் கொண்டு, விளாங்கனியை உதிர்த்த மாயவன்தன்  நிகழ்ச்சி,
2. பாம்பினைக் கயிறாகக் கொண்டு கடல் கடைந்த மாயவன்தன் நிகழ்ச்சி,
3. குருந்த மரமாக நின்ற அரக்கனைக் கொன்ற நிகழ்ச்சி,
போன்ற பல நிகழ்ச்சிகள்  இசைநாடகமாக கண்ணகியின் கண்களில் படிகின்றன. நியாயத்தின் வலிமையையும், நியாயத்திற்காகப் போராடவேண்டிய சூழலையும் இவை கண்ணகிக்குத் தந்தன.
ஆயர் பெண்களால் அரச மரபினோர் மூவரும் கண்ணனாகவே கருதும் ஓர் ஆட்டப்பகுதி இதன் பின்னர் நிகழ்த்தப்படுகிறது. பாண்டியரும் சோழரும் சேரரும் கண்ணனின் சாயலர்,  மரபினர்; என்று குறிப்பிடும் இப்பகுதி கண்ணகி மனதில் கண்ணனைப்போல தமிழகத்து அரசர்கள் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்ற  நிலையை ஏற்படுத்துகின்றது.
தேவர்கோன் பூண் ஆரம் பூண்டான் செழும் துவரைக்
கோகுலம்  மேய்ததுக் குருத்து ஒசித்தான் என்பரால்
                                                     ( ஆய்ச்சியர் குரவை 29)
மன்னன் வளவன் மதில்புகார் வாழ்வேந்தன்
பொன்அம் திகிரிப் பொருபடையான் என்பரால்
                             (ஆய்ச்சியர் குரவை 30)
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கல்நவில் கோல் ஓச்சிக் கடல் கடைந்தான் என்பரால்
(ஆய்ச்சியர் குரவை, 31)

என்ற இந்தப் பகுதிகள் நியாயத்தின் காப்பளர்களாகக் கண்ணனைப் போன்று மூவேந்தர்களும் விளங்கினர் என்பதைச் சுட்டுகின்றது. இதன் காரணமாக  மூவேந்தர்களுள் ஒருவர் தவறிழைத்தாலும் அவரின் நெறிபிறழ்வைச் சுட்டிக்காட்டவேண்டிய நிலை கண்ணகியின் உள்மனதில் பதிவாகின்றது.
இதனைத் தொடர்ந்து கண்ணனின் வரலாறு நாடகக் காட்சிகளாக விரிகின்றது.
அமுதம் கடைவதற்காக பாற்கடலைக் கடைந்த உன் கைகள் பெருமை உடையன என்றாலும்; யசோதையால் சிறு கயிற்றால் கட்டப்படும் அளவிற்கு அவை சிறியதும் ஆகும்.
உலகினையே உண்ட பெருமை உடைய உன்வாய், வெண்ணையைத் திருடி உண்ணும் எளிமையும் உடையது ஆகும். உலகு அளந்த உன் திருவடிகள் பாண்டவர்க்காக நியாயம் கேட்டு மண்ணில் தூது சென்;ற எளிமையை உடையன
என்று கண்ணனின் பெருமையைக் காட்டி அதே நேரத்தில் அவனின்; எளிமையை விளக்கும் இந்த பெரியது, சிறியது என்ற ஏற்ற இறக்கம் பெரியதும், சிறியதே எளியதே என்ற எண்ணத்தைக் கண்ணகியின் மனதிற்குள் கொண்டு வந்து சேர்க்கிறது. இதன் காரணமாகவே பெரிய இடத்தில் இருக்கும் மன்னனைச் சிறிய இடத்தில் இருந்துப் புறப்பட்ட கண்ணகி நேருக்கு நேராகச் சந்திக்க முடிகின்றது.
இவ்வாடலினைத் தொடர்ந்து கண்டு கொண்டிருக்கும் கண்ணகி இன்னமும் தன் கண், காது, நாக்கு போன்றவற்றால் மிகப் பெரிய மாற்றத்தை உண்டு செய்ய இயலும் என்ற அறிவைப் பெறுகின்றாள்.
கேளாத செவி என்ன செவியே,
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணோ,
நாராயணா என்னா நா என்ன நாவே
என்ற இந்த அடிகள் கண்களின் காதுகளின் நாக்கின் வலிமையைக் கண்ணகிக்கு எடுத்துரைப்பன. இவ்வகையில் நியாயத்திற்காக போராடுகின்ற மனநிலை, உடல்நிலை போன்றவற்றைக் கண்ணகி இக்குரவையாடல் வழியாக பெறுவகின்றாள் .
இதனைத் தொடர்ந்து ஆயர்பாடிக்குக் கோவலனின் இறப்புச் செய்தி வந்து சேருகின்றது. இச்செய்தி கேட்டுக் கண்ணகி கலங்குகின்றாள். நான் அழுது கைம்மை நோன்;பு நோற்பேனோ என்று கதறிய கண்ணகி – சூரியனிடம் நியாயம் கேட்கிறாள்.
‘‘காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்
கள்வனோ அல்லன்  கருங்கயல் மாதராய்|| ( துன்பமாலை 52-53)
என்ற சூரியனின் உரை கண்ணகிக்குப் போராடத் தூண்டும் முதல் அடி ஆகும். இதிலிருந்து நியாயத்தை நிலைநிறுத்தத்  தென்னவன் சபைக்குச் செல்லுகிறாள் கண்ணகி.
இவ்வாறு சிலப்பதிகாரத்தில் நிகழ்த்தப்பெற்ற குரவைக்கூத்தின் நேரடிக் காட்சி விளக்க ஆட்டத்தன்மை கண்ணகியின் மனதிற்குள் தனி மனிதனான தன் கணவனுக்கு இழைக்கப் பெற்ற கொடுமைக்கு எதிராக போராடக் களம் அமைத்துக்கொடுத்துள்ளது. கண்ணகியைப் போராடுபவளாக ஆக்கியதில் இக்குரவைக்கூத்திற்கும், இதனை ஆடிய ஆயர் குலப் பெண்களுக்கும் பங்கு உண்டு.

உடனே ஒரு கோபம் வெளிப்படுவதில்லை. பல சூழல்களின் வரியலாகவே அக்கோபம் வெளிப்படுத்தப்படும். இதன் சான்றாகவே கண்ணகியின் செயல் அமைந்துள்ளது. இளங்கோவடிகள் இவ்வாறு கண்ணகியைப் போராடும் பெண்ணாக ஆக்கிக் கொள்ள குரவையாட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்பதே இக்காப்பியத்தின் வலிமையாகும்.
சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் அறங்கள்
முனைவர் மு. பழனியப்பன்
தமிழாய்வுத் துறைத்தலைவர்
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
சிவகங்கை

இலக்கியங்கள் மனித வாழ்க்கையைப் பிரதிபலிப்பன. மனிதர்களின் வாழ்க்கை இலக்கியங்களில் பதிவுசெய்யப் பெறுகின்றது. இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையே ஆன இக்கொண்டும் கொடுக்கும் உறவானது படைப்பாளிகளால் மேம்பாடடைகின்றது. படிக்கும் வாசகரால் பயன் கொள்ளத்தாகின்றது. சிலப்பதிகாரம் முதன் முதலாக எழுந்தக் காப்பியம். இக்காப்பிய இலக்கியத்தில் வாழ்க்கையைப் பற்றியும், வாழ்க்கை அறங்கள் பற்றியும் சுவைபட காட்சி அடிப்படையில் படைக்கப்பெற்றுள்ளன. கண்ணகி, கோவலன் போன்ற தலைமைப் பாத்திரங்களின் வழியாகவும், ஐயை, மாதரி போன்ற துணைப்பாத்திரங்கள் வழியாகவும் பற்பல வாழ்வியல் அறங்கள் எடுத்துக்காட்டப் பெறுகின்றன. இவை தவிர துறவோர்கள், அறவாணர்கள் அறிவுறுத்தும் அறங்கள் வழியாகவும் வாழ்வியல் அறங்கள் வெளிப்படுத்தப்பெற்றுள்ளன. இவற்றைத் தொகுத்தளிப்பது இக்கட்டுரையின் செல்முறை ஆகின்றது.
வாழ்வியல் அறம்
வாழ்க்கையை அடிப்படையில் இல்லறம், துறவறம் என்று இருவகைப்படுத்திக் கொள்ளலாம். அன்பும் அறனும் உடையது இல்வாழ்க்கை. அதனால் பண்பும் பயனும் பெறத்தக்கதாக உள்ளது. துறவு வாழ்க்கை என்பது பற்றற்றான் பற்றினைப் பற்ற அனைத்துப் பற்றுகளையும் விட்டுவிடுவது ஆகும். இல்வாழ்க்கை சிறந்ததா, துறவு வாழ்க்கை சிறந்ததா என்று அறிவதைவிட அவரவர் எடுத்துக்கொண்ட வாழ்க்கை எவ்வாறு சிறப்புடன் அமைத்துக்கொள்வது, அவ்வாழ்க்கையில் எப்படி அறங்களைக் கடைபிடிப்பது என்று காண்பதே முன்னேற்றமுடைய பாதையாகும். அம்முன்னேற்ற மிக்க பாதையைச் சிலப்பதிகாரத்தில் வடிவமைத்துக் காட்டுகிறார் இளங்கோவடிகள்.

கண்ணகி சுட்டும் வாழ்வியல் அறம்
கண்ணகி சிலம்பின் கதைத் தலைவி. கதைத்தலைவியான அவள் இன்பங்களைவிடவும் துன்பங்களையே அதிகமாகப் பெறுகிறாள். அந்நிலையிலும் தன்னிலை மாறாமல் பத்தினித் தெய்வமாக உயருகிறாள். கணவன் கோவலன் தன்னைவிட்டுப் பிரிந்துவிட்டான் என்பதற்காகக் கலங்காமல், தன் வாழ்வை இயல்பாக அவள் நடத்துகிறாள்.
அவ்வாழ்வினைப் பற்றிக் கோவலன் அறியமுற்பட்டபோது தனித்து வாழ்ந்ததால் தான் பட்ட துயரங்களை அவள் எடுத்துரைக்கிறாள்.
~~அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை|| ( சிலப்பதிகாரம், கொலைக்களக்காதை, 71-73)
இந்தப் பாடலில் அமைந்துள்ள இந்நான்கு அறங்களைத் தன்னால் செய்ய இயலவில்லை என்று கண்ணகி கோவலன் பிரிந்த காலத்தில் வருத்தப்பட்டுள்ளாள்.

