பக்தி இலக்கியக் கட்டுரைகள்

திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்

முனைவர் மு. பழனியப்பன்

தமிழ்த்துறைத் தலைவர்,
மன்னர் துரைசிங்கம் அரசு
கலைக்கல்லூரி, சிவகங்கை, 630561
thirugnana


அருள் ஞானக்கன்று, திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, காழியர்கோன், தமிழாகரர் போன்ற பல சிறப்புப் பெயர்களுக்கு உரியவர் ஞானசம்பந்தர். அவர் தம் திருமுறைப்பாடல்களில் சமுதாய உணர்வு மேலோங்கப் பாடியுள்ளார். ஆன்மா கடைத்தேறுவது என்ற நிலையில் ஓர் உயிர் மட்டும் கடைத்தேறுவது என்பது எவ்வளவுதான் பெருமை பெற்றது என்றாலும், அது சுயநலம் சார்ந்ததாகிவிடுகின்றது. ஆனால் தன்னுடன் இணைந்த அத்தனை பேரையும் சிவகதிக்கு உள்ளாக்கும் வழிகாட்டியாக அமைந்து, குருவாக அமைந்துச் சமுதாயத்தைக் கடைத்தேற்றும் நாயகராக ஞான சம்பந்தப் பெருமான் விளங்குகின்றார்.
திருநல்லூர்ப் பெருமணத்தில் தன் மணம் காணவந்த அத்தனை பேருக்கும் சிவகதி அளித்த பெருமைக்கு உரியவர் ஞானசம்பந்தப்பெருமான்.
‘‘நந்தி நாமம் நமசிவாயவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம்பந்தன்சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்தவல்லாரெல்லாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே ’’
(திருநல்லூர்ப் பெருமணம். பாடல்.12)
என்ற அவரின் நல்லூர்ப் பெருமண நிறைவுப்பாடல்- அ்னைத்து உயிர்களையும் பந்த பாசம் அறுத்து ஞானநிலைக்குக் கொண்டு சென்றதை அறிவிக்கின்றது. இந்நிலையே ஞானகுருவின் உன்னத பணியாகும்.
அனைத்து உயிர்களும் கடைத்தேறும் இனிய வழியை இப்பதிகத்தின் முதல்பாடல் பெற்றுள்ளது.
‘‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே’’
(திருநல்லூர்ப்பெருமணம், பாடல்.1)
காதல் கொண்டு கசிந்து கண்ணீர் மல்கி நமசிவாய மந்திரத்தை உச்சரிப்பவர்கள் பந்த பாசம் கடப்பார்கள். ஞானநெறி பெறுவார்கள் என்ற தொடக்கத்தை உடைய இப்பாடல் காலம் காலமாகச் சமுதாயம் கடைத்தேறுவதற்கான வழியை எடுத்துரைப்பதாக உள்ளது.
ஞானசம்பந்தரின் இறைப்பாடல்கள் கோயில் தோறும் சென்று பாடப்பெற்றன. அவை ஓரிடத்தில் நின்று இருந்து பாடப்பெற்றன அல்ல. கோயில்கள் பலவற்றிற்குச் சென்று இறைவனை இறையனுபவத்தால் அனுபவித்துப் பாடப்பெற்றவை. இதன் காரணமாக அவை தனிமனித அனுபவமாக அமையாமல் சமுதாய அறங்களைப் போற்றுவதாகவும், சமுதாயத்திற்கு நல்லன செய்வனவாகவும் பாடப்பெற்றுள்ளன.
இவர் பாடிய முதல் பாடலே தந்தை, தாய் தவிர்ந்து மூன்றாமவரான இறைவனை முன்னிறுத்திப் பாடிய பாடல் ஆகும்.இந்த இறையனுபவத்தை அனைத்து உயிர்களும் பெற வேண்டும் என்பதற்காக நாளும் பாடிப் பரவித் தொழுது இறைவனைப் போற்றினார் ஞானசம்பந்தர்.
உயர் சமுதாய நோக்கு
‘‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுவமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாலோடும் பெருந்தகை இருந்ததே’
(திருக்கழுமலம், பாடல்.1)
என்ற இந்தப் பாடல் சம்பந்தரின் சமுதாய நோக்கினைம உணர்த்தும் தலையாய பாடலாகும். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வது என்பது சமுதாயம் சார்ந்த வாழ்க்கை முறையாகும். அவ்வாழ்க்கை முறைக்கு கணவனும் மனைவியுமாக இல்லறம் நடத்தும் வாழ்வு சிறப்பானது. இறைவனும் இறைவியுடன் கலந்தே வீற்றிருக்கிறான் என்று சமுதாய நிலையை இப்பாடல் எடுத்துரைக்கின்றது.
ஞானசம்பந்தரும் அடியார் திருக்கூட்டமும்
ஞானசம்பந்தர் தனியாக எக்கோயில்களுக்கும் சென்றது இல்லை. அவர் வருகிறார் என்றால் அவருடன் அடியார் திருக்கூட்டமும் வரும். வருகின்ற ஊரெல்லாம் மலர்மாலைகள் புனைந்தேத்தி வரவேற்பு கூறுவர். இவ்வகையில் சைவ சமயத்தை சமுதாய இயக்கமாக ஆக்கியவர் ஞான சம்பந்தர்.
அவருடன் உடனுறைந்த அடியார்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணர், குலச்சிறையார், சிறுத்தொண்டர், திருநீலநக்கர், நின்ற சீர் நெடுமாறர், மங்கையர்க்கரசியார், முருகநாயனார், திருநாவுக்கரசர் போன்ற பலர் ஆவர். இவர்களுடன் பலரும் இணைந்து ஞானசம்பந்தக் குழந்தையுடன் சமுதாயப் பணிகளையும் சமயப் பணிகளையும் ஆற்றினர்.
அடியார் திருக்கூடத்தை நாளும் கோளும் தம் இயக்கம் காரணமாக இடையூறு செய்தாலும் அவற்றைப் போக்கவேண்டும் என்று பாடியவர் திருஞான சம்பந்தர். இக்காலம்வரை இப்பதிகமே அடியார் துயர்களைந்துவரும் பதிகமாகும்.
வேயுறுதோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
(திருமறைக்காடு. பாடல். 1)
என்ற அடியார்களை இறைவன் பெயரால் காக்கும் முறைமை பக்திச் சமுதாயத்தை ஞானசம்பந்தர் வளர்த்த முறையாகும்.
அடியார்கள் வருந்தும்போது அவ்வருத்தம் போக்கவும் ஞானசம்பந்தர் முயன்றுள்ளார். கொடிமாடச் செங்குன்றூர் (திருச்சேங்கோடு) என்ற ஊருக்குப் பனிக்காலத்தில் வந்துசேர்ந்தார் ஞானசம்பந்தர். அந்தப் பனிக்காலத்தில் குளிர் சுரம் வருவது இயல்பு. இக்குளிர் சுரம் வராமல் காக்க இறைகருணையை வேண்டிப் பாடல் இயற்றுகிறார் ஞானசம்பந்தர். அடியார்களைக் குளிர் சுரத்தில் இருந்து காப்பாற்றிய முயற்சி இதுவாகும்.
‘‘அவ்வினைக்கு இவ்வினையாம்
என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும்
உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல்
போற்றது நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்
பெறா திரு நீலகண்டம்
(திருக்கொடிமாடச் செங்குன்றூர், பாடல். 1)
இப்பாடலில் செய்வினை வந்து எமை தீண்டப்பெறாமல் இருக்க திருநீலகண்டப்பெருமானை அழைத்துக் காப்பு செய்து கொள்ளுகின்றார் சம்பந்தப் பெருமான். எமை என்ற குறிப்பு சமுதாயம் சார்ந்த குறிப்பு ஆகும். என்னை எனக் குறிக்காமல் எமை என்று தன்மைப் பன்மைநிலையில் தன்னையும் அடியார்களையும் உளப்படுத்தி இப்பதிகம் பாடப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
பஞ்சம் வந்துற்றபோதும் சம்பந்தப் பெருமான் அடியார் திருக்கூட்டத்திற்கு அமுதளித்துப் பாதுகாத்துள்ளார்.. திருவீழிமிழலையில் அடியார்களோடு சம்பந்தப் பெருமான் சென்றபோது அங்கு பஞ்சம் வந்தது. அந்தப் பஞ்சத்தைப் போக்குவதற்காக பீடத்தின் மீது இறைவன் ஒரு பொற்காசினை ஒவ்வொரு நாளும் அளித்து அதன் வழி பொருள் பெற்று அடியார் பசி போக்க வழி செய்தான்.