அறம் செய்வோர்க்கு உதவுதல், அந்தண மரபினரைப் போற்றுதல், துறவிகளை எதிர்கொண்டு அவர்களுக்கு வேண்டுவன செய்தல், விருந்தினரைப் பாதுகாத்தல் ஆகிய அறங்களைக் கண்ணகி இழந்தாளாம். தனித்திருக்கிற இல்லறப் பெண் இந்த அறங்களைச் சிலப்பதிகாரக் காலத்தில் செய்ய இயலாது என்பது கருதத்தக்கது. கணவனும் மனைவியும் இணைந்து இல்லறம் பேணுவது என்பதே சிறப்பு. தனித்து உறைவது என்பது சிறப்பல்ல என்ற அடிப்படை இல்லற அறம் இங்கு காட்சிகளின் கோர்வையால் உருவாக்கப்பெற்றுள்ளது.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (திருக்குறள். 41)
என்று திருக்குறள் காட்டும் வாழ்வியல் இலக்கணத்திற்குச் சிலப்பதிகாரத்தின் மேல் காட்சி இலக்கியமாக அமைந்திருக்கின்றது. இக்குறளில் காட்டப்படும் மூவர் யாரென்று வள்ளுவர் அடுத்த குறளில் அமைத்துக்காட்டுகின்றார். துறந்தார், துவ்வாதவர், இறந்தவர் என்ற மூவருக்கும் இல்வாழ்வான் உதவவேண்டும் என்பது வள்ளுவ நெறி. கண்ணகியும் அந்நெறிப்படியே துறவோர்க்குத் தன்னால் பணிகள் செய்ய இயலவில்லை என்று வருந்தியுள்ளாள். வறுமையால் வாடியவர்களுக்கும் அதாவது அறம் வேண்டுவோர்க்கும் ஆவன செய்ய இயலவில்லை என்று வருந்தியுள்ளாள். மேலும் பசியால் வாடியவர்கள் இறந்தவர்கள் எனப்படுவர். அவர்களை விருந்தினர் என்று கண்ணகி கருதியுள்ளாள். விருந்தினர்களுக்கும் யாதும் செய்ய இயலவில்லை என்பது இங்குக் கண்ணகியின் வருத்தம்.
இப்பாடலடிகளைத் n;தாடர்ந்து
~~நும்
பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள்
மன்பெருஞ்சிறப்பின் மாநிதிக் கிழவன்
முந்தை நில்லா முனிவிகந்தனனா
அற்புளஞ் சிறந்தாங்கு அருண்மொழிய அளைஇ
எற்பாரட்ட யானாகத் தொளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாயல் முறவற்கவர் உள்ளகம் வருந்த||( சிலப்பதிகாரம் கொலைக்களக்காதை, 74-80)
என்று இல்லற வாழ்வின் சிறப்பினை எடுத்துரைக்கிறாள் கண்ணகி.
கண்ணகி தனியே இருக்கிறாள் என்பதை அறிந்த கோவலனின் தாயாரும், தந்தையும் அவளைக் காண அவ்வப்போது வருகின்றனர். அவ்வாறு வரும்போது கண்ணகி தன் கணவன் பிரிந்ததை மறைப்பதற்காக அவர்கள் முன் செல்லாமல் மறைந்து ஒழுகுகிறாள். அவ்வாறு அவள் மறைந்து ஒழுகுவதைக் கண்ட அப்பெரியோர்கள் கண்ணகியின் பொறுமையைப் பாராட்டுகின்றனர். இதன் காரணமாக ஏற்பட்ட வருத்தமிகுதியை கண்ணகி வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகப் பொய் சிரிப்பினைச் சிரிக்கிறாள். இக்காட்சியை இவ்வாறு மேன்மையும், மென்மையும் பட எடுத்துரைத்துள்ள இளங்கோவடிகள் இதன் வழிச் சொல்ல வருவது என்னவெனில், இல்லறத்தில் கணவன் மனைவி பிரிந்து வாழக் கூடாது என்றும், அவ்வாறு பிரிந்து வாழ்ந்தால் அவ்வாழ்க்கையை இணைக்க முயலும் பெரியோர்களுக்கு வழிவிடவேண்டும் எனவும், அப்பெரியோர்கள் கருணை கொண்டு பொறுமையை இல்லறத்தார்க்குக் கற்றுத் தரவேண்டும் என்பனவும் ஆகும்.
கோவலனும் மாறி வருவேன் என்று சிலம்புடன் சென்றவன் இறந்துபோகின்றான். அச்சூழலில் தனித்திருக்கும் பெண்ணான கண்ணகி வீறு கொண்டு எழுகிறாள். தன் கணவன் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்கப் போராடுகிறாள். வாதாடுகிறாள். உண்மையை நிலைநிறுத்தப் பாடுபடுகிறாள். இதற்குக் காரணம் தன் இல்வாழ்வின் மீது அவள் கொண்டிருந்த பற்றே ஆகும்.
கோவலன் காட்டும் வாழ்வியல் அறம்
கோவலன் மாடல மறையோனைச் சந்திக்கின்றபோது, அவனைக் கருணைமறவன், செல்லாச் செல்வன், இல்லோர் செம்மல் என்று பாராட்டுகின்றான். வாழ்வியல் சார்ந்த அறம் கருதி மூன்று அறச்செயல்களைக் கோவலன் செய்தான் என்பதால் இப்பட்டங்களை மாடல மறையோன் அவனுக்கு வழங்குகின்றனான். அந்தணன் ஒருவனை மதம் கொண்ட யானையிடம் இருந்து விடுவித்து, அந்தணனுக்கும் யானைக்கும் கருணை கூர்;ந்தவன் கோலவன் என்பதால் அவன் கருணை மறவன் ஆனான். குழந்தைக்காக அக்குழந்தையைப் பாம்பிடம் இ;ருந்துக் காத்த கீரையைக் கொன்ற பார்ப்பினியின் பாவம் போக்க தன் பொருள் கொடுத்து உதவியதால் கோவலன் செல்லாச் செல்வன் எனப்பட்டான். பொய் சாட்சி சொன்ன ஒருவனுக்காகத் தன்னுயிர் கொடுக்கத் தயார் ஆனான் கோவலன். இது கருதி அவனுக்கு இல்லோர் செம்மல் என்ற பெயர் ஏற்பட்டது. இவற்றின் வழி கண்ணகி சொன்ன அந்தணர் ஓம்பல் என்பதையும் கோவலன் தலையாய அறமாமக் கொண்டு வாழ்ந்தான் என்பது தெரியவருகின்றது.
கவுந்தியின் இறப்பு காட்டும் அறம்
மதுரைக்குச் செல்லும் கோவலனுக்கும், கண்ணகிக்கும் துணையாக வந்தவள் கவுந்தி என்ற துறவி. இவர் கோவலன் இறப்பு கருதி தன்னுயிர் துறக்கிறார். இல்லறத்தார் துறவறத்தாருக்கு உதவி வாழும் காப்பிய காலச் சூழலில் இல்லறத்தான் ஒருவனுக்காக வடக்கிருந்த கவுந்தியின் நிலை உணர்த்துவது துயரம் மனிதவாழ்வின் சென்று சேராத பக்கங்களுக்குக் கூட சென்று சேர்த்துவிடும் என்பதாகும்.
இளங்கோவடிகள் காட்டும் வாழ்வியல் அறங்கள்
இளங்கோவடிகள் காப்பிய முடிப்பிற்கு முன்னால் சில வாழ்வியல் அறங்களைச் சுட்டுகின்றார்.
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்
தானம் செய்ம்மின், தவம் பல தாங்குமின்
செய்ந்நன்றி கொல்லன்மின் தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையியுர் ஓம்புமின்
அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளுங் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக்கோட்டியும் விரிகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்து உறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென் ( வரந்தருகாதை, 186- 202)
என்ற இந்த அறங்கள் இளங்கோவடிகள் சுட்டும் வாழ்வியல் அறங்கள் ஆகும். இதனைக் கடைபிடித்து வாழ சிலப்பதிகாரம் வலியுறுத்துகின்றது.

-------------------------------------------------------------------------------

பெண்ணிய வாசிப்பில் மணிமேகலை

முனைவர் மு. பழனியப்பன்

Spread the love


                        முனைவர் மு. பழனியப்பன்
இணைப்பேராசிரியர்,
மா. மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை

பெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை  பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாசிப்பு எனப்படும். ஆண்படைப்பில் எழுப்பப்பட்டுள்ள ஆண்சார்பு  அரசியலை  இனம் காட்டுவதாக இவ்வாசிப்பு அமையும்.
ஆணால் எழுதப் பெற்ற ஒரு இலக்கியத்தில் ஆண் சார்பு கருத்துகளே அதிகம் இருக்கும் என்பது உறுதி.  சில ஆண்படைப்பாளர் தன்னுடைய ஆண் பால் சார்ந்த படைப்பு அரசியலை அப்படியே வெளிப்படுத்த முனைகின்றனர். சிலர் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றனர். அதாவது ஆணாதிக்க அரசியலை தெளிவாக வெளிப்படுத்திடாமல்  பொதுமைப்படுத்தி வெளியிடுவதுபோல ஆண்சார்புக்கு அவர்கள் இட்டுச் சென்றுவிடக் கூடும்.
இன்னும் சிலர் தன் படைப்பில் பெண்பாலாற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல படைத்தளிக்கலாம். ஆனாலும்  இம்முக்கியத்துவத்திற்குள் ஆண்சார்புத் தன்மை ஒளிந்துக் கோலோச்சிக் கொண்டு இருக்கும்.
ஒருபடைப்பின் உண்மைத் தன்மை என்பதை நிலைநாட்ட அதனை ஒவ்வொரு கோணத்திலும் ஆராயவேண்டும். பெண்ணிய நோக்கில், பெண்மனத்தின் அடிப்படையில் ஒரு ஆண்படைப்பினை உணர்கின்றபோது பெண்ணுக்கு எதிராகப் புனைந்துள்ள பல கருத்துகள் அப்படைப்பில் இருப்பதை இனம் காண முடியும். இவ்வகையில் ஆண் படைப்புகளில் உள்ள பெண்ணுக்கு எதிரான கருத்துக்களை இனம் காட்டுவது பெண்ணிய வாசிப்பு ஆகின்றது.
கேட் மில்லட் என்ற பெண்ணிய அறிஞர் ” ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆளுமை மிக்கதாக இருக்கும் ஒரு பாலினம் தனக்கு கீழ்ப்பட்ட பாலினத்தின் மீது தன்னுடைய வலிமையை நிலைநாட்டிக் கொள்ள, அல்லது தன் வலிமையை அதன் மீதுகாட்ட முயன்று கொண்டே இருக்கும் ”  என்று ஆதிக்கத்  அரசியலின் இயல்பை எடுத்துரைக்கிறார். இக்கருத்தின்  அடிப்படையில் காணுகின்றபோது  ஆண் ஆதிக்கச் சூழலில் படைக்கப்படும் படைப்பு ஆணாதிக்கத்தை வலியுறுத்துவதாகவே இருக்கும் என்பது உறுதியாகின்றது.  அவ்வாதிக்க சூழல் பெண்பாலினை அடக்கி வைக்கவே முயற்சிப்பதாகவே இருக்கும்.
மணிமேகலை என்ற காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் எவ்வகைப்பட்ட  ஆதிக்கம் புறச் சூழலில், படைப்புச் சூழலில் நிலவியது என்பதை முதலில் ஆராய வேண்டும். அதாவது ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள் என்பன அனைத்தும் ஆணாலேயே எழுதப் பெற்றுள்ளன. மேலும் கம்பராமாயணம், வில்லிபாரதம், பெரியபுராணம், சீறாப்புராணம், தேம்பாவணி,, பாஞ்சாலி சபதம், மனிததெய்வம் காந்தி காதை, மாங்கனி போன்ற பல காப்பிய முயற்சிகள் அனைத்தும் ஆண்களாலேயே  படைக்கப் பெற்றுள்ளன. பெண் எழுதிய காப்பியம் என்ற அளவில் இனம் காணக் கூடிய ஒன்றே ஒன்று அசலாம்பிகை அம்மையார் எழுதிய காந்திபுராணம் மட்டுமே. காந்திபுராணமும் காந்தி என்ற ஆண்தலைவரையே கதைத்தலைமையாகக் கொண்டுள்ளது. எனவே இதுவும் ஆண் ஆளுமையைச் சிறப்பிக்கும் போக்கினது என்பதில் ஐயமில்லை.
இத்தகைய சூழலில் காப்பியம் என்ற வடிவம் ஆண்களுக்கு உரிய படைப்பு வடிவமாகவே பெரும்பாலும் தமிழ்ப்பகுதியில் விளங்குவது தெரியவருகின்றது. எனவே காப்பிய வெளி என்பது பெண்களுக்கு திறக்காத இருப்புக் கதவாகவே அமைந்துவிட்டதை உணரமுடிகின்றது.
மணிமேகலை சிலப்பதிகார காப்பியத்தின் தொடர்வாய் படைக்கப் பெற்றது.