சம்பந்தருக்கு இறைவனுக்கு அளிக்கப்பெற்ற காசு வட்டம் கொடுத்து அக்காலத்தில் சிறிது நேரம் கழித்தே மதிப்பு பெறுவதை அறிந்து நல்ல காசு நல்க அவர் பதிகம் பாடுகின்றார்.
‘‘வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீரு் ஏசல் இல்லையே’’
(திருவீழிமிழலை,பாடல்.1)
‘‘இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீரு்
கறைகொள் காசினை முறைமை நல்குமே’’
(திருவீழி மிழலை பாடல்.2)
என்ற பாடல் சமுதயாத்திற்கான பசிப்பிணியைப் போக்கச் சம்பந்தப் பெருமானால் செய்யப்பட்ட முயற்சிகளின் சான்றுகள் ஆகும்.
திருக்கொள்ளம்பூதூர் பதிக்கு ஞானசம்பந்தர் அடியார் கூட்டத்துடன் வந்து சேர்ந்தார். முள்ளி ஆறு இடைப்பட்டது. அவ்வாற்றில் வெள்ளம் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது. இந்த வெள்ளத்தில் பரிசல் இட பரிசல்காரர்கள் முன்வரவில்லை. சம்பந்தப் பெருமான் பரிசலில் அடியார்களை ஏறச் செய்து பதிகம் பாட அந்தப் பதிகம் சமுதாயத்தைக் கரையேற்றுகிறது.
‘‘ஓடம் வந்தணையும் கொள்ளம் பூதூர்
ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்குமாறருள் நம்பனே’’
(திருக்கொள்ளம் பூதூர் பாடல். 6)
என்ற பாடலில் ‘செல் உந்துக ’ என்ற தொடர் தானாக பரிசல் செல்லச் சொன்ன தொடராகும்.
திருவோத்தூர் (செய்யாறு) என்ற ஊருக்கு ஞானசம்பந்தர் சென்றபோது அக்கோயிலின் அருகில் ஒரு அடியவர் பனைமரங்களைப் பயிரிட்டு இருந்தார். வளர்ந்தபோது, அவை அனைத்தும் ஆண்பனைகள். அவை காய்க்காதவை என்பதறிந்து அவ்வடியவர் மிகவும் துயரப்பட்டார். அப்பனைகளைப் பெண்பனைகளாக மாற்றி திருவோத்தூர் மக்கள் சைவநெறி நிற்கப் பதிகம் பாடுகின்றார் ஞானசம்பந்தர்.
‘‘குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்பு வார் வினை வீடே’’
(திருவோத்தூர் பாடல். 11)
என்ற திருக்கடைக்காப்புப் பாடலில் ஆண்பனைகள் பெண்பனை ஆனதற்கான அகச்சான்று குறிக்கப்பெற்றுள்ளது.
இவ்வாறு அடியார் திருக்கூட்டமாக விளங்கும் சைவ சமுதாயத்தின் இன்னல்களை அவ்வப்போது களைந்து இன்பமுடன் வாழ தமிழ்மாலை புனைந்தேத்தி, இறையருளை விளங்க வைத்துள்ளார் ஞானசம்பந்தப் பெருந்தகை.