“தெரிவுறு வகையால் செந்தமிழி யற்கையில்
ஆடிநன்னிழலின் நீடிருங் குன்றம்
காட்டுவார்போல் கருத்து வெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்”

என்ற நூற்கட்டுரைப் பகுதி இதனைத் தெளிவு படுத்தும். சிலப்பதிகாரம் எழுவதற்குக் காரணமாக சூழலும் இங்குக் கவனிக்கத்தக்கது. குன்றக்குறவர் பத்தினிப் பெண் ஒருத்தி விண்ணகம் ஏறிச் சென்றதைக் கண்ட அதிசயக் காட்சியை இளங்கோவடிகளிடம் கூறுகின்றனர். அப்போது உடனிருந்த சாத்தனார் “யான் அறிகுவன்அது பட்டது என்று உரைப்போன்” என்று கோவலன் கண்ணகி வரலாற்றை எடுத்துரைக்கின்றார். இதனைக் கேட்ட இளங்கோவடிகள் “நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறி சிலப்பதிகாரத்தைப் படைக்கின்றார். இது முவேந்தர்க்கு உரியது என்பதன் காரணமாக “நீங்களே படைக்கலாம்” என்று சீத்தலைச் சாத்தனார் கூறுகின்றார். இதன்காரணமாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைப் படைக்க முயலுகின்றார் என்ற படைப்புச் சூழல் இங்குக் கவனிக்கத்தக்கது. இவற்றின்முலம் ஆண் படைப்புச் சூழலில் சிலப்பதிகாரம் உருவாகியது என்பதையும் அதன் தொடர்வாக தண்டமிழ் ஆசான் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையைப் படைத்தார் என்பதும் தெரியவருகிறது.
மணிமேகலையின் பதிகப்பகுதியில் இடம்பெறும்

” இளங்கோவேந்தன் அருளிக் கேட்ப
வளம் கெழு கூலவணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு
ஆறுஐம் பாட்டினுள் அறியவைத்தனன் என்”
என்ற அடிகளின் வழியாக இளங்கேவடிகள் கேட்ப சாத்தனார் மணிமேகலை துறவு பெற்ற கதையினை வடித்த செய்தி தெரியவருகின்றது.

இதன்வழி இரட்டைக் காப்பியங்கள் இரண்டும் ஆண் சொல்ல ஆண் கேட்கும் தன்மையில் செய்யப் பெற்ற ஆண் வயப்பட்ட சூழலைப் பெற்றுள்ளன என்பது உறுதி.
எனவே காப்பியம் என்ற வகைமையை ஆக்குவதிலும், இரட்டைக் காப்பியங்களான சிலம்பும் மணிமேகலையும் ஆண்கள் அருகிருக்க படைக்கப்பெற்ற காப்பியம் என்பதை எண்ணும்போதும் ஆண் சூழலில்தான் மணிமேகலை படைக்கப் பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது.
மணிமேகலை யாக்கப் பெற்ற காலத்தில் அரசமுறைமை என்பது ஆண் வயப்பட்டது என்பதில் கருத்து மாறுபாடு இருக்க முடியாது. ஏனெனில் தூங்கெயில் எறித்த தொடிதோட் செம்பியன் என்ற அரசன் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழாத் தொடங்க ஏற்பாடு செய்ததாக ஒரு குறிப்பு மணிமேகலையில் இடம் பெறுகின்றது. எனவே அரசாட்சியும் ஆண்பாலிடத்தில் இருந்தது என்பதும் இங்கு உணரத்தக்கது.
இவ்வாறு ஆண் வயப்பட்ட அரசியல் சூழ்நிலையில் படைக்கப்படும் இலக்கியம் ஆண்வயப்பட்ட செய்திகளையே கொண்டிருக்க முடியும்.
மணிமேகலை என்ற பெண்ணைக் கதைத்தலைவியாகக் கொண்ட காப்பியம், கணிகை ஒருத்தியின் பெண்ணை துறவி என்ற உயர் நிலைக்கு உயர்த்திய காப்பியம், பெண்களும் துறவேற்கலாம் என்பதன் அடையாளமாக விளங்கும் காப்பியம் போன்ற கருத்துகள் மணிமேகலையைப் பற்றிக் கட்டப் பெற்றுள்ள கருத்துகள் ஆகும்.
“பேரழகுச் செல்வி மணிமேகலையை ஒரு பெண்ணைப் பேரறிவுச் செல்வியாய்ப் பிறங்க வைத்து, பேரறச் செல்வியாய் நடமாடவிட்டு, மாதவச் செல்வியாய் மிளிரச் செய்து, பொதுநலச் செல்வியாய்  சேவைச் செல்வியாய் தியாகத்திலகமாய்த் திகழச் செய்து காப்பியத் தலைமகளாக்கி, அக்காப்பியத் தலைப்புக்குரியவளாகவும் உயர்த்திய பெண்மை போற்றும்  பெருங்காப்பியம் ”
“அவள் (மணிமேகலை) காப்பியத்தின் கற்பனைத் தலைவியாக மட்டும் அல்லாமல் நாட்டு வரலாற்றின் பெருமைக்கு உரிய ஒரு பெண் பிறவியாகவும் பலருடைய உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டாள். அழகும், இளமையும், அறிவும், பண்பும் நிரம்பிய அவள், அரசிளங்குமாரனுடைய காதலைக் கைவிட்டுப் பௌத்தத் துறவியான சிறப்பு ஒருபுறம். அதைவிடப் பெரியது அவள் அருள்நிரம்பிய வாழ்வு நடத்திய சிறப்பு  ஆகும்”
மேற்கண்ட கருத்துகள் தமிழ் இலக்கிய வரலாறுகளில் மணிமேகலை பற்றி அறிமுகப்படுத்தும் வரிகள் ஆகும். இவை மிகுத்து உரைக்கின்றன என்பது மணிமேகலையை முழுதும் கற்கப் புகுவோருக்குத் தெரியும்.
மணிமேகலைக் காப்பியம் பெண்ணை மையப் படுத்தி எழுதப் பெற்றக் காப்பியம் என்றாலும் சீத்தலைச் சாத்தனார் காலத்தில் பெண்களுக்கு இருந்த எல்லைகளை விளக்கும் காப்பியம் என்று கொள்வதே பொருத்தமுடையதாகும். பெண்களைப் பற்றி எழுதத் துணிந்த காப்பியம் என்று அதனை ஏற்றுக் கொண்டாலும் அது பெண் பாலினரை அடக்கும் ஆண் சார்பு காப்பியம் என்றே நோக்க வேண்டியுள்ளது. இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்தே இக்கட்டுரை படைக்கப் பெறுகின்றது. இக்கட்டுரையின் எல்லை கருதி இங்கு மணிமேகலை என்ற பாத்திரம் மட்டுமே கொள்ளப்படுகின்றது. மற்ற பாத்திரங்கள் இதே நோக்கில் நோக்குகின்றபோது இன்னும் இவ்வாய்வு வலுப் பெறும். அதிக கருத்துகள் கொண்டிலங்கும்.
மணிமேகலை பிறந்த செய்தியை சிலப்பதிகாரம் அறிவிக்கின்றது. அவள் வளர்ந்து பௌத்த துறவியாக மாற்றப் படுவதற்கான ஆயத்தநிலையில் இருந்து மணிமேகலை தொடங்குகின்றது.  மணிமேகலை யார் என்பதைப் படிப்பவர்க்கும், மணிமேகலைக்கும் உணர்த்தும் முறையில் ஊரலர் உற்றகாதையில் மாதவி சில செய்திகளை எடுத்துரைக்கின்றாள்.
அதில் தான் பெற்ற மகளைக் கண்ணகியின் மகள் என்று நிறுவ முயற்சிக்கிறாள்.

“மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
திருந்தாச் செய்கைத் தீத் தொழில் படாஅள்”
(5557)
என்ற மாதவியின் கூற்று மணிமேகலை தன் மகளாய் இருக்கின்ற நிலை வரை கணிகையாகவே இருக்கக் கூடும். எனவே அவளை மேல்நிலைப் படுத்தும் முயற்சியில் பத்தினித் தன்மை வாய்ந்த குலமகளாய் அறிவிக்கின்ற பெருமுயற்சியை மாதவி செய்கின்றாள். இதனை இவ்வரிகள் எடுத்துரைக்கின்றன.

இருப்பினும் மாதவியின் தாய் சித்திராபதி காப்பியத்தின் பல இடங்களில் மணிமேகலையை கணிகையாகவே உலகிற்கு அறிவிக்கிறாள்.

” தீவகச் சாந்தி செய்தரு நல்நாள்
மணிமேகலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலைமேல்வர”
( ஊரலருற்ற காதை 35)

என்று மணிமேகலைப் பாத்திரம் சித்திராபதியின் வாயிலாக அறிமுப்படுத்தப்படும்போதே கணிகையாக காட்டப் பெறுகின்றது.