பெண்கள் சமுதாயம்
ஞானசம்பந்தப் பெருமான் காலத்தில் பண்பாடும் ஒழுக்கமும் பெண்களால் மிகவும் போற்றப்பெற்று, பின்பற்றப் பெற்று வந்துள்ளன. பண்பாடும், ஒழுக்கமும், சைவமும் பேணிய பெண்களுக்கு இன்னல் நேர்ந்த காலத்தில், அவை தன் காதுகளுக்கு எட்டிய நிலையில் அப்பெண்களின் இன்னல்களைப் போக்க பதிகம் பாடியுள்ளார் ஞான சம்பந்தப் பெருந்தகை.
கொல்லிமழவன் மகள்
சம்பந்தர் காலத்தில் திருபாலச்சிரமம் என்ற ஊரை ஆண்டவன் கொல்லி மழவன் ஆவான். இவனின் மகள் முயலக நோயால் பாதிக்கப்பெற்று இருந்தாள். மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் கோயிலில் உள்ள இறைவனிடத்தில் இம்முயலக நோய் பெற்ற மகளை அடைக்கலப்படுத்தினான் கொல்லி மழவன்.
அவ்வூர்ப் பகுதிக்கு வந்த ஞானசம்பந்தர் இப்பெண்ணின் நோய் நீங்(க்)கப் பாடுகின்றார்.
‘‘துணிவளர் திங்களர் துளங்கி விளங்கச்
சுடர்ச் சுடைசுற்றி முடித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ
ஆரிடமும் பல தேர்வர்
அணிவளர் கோலம் எல்லாம் செய்து பாச்சில்
ஆச்சிரமத்து உறைகின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல் செய்வதோ இவர் மாண்பே’’
(திருப்பாச்சிலாசிரமம் பாடல்.1)
என்ற இந்தப்பாடல் ‘மங்கை வாட நோய் செய்யலாமா’ என்றுப் பெண்ணுக்கு இரங்கும் நிலையில் அமைந்துள்ளது.
வைப்பூர் தாமன் மகள்
திருமருகல் என்னும் இடத்திற்கு ஞானசம்பந்தர் வந்துசேர்ந்தபோது வைப்பூர் தாமன் என்பவரின் மகளுக்கு ஏற்பட்ட இன்னலைத் தீர்த்தருள முனைகின்றார்.
வைப்பூரில் வாழ்ந்த தாமன் என்பவருக்கு ஏழுமகள்கள் இருந்தனர். இவர்களுள் அறுவரை தன் சொந்தமான இளைஞன் ஒருவனுக்குத் தருவதாகச் சொல்லி வேறு வேறு இடங்களுக்குப் பொருள் கருதி மணம் முடித்துக் கொடுத்துவிடுகிறான் வைப்பூர் தாமன். ஏழாமவளாகிய இவள் தன் சொந்த மாமன் மகனாகிய அவ்விளைஞனைக் கரம் பிடிக்க நினைத்து இவனுடன் உடன்போக்கு வருகிறாள். வந்த இடத்தில் இரவு நேரம் வந்துவிட திருமருகலில் இவர்கள் தனித்தனியாக உறங்குகின்றனர். அப்போது ஒரு பாம்பு மணக்க இருந்த ஆண்மகனைக் கடித்துவிட இவள் தந்தையின் சார்பினையும், மணக்க இருந்தவன் சார்பினையும் இழந்து தவிக்கிறாள். இந்நிலையில் ஞானசம்பந்தர் இப்பெண்ணுக்கு உதவிட முன் வருகிறார்.
‘‘வழுவால் பெருமான்கழல் வாழ்க எனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாளுடை யாய் மருகற் பெருமான்
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே’’
(திருமருகல். பாடல். 7)
துயர் பெற்ற இந்தப் பெண் ‘‘பெருமான் கழல் வாழ்க’ என்று யாராவது சொன்னாலோ அல்லது இந்தச் சத்தம் கேட்டாலோ இறைவனை நினைத்து எழுந்து வணங்குவாள். இரவு பகல் எந்நேரமும் இறைசிந்தனையுடன் இருப்பாள். அப்படிப் பட்ட இவளிடத்து எழுந்த் துயரத்தை- மழுப்படை கொண்ட பிரானே! நீக்குக என்று பதிகத்தின் வழி வேண்டுகோள் வைக்கின்றார் ஞானசம்பந்தப்பெருமான்.
சிவநேசர் மகள்
மயிலாப்பூரில் வாழ்ந்தவர் சிவநேசர் என்ற செல்வர். அவரின் அருமை மகள் பூம்பாவை. அவள் வளர்ந்து வரும் காலத்தில் அவளைச் சம்பந்தருக்கு உரியவளாகவே கருதி சிவநேசர் உளக்கருத்து கொண்டு வளர்த்துவந்தார். அவளை ஒரு நாள் அரவு தீண்டிவிட சம்பந்தருக்கு உரிய பொருள் – சம்பந்தருக்கே ஆகட்டும் என்று அவர் எண்ணினார். இதன் காரணமாக அவள் உடலை எரித்து அதனின்று கிடைத்த எலும்புகளை ஒரு பானையில் வைத்து சிவநேசர் காத்து வந்தார்.
இந்நேரத்தில் ஞானசம்பந்தர் திருமயிலைக்கு எழுந்தருள, அவரிடம் எலும்பு வடிவில் உள்ள தன் மகளை எழுப்பித் தந்து, அவளைத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் சிவநேசர்.
ஞானசம்பந்தப் பெருந்தகை எலும்புகள் உள்ள கலயத்தை இறைவன் முன்வைத்துப் பதிகம் பாடுகின்றார்.
‘‘மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஓட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்’’
(திருமயிலை, பாடல்.1)
என்ற இந்தப் பாடல் தொடங்கி பூம்பாவை பொருட்டு பதினோரு பாடல்கள் பாடுகின்றார். இந்தப் பாடல்கள் முடியும் நிலையில் பூம்பாவை அன்றைய நிலைக்கு எப்படி வளர்ந்திருப்பாளோ அதே எழிலுடன் தோன்றி அனைவரும் அதிசயப்படவைக்கிறாள். என்னால் இறை துணைகொண்டு பிறப்பிக்கப்பட்ட இவள் என் மகள் என்று ஏற்கிறார் ஞானசம்பந்தர்.


இவ்வாறு இறைவழி நின்ற பெண்களின் துயரங்களைப் போக்கி சமுதாயத்தில் இறைநலத்துடன் வாழும் பெண்களுக்கு உறுதுணை புரிந்துள்ளார் ஞானசம்பந்தப் பெருந்தகை.
அரசியல் சமுதாயம்
சமுதாயத்தின் ஒரு பங்கினரான அடியார்களையும், மற்றொரு பங்கினரான பெண்களையும் காத்து இறைநலம் பெருக்கிய ஞானசம்பந்தப் பெருந்தகை மதுரையில் அரசு நடத்தும் கூன்பாண்டிய மன்னனை சைவசமயச் சார்பால் நின்றசீர் நெடுமாறனாக்கி, சைவம் தழைத்தோங்க வழி செய்தார். மங்கையர்க்கரசியார் துணைகொண்டு, குலச்சிறையார் வழி பற்றி மதுரையில் நுழைந்து சமணரை அனல்வாதம், புனல்வாதம் ஆகியவற்றில் வென்று, அவர் செய்த சமுதாயப் பணி பாண்டிய நாட்டையே திருத்தியது.
மதுரைக்கு ஞானசம்பந்தரை வரவழைத்த மங்கையர்க்கரசியாரைப் பற்றியும், குலச்சிறையரைப் பற்றியும் பாடல்கள் பாடியிருப்பது என்பது யாருக்கும் கிட்டாத பேறு. பூம்பாவைக்காகத் தனித்த பதிகம் பாடிய சம்பந்தர் இவ்விருவருக்காகத் தனித்த பாடல்கள் பாடியிருப்பது சமுதாயத்தைத் திருத்த இவர்கள் கொண்ட நன்னோக்கத்திற்கு ஞானசம்பந்தர் காட்டிய நன்றியாகும்..
‘‘மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மடமானி
பங்கசயச்செல்வி பாண்டிமாதேவி
பணிசெய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன்நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாயவாதும் இதுவே’’ (ஆலவாய். பாடல்.1)
என்ற பாடலில் பாண்டிமாதேவியாக இருந்தாலும் நாளும் சிவப்பணிகளைச் செய்யும் தன்மை பெற்றவர் மங்கையர்க்கரசியார். இவரின் பெருமைக்கு இப்பாடல் நல்ல சான்று.