கன்னிக்காவலும், கடியின் காவலும்
தன் உறு கணவன் சாவுறின் காவலும்
நிறையின் காத்துப் பிறர் பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்
பெண்டீர் தம் குடியில் பிறந்தாள் அல்லள்
நாடவர் காண நல் அரங்குஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
கருப்பு நாண் கருப்பு வில் அருப்புக் கணை தூவச்
செருக் கயல் நெடுங்கண் சுருக்கு வலைப்படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப்
பண்தேர் மொழியின் பயன் பலவாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
பான்மையின் பிணித்து படிற்று உரை அடக்குதல்
கோன்முறை அன்றோ குமரற்கு” என்றலும்
( உதயகுமரன் அம்பலம் புக்ககாதை 98111)

என்ற பகுதிகள் மணிமேகலை காலத்தில் இருந்த கணிகையர் குலப் பெண்கள் இயல்பை வெளிப்படுத்துவதாக உள்ளன. ” கொண்டிமகளிர் ” என்ற மரபினள் என மணிமேகலையை அவளின் பாட்டியே உரைக்கும் கீழ்மை அவ்வப்போது காப்பியத்தில் தலை தூக்கச் செய்யப் பெற்றுள்ளது.
இது மட்டுமில்லாமல் ஊரார்களும் மணிமேகலை, மாதவி ஆகியோரின் செய்கையை கேலிபேசக் கூடிய சூழலும் காட்டப் பெற்றுள்ளது.

“விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மக்களின்
மணிமேகலை தனை வந்துப் புறம் சுற்றி
அணிஅமை தோற்றத்து அருந்தவப்படுத்திய
தாயோ கொடியள் தகவு இலள் ”
(மலர்வனம் புக்க காதை, 146150)
என்ற பகுதியில் மக்களும் மாதவி கணிகை என்ற நிலையில் திரிந்துவிட்டாள் என்பதற்காக ஏசுவதாக படைக்கப் பெற்றுள்ளது.   இவ்வடிகளில் மணிமேகலையைக் காணவந்த மக்களின் இயல்பிற்கு பேடியைக் காணவந்த கூட்டம் ஒப்பு நோக்கப் பெற்றுள்ளது எனின் பேடியை ஒத்து இருந்தனளா மணிமேகலை என்ற கருத்தும் இங்கு ஏற்படுகின்றது.

இவ்வகையில் மணிமேகலையை மேல்நிலைப் படுத்தும் முயற்சிக்குச் சரிசமமாக அவளை கீழ்நிலைப்படுத்தும் முயற்சியிலேயே வைத்திருப்பதற்கான முயற்சி மணிமேகலைக் காப்பியத்தில் ஆங்காங்கே நடைபெற்றுள்ளது என்பதை உணரமுடிகின்றது.
மாதவி, சித்திராபதி என்ற தாய் மகள் உறவினை ஒரு புறத்திலும், மாதவி, மணிமேகலை என்ற தாய் மகள் உறவினை ஒரு புறத்திலும் வைத்துக் கொண்டு இச்சூழலைச் சற்று விரிவாக்கிப் பார்க்கவேண்டி உள்ளது.
சித்திராபதி தன் மகளை கணிகையாக வளர்த்துத் தன்னிலையை உறுதிப்படுத்திக்கொண்டாள். அச்சித்திராபதி தன் பேத்தியையும் இதே வழியில்  இட்டுச் சென்று வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகிறாள். இதற்காக அரச குமாரனின் உதவியை அவள் நாடுகிறாள்.
மாதவி தன் மகளை கணிகையாக ஆக்கிவிடாமல் காக்கும் முறைமையில் ஈடுபடுகிறாள். அசோக குமாரன் என்ற இளவரசன் மணிமேகலை மீது மையல் கொள்ளுகின்றான். இவனின் மையல் என்பது கணிகை மீது கொண்ட காம மயக்கமாகவே உள்ளது. இந்த மயக்கத்தை உடையவனோடு மணிமேகலை கற்புடைப் பெண்ணாக வாழமுடியாது. அரசனுக்கு ஆட்பட்டவள் பின்னாளில் அனைத்துத் தரப்பினரின் இச்சைக்கும் ஆட்படவேண்டிய அபாயமும் உள்ளது. இந்நிலையில் மணிமேகலை என்ற பாத்திரத்தை பலர் காண ஆடச் செய்யவும் முடியாமல், கற்புடைப் பெண்ணாக குடும்ப நிலைக்கு இட்டுச் செல்லவும் முடியாமல் இருக்கும் சூழலில் மணிமேகலையைத் துறவியாக்குவதே சரி என்று மாதவியோ அல்லது சாத்தானரோ முடிவு கொள்ளுகின்றனர். இதன் வழி காப்பியம் வளருகின்றது.
இப்போது மணிமேகலையைத் துறவியாக்கிவிடுவதற்காகவே மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள் அவள் என்ற குறிப்பு காப்பியத்தில் இடம் பெறச் செய்யப்படுகிறது.
பெண்ணிய நிலையில் சிந்திக்கையில் இங்கு ஒரு கேள்வி எழுகிறது. மாபெரும் பத்தினியின் மகள் மணிமேகலை என்றால் அவளையும் கற்பு வாழ்க்கைப் படுத்தியிருக்கலாமே? என்ற ஐயத்திற்கு விடை இல்லை. கணிகை குலத்தவள் கற்பு வாழ்வு வாழ அக்காலச் சூழலில் இடம் இல்லை. கணிகையைக் காமத்திற்கு உரியவளாகவே சமுகம் கருதியிருக்கிறது. அழகான இளம் பெண் காப்பார் அற்று இருக்கும் சூழலில் அவள் காமப்பொருளாகவே ஆக்கப்படுவாள் என்ற முறையே இன்றுவரைக்கும் நிலவி வருகின்றது. இதே சூழலே மணிமேகலைக்கும் வாய்த்திருக்கின்றது. இதிலிருந்துத் தப்பிக்க ஒரே வழி அவளைத் துறவியாக்குவதே என முடிவு கட்டி அவள் “தீத்திறம் படாஅள்” என்று அளபெடை கொடுத்துப் படைப்பாளன் தன் கருத்தையும் மாதவி கருத்தையும் உடன் படுத்துகிறான்.
மாதவியின் வாயிலாக மணிமேகலை  தன்  கதை, தன் பெற்றோர் கதை ஆகியனவற்றை அறிந்து கொள்வதாக காப்பியத்தின் முன்பகுதி அமைக்கப் பெற்றுள்ளது. இவற்றோடு மணிமேகலை தன் முற்பிறப்புக் கதையையும் காப்பியப்  போக்கில் அறிந்து கொள்ளுகிறாள். மணிமேகலா தெய்வத்தின் உதவியால் இச்செயல்பாடு மணிமேகலைக்குக் கிடைக்கின்றது.
மணிமேகலை முற்பிறவி வரலாறு ஒன்றும் இக்காப்பியத்தில் காட்டப் பெறுகின்றது. அதாவது அவள் முற்பிறவியில் இராகுலன் என்பவனின் மனைவியாக இருந்தாள் என்பது அக்கதையின் சாரமாகும்.
அசோதர நகரத்தை ஒருகாலத்தில் ஆண்ட இரவிவன்மனின் மனைவி அமுதபதி ஆவாள். இவர்கள் இருவருக்கும் பிறந்தவள் இலக்குமி என்பவள் ஆவாள். இவளே பின்னால் மணிமேகலை என்னும் பிறவி எடுக்கிறாள். இவளுடன் பிறந்தவர்கள் தாரை, வீரை ஆகியோர் ஆவர். பின்னாளில் இவர்கள் மாதவியும், சுதமதியுமாகப் பிறக்கின்றனர்.
அத்திபதி  என்னும் அரசனுக்கும், நீலபதி என்பவளுக்கும் பிறந்தவன் இராகுலன் ஆவான். இவன் பின்பிறப்பில் அசோக குமாரன் ஆவான்.
இவர்கள் இருவரும் இனிது வாழ்ந்திருந்தனர். ஒரு முனிவரை இருவரும் சந்திக்கின்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. மணிமேகலையில் இந்நிகழ்ச்சி இருவகைகளில் விவரிக்கப்படுகின்றது.

வகை.1.
பாத்திரம் கொடுத்த காதையில்  மணிமேகலா தெய்வம் ஒரு முறையில் இச்சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறுகின்றது.

இலக்குமி தன் கணவனான இராகுலனுடன் ஒரு முறை பூஞ்சோலை ஒன்றில் மகிழ்ந்து இருந்தாள். இவர்கள் இருவருக்குள் ஊடல் தோன்றியது. அவ்வூடலில் தோற்ற இராகுலன் இவளை வீழ்ந்து வணங்கினான். அப்போது சாது சக்கரன் என்ற முனிவர் அங்கு வந்தார். அவரைக் கண்டதும் இலக்குமி மயங்கி உடல் நடுக்கமுற்று அவரை வணங்கினாள். இவள் வணங்கியதைக் கண்ட இராகுலன் கோபமுற்று ” ஏன் இவரை வணங்கினாய்” என்று மீளவும் கோபமுற்றான்.
இவனின் கோபத்தை அடக்கினாள் இலக்குமி. பின் இருவரும் வணங்கி அம்முனிவர் மகிழும் வண்ணம் உண்ண உணவும் பருக நீரும் கொடுத்தனர். இதனை அவர் ஏற்றுக் கொண்டார். அவ்வறமே இன்று உனக்குத் தொடர்கிறது.
இப்பிறவிக் கதையை மணிமேகலா தெய்வம் உரைக்கின்றது.

வகை.2.
கந்திற்பாவை மணிமேகலையின் முற்பிறவியினை மற்றொரு இடத்தில் உரைக்கின்றது. கந்திற்பாவை வருவது உரைத்த காதை என்ற இந்தப் பகுதியில் விவரிக்கப்படும் நிகழ்ச்சி பின்வருமாறு.