வெற்றவே அடியார் அடிமிசை வீழும்
விருப்பினன் வெள்ளைநீறு அணியும்
கொற்றவன் தனக்கு மந்திரியாய
குலச்சிறை குலாவிநின்று ஏத்தும்
ஒற்றை வெள்விடையவன் உம்பரார் தலைவன்
உலகில் இயற்கை ஒழித்திட்ட
உற்றவர்க்கு அற்ற சிவனுறை கின்ற
ஆலவா யாவதும் இதுவே’’
(ஆலவாய் பாடல்.2)
என்று அமைச்சர் குலச்சிறையாரை- வெண்ணீறு அணிந்தவர், சிவனடியார்களைப் பணிபவர். அக புறப் பற்றுகள் இல்லாதவர் என்று பெருமைப்படுத்துகிறது இப்பாடல்.
இவ்வகையில் சமுதாயத்தின் நன்மைக்காகப் போராடும் நல்லோரை நன்றியோடு நினைந்து பாடும் ஞானசம்பந்தப் பெருந்தகையின் பாராட்டு மொழிகள் இன்றும் சைவம் காக்கப் போராடும் அன்பர்களுக்கு ஊன்றுகோலாகும்.
மன்னன் அவையில் நடைபெறும் போட்டிகளில் ‘குழந்தையாக உள்ள ஞானசம்பந்தர் வெற்றி பெறவேண்டுமே’ என்ற கவலை மங்கையர்க்கரசியார் உள்ளத்தை வாட்டியது. அதனைப் போக்க
‘‘மானினேர்விழி மாதாராய் வாழு
திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாய் ஒரு பாலன் ஈங்கு வன்
என்றுநீ பரிவு எய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய
இடங்களிற் பல அல்லல்சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன் திரு
ஆலவாய் அரன் நிற்கவே’’
(ஆலவாய்.(6).பாடல் 1)
என்ற இந்த ஞானசம்பந்திரன் பாடல் ‘‘பாலன் என்று கலங்கவேண்டாம்’’ என்று மங்கையார்க்கரசியாருக்கு மனவலிமையை ஏற்படுத்துகின்றது. ஆனைமலை போன்ற இடங்களில் உறையும் மாற்றுச் சமயத்தாரால் எனக்கு எவ்வகையிலும் துன்பம் வாராது அரன் காப்பார் என்ற நம்பிக்கை வெல்கிறது. ஞானசம்பந்தக்குழந்தை வெற்றிபெறுகின்றது.
வென்றபின் பாடிய பதிகத்தில் ஒருபாடல் பின்வருமாறு.
‘‘குற்றம்நீ குணங்கள் நீ கூடலாலவாயிலாய்
சுற்றம் நீ, பிரானும் நீ, தொடர்ந்திலங்கு சோதிநீ
கற்ற நூற் கருத்தும் நீ, அருத்தமின்பம் என்றிவை
முற்றுநீ புகழ்ந்துமுன் உரைப்பதென் முகம்மனே’’
(ஆலவாய், 8 பாடல்.3)
என்ற இந்தப்பாடல் வென்றபின் ஆலவாய் அண்ணலைப் பாடிய பாடல் ஆகும். இறைவனைச் சுற்றமாகவும், முற்றாவும் காணும் சமுதாய நெறியே சம்பந்தரின் நெறியாகும்.
அடியார் குழாத்தைக் காத்து, பெண்களின் துயரம் களைந்து, பாண்டிய நாட்டைச் சைவ நாடாக்கி ஞானசம்பந்தப் பெருந்தகை சமுதாயப் பணிகள் பலவற்றைச் செய்துள்ளார். ஞானசம்ப்ந்தப் பெருந்தகையின் சமுதாயப் பணிகள் சுரம் நீக்குவது, முயலக நோய் நீக்குவது, போட்டிகளில் வெல்வது, இறந்தவர்களை மீட்பது என்று படிப்படியாக வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் காரணமாக அவரின் அருளாற்றல் ஆண்டவனின் கருணையால் வளர்விக்கப்பெற்றுள்ளது என்பது தெளிவாகின்றது. நிறைவில் தன்னுடன் தன்னை நாடிவந்த அடியார்கள் அனைவரையும் தன்னுள் அடக்கிச் சிவநிலை எய்தச் செய்தது அவரின் பெருமணப் பேரதிசயமாகும்.
தனிமனிதர் என்ற நிலைப்பட்டவர் ஞான சம்பந்தர் என்றாலும் சமுதாயத்தை நோக்கிய அவரின் வளமான எண்ணங்கள் சைவ ச

முதாயத்தை உருவாக்கி அவரைச் சைவத்தின் தலைப்பிள்ளையாக்கியுள்ளது என்பது நமக்குக் கிடைத்த பெரும்பேறு.
--------------------------------------------------------------------------------------------

நிறைவைத் தரும் காசி வாழ்வு

முனைவர் மு. பழனியப்பன்

 முதுகலைத் தமிழ்த் துறைத்  தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை.  

          இந்திய மண்ணில் உள்ள புண்ணிய நகரங்களில் ஒன்று காசி. இங்கு பாயும் கங்கை நதியானது மனிதர்களின் பாவங்களைப் போக்கி அவர்களின் ஆன்மாவை அமைதிப்படுத்துகிறது. இந்தியாவின்  பல்வகை சமயங்களின் கேந்திரமாகவும் இது விளங்குகிறது.  காசியில் சைவம், வைணவம், பௌத்தம், இசுலாம் போன்ற பல சமயம் சார்  இடங்கள், மடங்கள், நிறுவனங்கள் அமைந்துள்ளன.
          இதன் பெருமை சொல்லில் அடங்காததாக உள்ளது. ‘இத்தலத்தில் உயிர் நீங்கும் ஆன்மாக்களுக்குப் பார்வதி பிராட்டியார் சிரம பரிகாரம் செய்யச் சிவமூர்த்தி தாரக மந்திரம்  உபதேசித்து, முக்தி ஈவார்” என்று இத்தலத்தின் பெருமையை உரைக்கிறது அபிதானசிந்தாமணி (ப. 481)
இந்நகருக்குப் பல பெயர்கள் உண்டு. ‘இந்த மகா தலத்தில் ஐந்து குரோசம் சிவலிங்கங்கள் இருத்தலால் ஆநந்தகானம் எனவும், இறந்த உயிரை  அழித்தலாலும், வேதியன் எடுத்த பிடிமணலில் தோன்றிய சிவலிங்கமிருத்தலாலும் அவிமுத்தம் எனவும், ஆன்மாக்கட்குச் சிவானந்தமளித்தலால் ஆனந்தகானம் எனவும், சர்வசங்கார காலத்தில் பூதங்கள் ஒடுங்குமிடம் ஆதலால் மாமயானம் எனவும், சிவமூர்த்தி சோதியுருவாய் எழுந்தருளியிருத்தலால் காசி எனவும், உயிர்க்குத் தருமம் அளித்தலால்  தருமவனம் எனவும் பெயர் பெறும். (மேலது ப. 482)
          இவ்வாறு பெருமை கொண்ட காசி மாநகரைப் பற்றிய பக்தி சிற்றிலக்கியம் காசிக்கலம்பகம் ஆகும். இதனை எழுதியவர் குமரகுருபரர் ஆவார். இவர் கங்கைக் கரையில் மடம் ஒன்றை நிறுவினார். இவர்  தாமிரபரணி ஆற்றின் கரையில் பிறந்து, காவிரியாற்றின் கரையில் வளர்ந்து, கங்கையாற்றின் கரையில் வாழ்வில் நிறைந்தவர். தன் வாழ்நாளின் நிறைவுப் பகுதியைக் காசியில் மடம் கட்டி அங்கேயே வாழ்ந்து நிறைத்தார். குமரகுருபரர் கட்டிய காசிமடம் கங்கைக்கரையில் ஓங்கி உயர்ந்து நின்று இன்றளவும் தமிழும் சைவமும் வளர்த்து வருகிறது.