இலக்குமி, இராகுலன் என்ற இருவரும் காயாங்கரை என்ற ஆற்றின் கரையில் இருந்த பிரம்ம தருமன் என்னும் முனிவனை வணங்கச் சென்றனர். அவரை வணங்கிய பின்னர் நாளை தங்களின் இல்லத்திற்கு அவரை உணவுண்ண அழைத்தனர். அவரும் வருவதாய்  ஒப்புக் கொண்டதால் மகிழ்வுன் இரவைக் கழித்தனர். காலையில் சமையல் தொழிலுக்கு வந்த பணியாளனின் கவனக்குறைவு காரணமாக சோற்றுப் பாத்திரம் உடைந்து அமுது அழிந்தது. இதனால்  கோப்பட்ட இராகுலன் அவனை தோளும், தலையும் சிதையுமாறு வெட்டினான். இதன் காரணமாக அவனும் வினைப்பயன் கருதி அழிய வேண்டியவனாயினான்.
இவ்விரு கதைகளில் பல ஒற்றுமைகள் இருப்பதைப் போன்று பல வேற்றுகைளும் இருக்கின்றன. பின்வரும் வினாக்கள் இவ்விரு கதைகளின் மேல் கேட்கப்படுகின்றபோது இக்கதைகளின் உண்மைத்தன்மை வெளிப்படலாம்.
பிரும்மதருமன், சாதுசக்கரன் என்ற இருவரும் ஒருவரா?, அல்லது வேறு வேறு துறவிகளா? வேறு வேறானவராக இருப்பின் நிகழ்ச்சி ஒன்றா? வேறா? என்ற பல அடிப்படை கேள்விகளை இதிலல் எழுப்ப வேண்டி உள்ளது.
வேறு வேறு நிகழ்ச்சிகள் என்று கொண்டால் முனிவர்களைச் சந்திக்கின்ற வழக்கமும், அவர்களின் கோப தாபங்களுக்கு ஆளாகின்ற சராசரி மனித வாழ்க்கையை உடையவர்களாக இப்பாத்திரங்கள் படைக்கப் பெற்றுள்ளன என்று கொள்ள வேண்டும்.
அடுத்து இலக்குமியின் மறுபிறவி மணிமேகலை. இராகுலனின் மறுபிறவி அசோக குமாரன். அசோக குமாரன்,  இராகுலன் ஆகியோர் முற்பிறவியிலும் இப்பிறவியிலும் அரசகுமாரர்கள். ஆனால் இலக்குமி முற்பிறவியில் அரசிமகள். இப்பிறவியில் கணிகையின் மகள். ஏன் அவள் அரசியின் மகளாக பிறப்பெடுத்திருக்கக் கூடாதா. முற்பிறவியில் கொலை செய்த ஆண் பின் பிறவியில் ஆணாக அரசகுமாரான இறக்கம் இல்லாமல் படைக்கப்படுகின்றபோது நன்மை செய்த இலக்குமி மட்டும் ஏன் அடுத்த பிறவியில் இவ்வாறு கீழிறக்கப் பெற்றுப் படைக்கப்பட வேண்டும்.
அதுபோல தரை, வீரை ஆகியோர் முற்பிறவியில் அரச குடும்பத்தில் பிறந்து, ஒரே அரசனை மணக்க பிற்பிறவியில் அவர்கள் இருவரும் ஒருத்தி கணிகையர் குலம், ஒருத்தி அந்தணர் குலம் என பிறப்பிக்கப்படச் செய்யவேண்டும். மேலும் முற்பிறவியில் குடும்ப மகளிராக இருந்த இவர்கள் இப்பிறவியில் பதியிலாளராக ஏன் மாற்றப்படவேண்டும். இக்கேள்விகளின் அடிப்படையில் கிடைக்கும் உண்மை ஒன்றுதான். ஆண் என்றும் தன் வலிமையுடன் இருக்க பெண் என்றும் தன்னிலைக்குக் கீழே சென்று கொண்டிருக்கும் படியாகப் படைக்கப்பெறுவாள் என்பதுதான் அந்நிலையாகும்.
மணிமேகலை என்ற பாத்திரம் அவ்வப்போது உயர்நிலைகளை அடைவதாகக் காட்டப் பெற்றாலும் அவ்வப்போது அவள் அடைந்த உயரத்தை விட அடைவிக்கப் பெற்ற தாழ்வுகள் அதிக அளவில் உள்ளன.
மணிமேகலை தன் பழம் பிறப்பினை மணிபல்லவத் தீவில் அறிகிறாள். அப்போது  அவளைச் சுமந்து வந்த மணிமேகலா தெய்வம் முன்று மந்திரங்களை அவளுக்குக் கற்பிக்கின்றது.

“அல்லிஅம்கோதை! கேட்குறும்  அந்நாள்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளைபொருள் உரையார் வேற்று உரு எய்தவும்
அந்தரம் திரியவும் ஆக்கும் இவ்வருந்திறல்
மந்திரம் கொள்க’ என வாய்மையின் ஓதி”
( மந்திரம் கொடுத்த காதை 7882)


“மக்கள் யாக்கை உணவின் பிண்டம்
இப்பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும் என்று
ஆங்கு அது கொடுத்து ” (மேலது 9091)
என்ற பகுதிகள் மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் அளித்த மந்திரங்களைச் சுட்டுவனவாகும். இதன்வழி


1.    இளையவள், வளையணிந்த பெண் என்பது கருதி யாரும் மணிமேகலைக்குத் தத்துவப் பொருளைக் கூறமாட்டார்கள். எனவே வேற்று உருவம் எடுத்து அம்மெய்ப் பொருள்களை அறிவதற்கு  வாய்ப்பாக ஒரு மந்திரத்தை மணிமேகலா தெய்வம் வழங்குகின்றது.  அது  உருமாற்று மந்திரம் ஆகும்.
2.    இன்னொரு மந்திரம் அந்தரத்தில் செல்வதற்கு உரிய மந்திரம் ஆகும்.
3.    மற்றொன்று பசி களையும் மந்திரம் ஆகும்.

இம்முன்று மந்திரங்களில் முதல் மந்திரம் ஆணாதிக்க வயப்பட்டுள்ளது மிக்கத் தெளிவாகத் தெரிகின்றது. அக்காலத்தில் சமயத் தத்துவ அறிவு பெற்றவர்கள் ஆண்கள்தான். அவர்கள் வழியாகத்தான் யாரும் மெய்ப் பொருள் அறிய இயலும். மணிமேகலை பெண் என்பதால் அவள் தத்துவத்தை அறிய இயலாது. எனவே உருவை மாற்றிக் கொண்டுதான் அவள் தத்துவம் கேட்டாக வேண்டும். அவ்வாறே  பின்பகுதியில் வஞ்சி மாநகரில் மாதவன் வடிவினை அவள் எடுத்துக் கொண்டுத் தத்துவம் கேட்கிறாள்.
பெண் என்பதால் தத்துவம் கேட்க இயலாது என்ற இதே கருத்தினை கண்ணகி படிமமும் வஞ்சியில் எடுத்துரைக்கின்றது.

“இளையள், வளையோள் என்று உனக்கு யாவரும்
விளைபொருள் உரையார் வேற்று உருக் கொள்க’
( வஞ்சி மாநகர்புக்க காதை, 6869)

என்று முன் கூறிய அதே கூற்றினை மீளவும் இக்காதையில் சாத்தனார் எடுத்துரைக்கின்றார்.
இதன் காரணமாக அவருள் உள்ள ஆண் சார்ந்த மனநிலை உணரக் கூடியதாக உள்ளது. பெண்களே பெண் உருவில் செல்லாதே என்று கூறக்கூடிய நிலையில் இவ்வாறு படைப்பது என்பது ஆண் படைப்பு மனத்தாலேயே இயலும்.
உண்மையைக் கேட்டுணரப் போகின்றபோது உண்மையை மறைத்துப் பொய்வேடம் கொள்ளும் முறைமையால் பயன் ஏதும் விளையுமா என்று என்ணிப் பார்த்தால் இதன் வேறுபட்டதன்மை புரிபடும்.
மணிமேகலை இம்மந்திரங்களையும்,  அமுதசுரபிப் பாத்திரத்தையும் பெற்றுக் கொண்டு பூம்புகார் வருகிறாள். ஆதிரையிடம் முதல் பிச்சை பெற்றபின் அவள் எளியோர்க்கும், ஏழைகளுக்கும் உணவிடுகிறாள். அவ்வாறு உணவிடும் இவளை உதய குமாரன் பின்தொடர்ந்தே வருகிறான். அவளிம் ” நல்லாய்! என்கொல் நல் தவம் புரிந்தது? ” என்று வினவுகின்றான்.
இதற்கு மணிமேகலை அளிக்கும் பதில் கவனிக்கத்தக்கது.

” பிறத்தலும் முத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது  இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்
மண்டு அமர் முருக்கும் களிறு அணையார்க்கு
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ?”
( உதய குமாரன் அம்பலம் புக்க காதை 136142)
என்ற பதிலில் பெண்டிர் ஆண்களுக்கு அறிவு கூறலாகாது என்று மணிமேகலை உரைப்பதாக படைக்கப் பெற்றுள்ளது. பெண்கள் அறிவுரை  கூறக்கூடாது. அறமாவது செய்யலாமா என்றால் அதுவும் முடியாததாகி விடுகின்றது.

இது கழிந்தபின்னர் தன் உண்மை உருவத்துடன் உலவினால் உதயகுமரனால் தொல்லைகள் ஏற்படும் எனக்கருதி யானைப்பசி நோய் பெற்ற பெண்ணான காயசண்டிகையின் உருவத்தினை மணிமேகலை மந்திரத்தின் வழி பெறுகிறாள். காய சண்டிகை, வயந்தமாலை போன்றோர் விஞ்சையர்களால் கைக் கொள்ளப் பெற்றவர்கள். பின்னாளில் அவர்களால் தன் வாழ்வை இழந்தவர்கள் என்ற பகுதி ஒரு தனிக்கட்டுரையாக விரியத்தக்கது. காயசண்டிகை கணவனுடன் இணையாமலே இறப்பினைத் தழுவுகிறாள். அவளின் உருவத்தில் மணிமேகலை மறைந்து நின்று அறம் செய்கிறாள்.
அறம் செய்யவும் பெண் வரக்கூடாது. அப்படிச் செய்ய வருவதானால் வேற்றுருவில்தான் செய்யவேண்டும் என்பது போன்று இக்காப்பியத்தில் மணிமேகலைப் பாத்திரப்படைப்பு அமைக்கப் பெற்றுள்ளது.
மேலும் அரசன் மணிமேகலையின் அறத்திறத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை அழைத்து நேரடியாக விசாரிக்கின்றான். அப்போதும் அவள் தன் உண்மை நிலையைக் கூறாது காயசண்டிகையின் வரலாற்றையே தன் வரலாறாக உரைக்கின்றாள். சமய உண்மைகளை நிலை நாட்டவேண்டிய பெண்ணாக வளரவேண்டிய மணிமேகலைப்  பாத்திரத்தில் இவ்வளவு முரண்கள் காணப்படுகின்றன என்பதை கவனத்தில் கொண்டாகவேண்டியுள்ளது.
இதன்பின் உதய குமரனைக் காஞ்சனன் வாளால்  வெட்டுகின்றான். வெட்டுப் பட்டவனைப் பற்றியோ, வெட்டியவனைப் பற்றியோ யாரும் கவலைப் படவில்லை. ஆனால்  வெட்டுவதற்குக் காரணமாக மணிமேகலை இனம் காணப்பட்டு அவள் சிறையில் அடைக்கப்படுகிறாள்.
சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய மணிமேகலைக்குக் கிடைத்த பரிசு அவள் சிறைவீடு புகுதலே ஆகும். இந்நிலையில் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய உயர் மனிதச் சிந்தனை உடனடியாக தாழ்வினைச் சந்திக்கின்றது. இவ்வாறு ஏறுமுகமும் இறங்குமுகமும் அடுத்தடுத்து மணிமேகலைப் பாத்திரத்திற்கு அமைக்கப் பெற்றுள்ளது கவலைக்குரியதாக உள்ளது.
இக்கருத்தை அரசனின் செவியல் படும்படி தெரிவிக்க சில முனிவர்கள் வருகின்றனர்.  இவ்விடைவெளியில்  அசோக குமாரன் பிணத்துடன் மணிமேகலை மறைத்து வைக்கப்படுகிறாள். அரசனிடம் வந்த முனிவர் பல கருத்துக்களைக் கூறிக் காம வயப்படுபவனை அரசன் தண்டிக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே அவன் தண்டிக்கப்பட்டுவிட்டான் என்று அவர்கள் பற்பல கருத்துக்களைக் கூறுகின்றனர்.
இதுபோழ்து இரு கதைகளை ளடுத்துரைக்கின்றனர். மருதி, விசாகை என்ற இரு பெண்களின் கதை இங்கு எடுத்துக்காட்டப் பெறுகின்றது. மருதி பிற ஆடவனால் விரும்பப்படுகிறாள். அவ்வளவில் பிறர் நெஞ்சு புகுந்ததே கற்பிற்குக் கேடு என்று அவள் கருதுகிறாள். இதன் காரணமாக பூதத்திடம் முறையிட ஏழு நாளில் அந்தக் காமுகன் அழிகிறான். அடுத்து  விசாகை என்பவளின் கதை கூறுப்படுகிறது. இவளுக்கும் இவளின் முறைப்படி கணவனாகவேண்டிய ஒருவனுக்கும் தொடர்பு இருப்பதாக ஊரார் பேசிக் கொள்ள இவளும் அவனும் இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல் காமத்தைத் தவிர்த்து அறமுணர்ந்து வாழ்ந்த நிலையை இக்கதை விளக்குகின்றது.
இவ்விரு கதைகளிலும் பெண்கள் குற்றம் செய்யவில்லை என்றபோதும் அதிகம் துயரத்திற்கு ஆட்படுவது பெண்கள்தான் என்பது தெளிவு.
இவ்வாறு ஏற்றமும் இறக்கமும் கொண்ட பெண்கள் பாத்திரப்படைப்பினைப் பெற்றதாக மணிமேகலை விளங்குகின்றது.
இதன் காரணமாக காமத்தின் விளைவினை எடுத்துரைக்க முனிவர் முனைந்தாலும் அரசன் மணிமேகலையைச் சிறைக் கோட்டத்தில் அடைக்கின்றான்.
இதன்பின் மணிமேகலை சிறைக் கோட்டம் சார்கிறாள். அரசமாதேவியின் யோசனையின்படி அரசமாதேவியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறாள். அங்கு அவளுக்கு பித்தேற்றும் மருந்தினைப் புகட்டுகிறாள். மணிமேகலை அதனின்றும் தப்பிக்கிறாள். அடுத்து காமுகன் ஒருவனைக் கொண்டு மணிமேகலை அடையச் செய்வதான தவறான நிலையை எடுக்கிறாள். அப்போது மணிமேகலை ஆண் வடிவம் கொள்கிறாள். இதன் காரணமாகக் காமுகன் பயந்து ஓட்டமெடுக்கிறான்.
பின்பு புழுக்கம் மிக்க அறையில் உண்ண உணவும் நீரும் இன்றி அடைக்கிறாள். இதிலிருந்தும் மணிமேகலை மந்திரம் சொல்லித் தப்பிவிடுகிறாள். இதன்பின் அவ்வரசி நல்வழிப்படுகிறாள். மணிமேகலையை விடுவிக்கிறாள்.
இங்கும் மணிமேகலையைத் துன்புறுத்தும் சூழலுக்கு உரியவராகப் பெண் படைக்கப் பெற்றுள்ளாள். பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்ற அடிக்கருத்து இக்காப்பியத்துள் புதைந்து பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டுள்ளது.
இதன்பின் மணிமேகலை முன்பிறவியில் ஆபுத்திரனாகப் பிறந்து தற்போது புண்ணியராசனாகப் பிறந்துள்ள அரசனைக் கண்டு அவனுடன் மணிபல்லவம் அடைந்து அவனையும் முற்பிறவி பற்றி அறியச் சய்து வஞ்சி காஞ்சி போன்ற நகரங்களுக்குச் சென்று பௌத்த நெறிபரப்பி பவத்திறம் அறுக என பாவை நோற்ற நிலையில் மணிமேகலைக் காப்பியம் நிறைவு பெறுகின்றது.
அடிக்கடி திருப்புமுனைகள் இக்காப்பியத்தில் ஏற்பட்டபோதும் பெண்களை உயரத்தில் ஏற்றியும் பின் பள்ளத்தில் தள்ளியும் வீழச் செய்யும் முயற்சியே அதிக அளவில் நடைபெற்றுள்ளது என்பதை  பெண்ணிய வாசிப்பின்போது உணரமுடிகின்றது.
---------------------------------------------------------------------------------------------------------

நீலகேசி காட்டும் உயிர்ஓர்மை (அல்லது) முக்கூட்டு மருந்து

முனைவர் மு. பழனியப்பன்


இணைப்பேராசிரியர், மா. மன்னர்கல்லூரி(த), புதுக்கோட்டை.
ஒற்றுமை என்பது உலக ஒற்றுமை, நாட்டின் ஒற்றுமை, இனத்தின் ஒற்றுமை, குழுவின் ஒற்றுமை என்று பகுக்கப் பகுக்க சிறுபிரிவாய் குறுகும் தன்மையை உடையது. இச்சிறு சிறு பிரிவுகள் ஒன்றாக்கப் பெற்றால் மட்டுமே உலக ஒற்றுமை என்பது பெறப்படும். ஆனால் இனத்தால், மொழியால், நிறத்தால் பாகுபட்டு நிற்கும் சமுகத்தை எவ்வளவுதான் ஒன்றிணைத்தாலும் அது தன்னுடைய இயல்பான பிரிதலை நோக்கியே செல்லும். இந்தப் பிரிதலைத் தடுத்து ஒற்றுமையை நிலைநாட்ட இந்தியத் தத்துவங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிதான் உயிர் பற்றிய ஒருமைச் சிந்தனையாகும். மண்ணுலகில் பிறக்கின்ற எல்லாமும் உயிர் பெற்றிருக்கும் என்றும், அந்த உயிர் அனைத்துப் பிறவிகளிலும் ஒரே தன்மையது என்றும், பிறவிகள் அனைத்தும் பிறவாமை ஆகிய பேரின்ப நிலையை அடைய முயல்கின்றன என்று காட்டி இந்தியத் தத்துவங்கள் பாகுபாடின்மைக்கான விதையை விதைக்கின்றன. இதன்முலம் ஒரே நிலைப்பட்ட உயிர் பற்றிய தத்தவக் கருத்தை இந்திய தத்துவங்கள் வளர்த்தெடுக்க முயன்றன.
சமண சமயமும் உயிர் பற்றிய பல தத்துவக் கருத்துகளை எடுத்துரைக்கின்றது. சமண சமயத்தின் அடிப்படைக் கருத்துக்களை எடுத்துக் கொண்டுப் படைக்கப்படும் தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள் உயிர் என்பதை உணர்த்தி அதன் ஓர்மை அடிப்படையில் உலக உயிர்கள் அனைத்தையும் ஒரே இயல்பினவாகக் கருதும் நன்முறைக்கு இட்டுச் செல்கின்றன. எனவே பாகுபாடு என்பது மறைந்து அனைத்து உயிர்களும் ஒரே திறத்தன என்னும் பொதுமை கிடைத்து விடுகின்றது. இதற்குள் இந்திய ஒருமைப்பாடும் செழித்தோங்குகின்றது. உலகமே கண்டு வியக்கின்ற இந்த ஒற்றுமைத் தன்மை இந்தியத் தத்துவப் போக்கின் வெற்றியாகின்றது.
நீலகேசி ஐஞ்சிறுக்காப்பியங்களுள் ஒன்றாகும். இது குண்டலகேசி என்ற பெருங்காப்பியத்தில் வலியுறுத்தப்படும் பௌத்த மதக் கருத்துகளுக்கு எதிர்நிலையில் நின்று அக்கருத்துகளின் வலுவின்மையை எடுத்துரைப்பதற்காக செய்யப் பெற்றுள்ளது. இதனை யாத்தவர் பெயர் தெரியவில்லை.
நீலி என்ற பேயின் தீத்தன்மையைப் போக்கி அதனை வழிப்படுத்தி, முனிச்சந்திர பட்டாரகன் என்ற துறவி சமணசமயக் கருத்துக்களை அப்பேய்க்கு அறிவிக்கும் நிலைப்பட்டதாக இக்காப்பியம் செய்யப் பெற்றுள்ளது. இதன் காரணமாக நீலகேசி புதுப்பிறவி பெற்று அப்பிறவியில் சமணசமயக் கருத்துகளைக் கற்றுத் தெளிந்து, அவற்றை எல்லா இடங்களிலும் வெற்றி பெறச் செய்துப் பரப்பினாள் என்பது இக்காப்பியத்தின் நிலைக்களனாகும்.
எனவே சமண சமயம் சார்ந்த காப்பியமாக நீலகேசி விளங்குகின்றது. இந்த நீலகேசிக் காப்பியத்தில் உயிர் பற்றிய கருத்துக்களை முனிச்சந்திர பட்டாரகன் என்ற துறவி தருமவுரைச் சருக்கத்தில் அறிவிக்கிறார். இக்கருத்துகள் உயிர்களாகப் பிறந்த அத்தனைக்கும் பொதுவான தன்மையனவாக அமைகின்றன. உயிர் பற்றிய சமண சமயத்தின் கருத்துக்களை இப்பகுதி வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. அவை பற்றிய செய்திகளைத் தொகுத்து உயிர் ஓர்மையை இக்கட்டுரை உணர்த்தி நிற்கின்றது.
“பிறப்பு என்பது வேதனை பெரிதுடைத்து” என்று நீலகேசி உரைத்து அதில் இருந்து விடுதலை பெற துறவியிடம் வழி கேட்கின்றாள். துறவி பிறவியைப் பற்றியும், அப்பிறவியில் பிறக்கும் பிணிகள் பற்றியும், அந்தப் பிணிகளை அழிக்கும் மருந்து பற்றியும் உனக்கு நான் உரைக்கின்றேன் என்று கூறி உயிர் பற்றிய செய்திகளைக் கூறத் தொடங்குகின்றார். இவ்வாறு இக்காப்பியத்தில் உயிர் ஓர்மை பற்றிய சிந்தனைகள் தொடங்கி வைக்கப்படுகின்றன.
உயிர்களில் நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்ற நான்கு வகைகளை நீலகேசி எடுத்துரைக்கின்றது. நரகர் என்போர் இருளிருள், இருள், புகை, சேறு, மணல், பரல், மணி என்ற ஏழு வகைப்பட்ட உலகில் அழுந்திக் கிடக்கிறவர்கள். இவர்கள் முன்று காற்று வளையங்களால் இயங்கக் கூடியவர்கள். விலங்குகள் நிலங்களில் நிலைந்து நிற்பன, இயங்குவன என்று இருவகைப்படுவனவாகும். இவை ஐயறிவுயிர் என்று பாகுபடுத்தப்படுகின்றன. இவை பல காலின, எட்டில் இருந்து இரண்டு இரண்டாக கால்களைக் குறைவாகப் பெற்றன, தவழ்வன, ஊர்வன, பறப்பன என்று கடல் அளவினைவிட அளவில் பெரிய பரப்பின. மக்கள் என்போர் போகம் பெற்றோர், தீவில் வாழ்வோர், கோமான், குற்றம் நிரம்பியோர், தவந்தலை நின்றும் தவத்தின் பயனை அடையார் என்று ஐவகைப் பட்டோர் ஆவர். தேவர் என்போர் பவணர், வியந்தரர், சோதிடர், கற்பர், வேமானியர் என்று ஐவகைப்படுவர்.
இந்நால்வகையினரும் தத்தம் பிறப்பில் பெறும் துயரங்களும் நன்மைகளும் அடுத்தடுத்து நீலகேசியில் எடுத்துரைக்கப் பெறுகின்றது. நரகர் என்போர் உயிரினங்களைக் கொன்றதற்காக நெருப்பில் வீசப்படுவர் என்பது போன்றதான பல துயரங்கள் விவரிக்கப்படுகின்றன. விலங்குகள் ஒன்றினைக் கண்டு ஒன்று பயப்படும். மக்களுக்கு வரும் துன்பம் அடக்கமில்லாதவர்க்கு வரும் துன்பம், அனைவருக்கும் வருந்துன்பம் என்று இருவகைப்படும். தேவர்கட்குத் துன்பமில்லை.
இத்துயரங்களில் இருந்து விடுபட வேண்டுமானல் அதற்கு ஒரே வழி முக்கூட்டு மருத்தினைக் கைக்கொள்ளல் வேண்டும் என்ற பதிலை நீலகேசி தருகின்றது.
பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி
தீர்தற்கு உரியதிரி யோக மருந்திவை
ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்
பேர்த்தபிணி யுள்பிற வார்பெரி தின்பமுற்றே
( நீலகேசி தருமவுரைச்சருக்கம், பாடல் எண். 116)
என்ற பாடல் முக்கூட்டு மருந்து என்ற ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது. இந்தத் திரியோக மருந்தினைக் கைக் கொண்ட உயிர்கள் பிறவாமை என்ற பேரின்பத்தைப் பெறுகின்றன என்ற தெளிவினைத் தரும உரையாக நீலகேசி தருகின்றது.
இப்பாடலில் சுட்டப்படும் ஓர்தல் என்பது நன்ஞானம் எனப்படும். தெளிவு என்பது நற்காட்சியாகும். ஒழுக்கம் என்பது நல்லொழுக்கம் ஆகும். இவை பற்றிய சிறு விளக்கங்கள் பின்வருமாறு.
நன்ஞானம்
` ஊனத்தை இன்றி உயிர் ஆகியஉள் பொருள்கள்தான் நற்கு உணர்தல்’ ஞானம் எனப் பெறும். உயிர் பற்றிய அறிவே நன்ஞானம் என்படுகின்றது. இந்த உயிர் பற்றி அறிந்து கொள்ள அளவைகள் உள்ளன. இந்த அளவைகள் காட்சி, காட்சியல்லாதது என இருவகைப்படும். காட்சி என்பது ஐவகைப்பட்டது. பொறிக்காட்சி, மானதக் காட்சி, அவதிஞானக் காட்சி, மனப்பரியாய ஞானக் காட்சி, கேவல ஞானக் காட்சி என்பன அவையாகும். காட்சியில் அளவை என்பதும் ஐவகைப்படும். அவை நினைவு, மீட்டுணர்வு, ஊகம், அநுமானம், முனிவர் மொழிந்த ஆகம மெய்மொழி என்பனவாகும். இவ்வளவைகளோடு வைப்பு, நயன், புகுவாயில் என்பன குறித்து அறிதலும், ஒப்பற்ற குணமும், மார்க்கணையையும் பெறலும் ஆகியவற்றால் நன்ஞானம் பெறலாம் என்கிறது நீலகேசி.
நற்காட்சி
கடவுள், ஆகமம், பொருள், அளவை, நிகழ்ச்சி, இலிங்கம், சாரித்திரம், பலம் என்ற எட்டுப் பொருள்களையும் மனத்துள் வைத்து, மீட்சி இல்லாததாய் உந்திய இன்ப வெள்ளத்தை பெறும் வேட்கையே நற்காட்சி ஆகும். இக்காட்சியைப் பெறுவதற்குத் தடையாக உலகமுடம், பாசண்டி முடம், தேவமுடம் என்ற முன்று முடங்கள் அமைகின்றன. இவற்றில் இருந்துத் தப்பி அன்பு, அச்சம், ஆசை ஆகியன கடந்து, போலித்துறவினையும், போலி தத்ததுவங்களையும் விலக்கி, எட்டுவகைப்பட்ட செருக்குகளில் இருந்து நீங்குதலே நற்காட்சி பெற்றார் இயல்பு ஆகும். ஐயுறாமை, வேட்கையுறாமை, உவர்ப்புறாமை,மயங்காமை, செய்குற்றம் நீக்கல், திரிந்தாரை நிறுத்தல், காதலுடைமையும், அறங்காட்டலும் என்ற எட்டும் நற்காட்சியின் உறுப்புகள் ஆகும். இவை கைகூடின் நற்காட்சி கிட்டும்.
நல்லொழுக்கம்
நல்லொழுக்கம் என்பது அருகக் கடவுள் திருவாய் மலர்ந்தருளிய மெய்மைகளை உணர்தலில் தொடங்குகின்றது. மேலும் நற்காட்சி, நன்ஞானம் ஆகியனவற்றோடு ஒருவன் இரண்டறக் கலந்து, அருகசிந்தனையை ஏற்படுத்திக் கொண்டு, இவை என்றும் உள்ளத்தில் இருந்து நீங்காமல் ஒழுகுகின்றவன் நல்லொழுக்கம் பெற்றவனாகின்றான். துறவொழுக்கம் பேணுதல், அடங்குதல், பொறுமை முதலிய நல்லறங்களைப் பெற்றிருத்தல், நல்ல நினைவுகளை நினைத்தல், இரு வகைப்பட்ட தவங்களைத் தாங்குதல், உற்றநோய் நோன்றல் ஆகிய எட்டும் நல்லொழுக்கத்தின் இலக்கணம் ஆகும்.
நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகிய முன்றும் பிறவிப் பிணியைத் தேய்க்கின்ற முக்கூட்டு மருந்தாகும். இம்மருந்தினை உண்பதால் ஏற்படும் பயன்கள் பின்வருமாறு.
யோகம் இவற்றை உடனுண்ட உயிர்களெல்லாம்
மாக விசும்பினவர் தம்மொடு மன்னரும்மாய்
போக நுகர்ந்து பொருந்தா வினைபுல்ல லின்றி
ஏகநல் லின்ப மியைந்தால்இழ வில்லை நல்லாய்
( நீலகேசி தருமவுரைச்சருக்கம், பாடல் எண்.126)
ஏக நல்லின்பம் என்ற நிலையை உயிர் அடையவேண்டும் என்பதற்கான தேடலாக இப்பகுதி நீலகேசியில் அமைக்கப் பெற்றுள்ளது. ஏக நல்லின்பம் என்ற ஒன்றே உலக உயிர்களுக்கான ஓர்மைச் சிந்தனையாகும். இந்த ஓர்மையை அடையச் செய்யும் நன்முறையைக் காட்டுவதாக நீலகேசி விளங்குகின்றது.
-----------------------------------------------------------------------------------------

முருகத் தொண்டர்களின்

 முகவரி சேய்த்தொண்டர் புராணம்

முனைவர் மு. பழனியப்பன்

தமிழாய்வுத் துறைத்தலைவர்
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
சிவகங்கை
திருத்தொண்டர்புராணம் என்ற சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நாயன்மார்களின் சிவத் தொண்டினை எடுத்துரைப்பது. இதுபோன்று முருகனடியார்களின் அற்புதத் தொண்டினை விரித்து உரைப்பது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். முருகவேள் திருமுறை என்று தொகுக்கப் பட்ட இறைத்தொகுப்பில் பன்னிரண்டாம் திருமுறையாக அமைவது சேய்த்தொண்டர் புராணம் ஆகும்.
முருகவேள் திருமுறையில் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. ஏழாம் திருமுறை பிற பதிகளைப் போற்றிய திருப்புகழ்ப் பாடல்களால் தொகுக்கப் பெற்றது. கந்தரலங்காரம் கந்தரந்தாதி ஆகியன எட்டாம் திருமுறைகளாயின. ஒன்பதாந்திருமுறை திருவகுப்பு ஆகியது. கந்தரனுப+தி பத்தாம் திருமுறைப் பகுப்பாகியது முற்கால அடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்புகள் பதினோராம் திருமுறையாயின. பன்னிரண்டாம் திருமுறை சேய்த்தொண்டர் புராணம் ஆகும். இதனை இயற்றியவர் தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார் ஆவார்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றாம் ஆண்டில் தணிகைமணி வ.சு. செங்கலவராயப்பிள்ளை அவர்கள் பதினோரு திருமுறைகளாக முருகவவேள் திருமுறையை வடிவமைத்து அவற்றுக்கு சிறப்பான உரை எழுதி வெளியிட்டார். அப்போது பதினோராம் திருமுறைவரை கந்தவேளுக்கு அமைக்கப்பெற்றுவிட்டது. சைவத் திருமுறையை ஒட்டி பன்னிரண்டாம் திருமுறையாகத் திருத்தொண்டர் புராணம் யாராலும் செய்யப்படவில்லையே என்ற ஏக்கம் தணிகைமணி மனதில் ஏற்பட்டு அக்கருத்தை அவர் அப்பதிப்பில் வெளியிட்டார். இந்த ஏக்கம் தீரப் பிறந்தது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். ஆயிரத்து ஐம்பத்திரண்டாம் ஆண்டிலேயே சேய்த்n;தாண்டர் புராணம் இயற்றும் பணி தொடங்கிச் சிற்சில பாடல்கள் திருக்கழுகுன்றத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. அப்பணி சிற்சில் ஆண்டுகளில் முழுமை பெற்று ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்றாம் ஆண்டில் முழுப் புராணமாக ஆகி வெளிவந்தது.
தேனூர்; வரகவி சொக்கலிங்கனார் சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றுவதற்கு முன்பு சேய்த்தொண்டத்தொகை என்பதைப் பாடினார். இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் திருவந்தாதி என்பதையும் இயற்றி இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் புராணத்தை அவர் இயற்றத் தொடங்கினார். இம்முயற்சி பெரியபுராணத்தின் தோற்றத்திற்கு ஆக்கத்திற்குச் சுந்தரர் நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் ஆகியோர் வழிவகுத்த அமைப்பிலேயே நடந்துள்ளது என்பது குறிக்கத்தக்கது. ஆயினும் இச்சான்றோர்களை அடியொற்றி இம்மூவர் முயற்சிகளையும் முன்னுதாரணமாகக் கொண்டுஇ தேனூர் வரகவி சொக்கலிங்கம் அவர்கள் தான் ஒருவராகச் செய்தவை மேற்கண்ட மூன்று படைப்புகள் என்பது குறிக்கத்தக்கது.
சேய்த்தொண்டர் புராணத்தில் அறுபத்தாறு தனியடியார்களும் பன்னிரு தொகையடியார்களும் அவர்களின் வரலாறும் தொண்டும் எடுத்து இயம்பப் பெற்றுள்ளன. அரகரவேல் மயிலென்பார்ஆலயத்தொண்டர் இறந்துமிறவாதார் இனிவரு சேய்த்தொண்டர் கந்தனையே போற்றுவார்> ;செந்தில் வாழ் அந்தணர்> திருத்தணியிற்பிறந்தார்> தொண்டரடித்n;தாண்டர்> பாடாது விடுபட்டோர்> புராணிகர்கள்> முருகன் திருவருளைச் சிந்திப்போர்> முருகனையே பாடுவோர் ஆகியோர் தொகையடியார்கள் ஆவர். >இப்புராணத்துள் ஒளவையார்> மீனாட்சி அம்மையார்> முருகம்மையார் ஆகிய மூன்று பெண்ணடியார்கள் பாடப்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ஏனைய அறுபத்து மூவர் ஆணடியார்கள். ராமலிங்க வள்ளலார்> அருணகிரிநாதர்> குமரகுருபரர்> நக்கீரர்> அகத்தியர்> கச்சியப்ப சிவாச்சாரியார்> பாம்பன் சுவாமிகள் போன்ற பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகனின் தொண்டர்கள்வரை இதனுள் பாடப்பெற்றுள்ளனர். கடைச்சங்ககாலத்தில் வாழ்ந்த முருகனடியார்கள் தொடங்கி இந்தப் புராணம் பாடியுள்ளது. இக்காலத்திற்குப் பின் வரும் அடியார்களைப் போற்றி இனிவரும் சேய்த்தொண்டர் புராணம் என்று இவர் பாடியிருப்பதும் கருதத்தக்கது.
செந்தில்வாழ் அந்தணர் சருக்கம்> கம்பை சூழ் சருக்கம், குமர குருபரச் சருக்கம்> வென்றி மலைச் சருக்கம்> அரஹாரச் சருக்கம்> காவடிச் சருக்கம்> குகனேரிச் சருக்கம்> கல்லாடச்; சருக்கம்> தென்பழநிச் சருக்கம்> நின்றசீர்ச் சருக்கம்> நாரதச் சருக்கம்> வானார்ந்த சருக்கம் ஆகிய பன்னிரண்டு சருக்கங்கள் சேய்த்தொண்டர் புராணத்துள் உள்ளன. இதிலும் சேக்கிழாரின் படைப்பு முறை பின்பற்றப்பெற்றுள்ளது> அதாவது சருக்கங்களின் பெயர்கள் திருத்தொண்டத்தொகைப்பாடல்களின் முதலடி கொண்டுத் தலைப்பிடப்படுவது என்பது சேக்கிழார் தந்தமுறை. இங்கும் சேய்த்தொண்டத் தொகையின் பன்னிரு பாடல்களின் முதற்சீர் சேய்த்தொண்டர் புராணச் சருக்கமாக அமைக்கப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
இப்புராணம் 3333 என்ற தொகையில் விருத்தப் பாவகை பலவற்றால் பாடப்பெற்றுள்ளது. இது நிலம் எனத்தொடங்கி இம்மாநிலம் என முடிகின்றது.
இவ்வாறு வடிவமைப்பில் பெரியபுராணத்தை ஒத்துச் செய்யப்பெற்றுள்ள சேய்த்தொண்டர் புராணம் முருக பக்தியளவில் மிக முக்கியமான பக்திக் காப்பியம் ஆகும். இப்புராணத்தின் சிற்சில பக்தி முத்துக்கள் இக்கட்டுரையில் அளவுகருதிச் சுருக்கி உரைக்கப்பெற்றுள்ளன.
அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சியளித்த அழகைப் பின்வருமாறு சேய்த்தொண்டர் புராணம் பாடுகின்றது. சம்பந்தாண்டானுக்கும் அருணகிரிநாதருக்கும் இடையே நடந்த போட்டியில் அருணகிரிநாதர் முருகனை அழைத்துக்காட்டி வெற்றி பெறுகிறார்.
~~இதனையோர்ந்து அங்கு எம்பிரான் எழுந்து செங்கைகூப்பிநின்
~றதல சேடனார்| என எடுத்ததொர் பா அங்கு ஓத அம்
மதுரகானம் கேட்கவே மய+ர வாகனத்தின்மேல்
சதன கோல கால வேல்கருத்தன் வந்து தோன்றவே|| (1181)
என்று பாடுகின்றார்.
கந்தனை நேரில் கண்டவர்கள் நிலையை
~~ஏற்றினார் யாவருங்கை முடியின் மேல்நின்று இறைஞ்சினார்
பரவசமாய் வீழ்ந்தெழுந்து
போற்றினார் ஐயன்இனிது உருக்கரப்பப் புலம்பினார்
இனியென்று காண்பதென்று
சாற்றினார் ஆன்ற பெரியார்க்குத் தீங்கு சாற்றிய தீமதி
படைத்த சம்பந்தாண்டன்
தோற்றுளான் அருணகிரிநாதர் வாகை சூடினார் என்று
ஆர்த்தவையோர் தொழுதுபோற்றி (1182)
என்ற கந்தனைக் கண்ட அனுபவத்தை மொழிகிறது சேய்த்தொண்டர் புராணம். இனியென்று காண்பது என்று எல்லா உயிர்களும் கந்தனைத் தொழுத காட்சியைக் காட்டி அக்காட்சியைத் தானும் வணங்குவதாகப் போற்றி இப்பாடலை முடித்திருப்பது இவ்வாசிரியரின் கந்தன் மீதான பற்றுதலைக் காட்டுவதாக உள்ளது.
பாம்பன் சுவாமிகளுக்கு காலில் ஏற்பட்ட இடையூற்றை மருத்துவர்கள் தீர்க்கமுடியாதென்று கைவிரித்தபோது> முருகனடியார்கள் பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முகக்கவசத்தைப் பாட அவரின் நோய் நீங்கியது என்பது ஒரு அருள் வரலாறு. இதனை இப்புராணம்
‘‘அவரேகலும் அச்சாலையில் (மருத்துவமனையில் ) அதிபன் பரிவோடு அம்
புவிபேண்பரிகாரம் பலபுரிந்தும் பயனிலாதலால்
இவர் நோய்க்கு அவுடதம்எம்மிடம் இல்லையென்னலும் இம்மா
தவசீலர் முன் அருள் சண்முகக் கவசம்தனை அடியார்
பந்தத்தொடும் பாடிக் குகபரமன் திருவருளைச்
சிந்தித்தனர் சிந்தித்திடும் திருநாள்களில் ஒருநாள்
வந்தித்தவர் முழந்தாண்மிசை வைவேல்இரண்டு ஒன்றாய்
சந்தித்தது என்பொன்றித்து புண்தழும்பூறிய திதைத்தம் (2582)

என்று பாடுகின்றது. சண்முகக் கவசம் பாடிட குகப் பரம்பொருள் பாம்பன் சுவாமிகள் கால் நோயைத் தீர்த்த அதிசயத்தை இப்புராணம் பாடிட அவ்வருள் படிப்போர் நெஞ்சிலும் பரவுகின்றது. இரு வேல்கள் முழங்காலைத் தாங்கிப்பிடித்து ஒரு வேலான காட்சியை ஒரு அன்பர் காண அதன்வழி பாம்பன் சுவாமிகள் பிணி நீங்கியது என்ற இந்தக் காட்சியின் அருள் நிலை சண்முகப்பெருமானின் கருணையை எடுத்துரைப்பதாக உள்ளது.
குமரகுருபரக் குழந்தை பேசாதநிலை பெற்றிருந்தபோது அவர்தம் பெற்றோருடன் இக்கவிஞரும் அழுகின்றார்.

    ‘‘முருகா உன் கிருபையால் அவதரித்தகான் முளையிதுமூங்கையாய்                                                                                                                    அதுகண்டுஏங்கினோம்
  இருபதிற்றிரட்டிமேல் நாலிரண்டு நாள் எய்துமுன் அதைஒழித்து 
                                                                                                                   இனிதுபேசுமா
    அருளுதி இல்லையேல்உயிர்க்கெல்லாம் உயிராயவர் அவர் நினைப்பதை 
                                                                                                                       அளித்திடும்
   கருணைவாரிதி உனக்கபயம் நீள்கடலில் வீழ்ந்தெமதுயிர் விடுவதுண்மை                                                                                                                         காண் (1324)
என்ற இந்த வேண்டுதல் குமரகுருபரா என்று முருகனால் அக்குழந்தை அழைக்கப்பெற்று> அக்குழந்தை வாயில் வேலால் அக்காரம் எழுதி வைக்கப்பட்டது. அக்குழந்தையே குமரகுருபரக்குழந்தை. அதுவே முருகனைப் பற்றிப் பல பனுவல்களைப் பாடியது. இக்குழந்தையைக் கந்தப் பரம்பொருளிடம் பெற்றோர்கள் அபயமாக விட அப்பெருமான் இக்குழந்தையைப் பேசவைக்கவேண்டும். இல்லையென்றால் கடலுள் மாய்வோம் என்ற இப்பெற்றோர் நம்பிக்கை உறுதி பேசாக் குழந்தையைப் பேச வைத்தது. அருள்மணக்கும் பாடல்களைப் பாடவைத்தது.
இவ்வகையில் சேய்த்தொண்டர் புராணம் முருகப்பெருமானின் அடியார்களை அவர்களின் வாழ்வை தொண்டை சோதனைகளை மாற்றிய சாதனைகளை எடுத்துரைப்பதாக அமைகின்றது. முருகத்தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம். இதனைப் போற்றிப்பரவிச் செவ்வேளையும் செவ்வேள் தொண்டர்களையும் அறிந்துப் போற்றி மகிழ்வோம்.

Comments