          குமரகுருரர் தன் குருவாக தருமை ஆதீன நான்காம் குருநாதராம் ஸ்ரீமாசிலாமணி தேசிகரைப் பெற்றார். அவர் வழிகாட்டல்படி திருப்பனந்தாள் திருமடத்தை நிறுவினார்.  குருவாணையின்படி குமரகுருபரர் காசியாத்திரை மேற்கொண்டார். இவர் பயணம் மேற்கொண்ட காலத்தில் இசுலாமிய ஆட்சி காசியில் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக சைவ சமயம் சற்று ஒடுக்கம் பெற்றிருந்தது. காசிக்குச் சென்ற குமரகுருபரர் காசி பாதுஷாவிடம்  சைவத்தின் பெருமையை நிலைநாட்டி காசியில் மடம் கட்ட கங்கைக்கரையில் நிலம் பெற்றார்.
          காசியை ஆண்ட பாதுஷாவிடம் இந்துஸ்தானி மொழியில் பேச இந்திமொழியைக் கற்றார். சகலகலா வல்லி மாலை பாடித் தன் மொழித்திறத்தை வளர்த்து, பாதுஷாவிடம் பேசினார். பாதுஷாவின் அவைக்குச் சிங்கத்தில் ஏறிச் சென்றார். மேலும் பாதுஷாவின் அவையில் தரப்பெற்ற நெருப்புக்கம்பிகளைக் கைகளால் தொட்டு எவ்விதப் பாதிப்பும் அடையாமல்  இயல்பாய் இருந்தார். இத்தனைச் சோதனைகளுக்குப் பின் பாதுஷாவின் ஆணை பெற்றுக் காசியில் சைவம் சிறக்க ஸ்ரீகுமாரசாமி மடம் கண்டார்.
          இதுவே  திருப்பனந்தாள் மடத்தின் தலைமை மடமாக குமரகுருபரர் காலத்தில் அமைந்தது.  இவரைத் தொடர்ந்து  வந்த ஐந்துஅருளாளர்கள் ஸ்ரீ குமாரசுவாமி மடத்தின் தலைமை ஏற்று அருட்பணி செய்து வநதார்கள்.ஆறாம் அதிபராகப் பதவி ஏற்ற ஸ்ரீ தில்லைநாயக சுவாமிகள் தென்னாட்டில் உள்ள திருமடத்திற்குச் சொந்தமான சொத்துக்களைப் பாதுகாக்க ஏதுவாகத் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் இப்போதுள்ள காசித்திருமடத்தை நிறுவினார். காசியிலும் திருப்பனந்தாளிலும் மடங்கள் இருந்தாலும் இரண்டும் ஓரே நிறுவனமே. திருப்பனந்தாள் திருமடம் காலப்போக்கில் தலைமை இடமாகத் தொண்டாற்றி வரலாயிற்று. இத்திருமடத்து அதிபர்களைக் ”காசிவாசி” என்றே அழைப்பர். இது காசியின் தொடர்பால் ஏற்பட்ட முறைமை ஆகும்.
          இவ்வாறு காசிக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பினைத் திருப்பனந்தாள் மடம் ஏற்படுத்திக்கொடுத்தது. இம்மடத்தின் முதல் அ்திபரான குமருகுருபரர் பல பக்திப்பனுவல்களை எழுதியவர். காசிக்கலம்பகம்,  சகல கலா வல்லி மாலை போன்வற்றில் காசி அனுபவம் பற்றிக் குமரகுருபரர் குறித்துள்ளார்.
          காசியில் சைவம் செழிக்கச் செய்த வரலாறுகள் காசிக்கலம்பகத்தில் ஆங்காங்கே காட்டப்பெற்றுள்ளன. சகல கலா வல்லி  மாலையிலும் சில குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இசுலாம் சமயத்தவர்கள் சைவ மடத்திற்கு இடமளித்த வரலாறு   பற்றிய சிற்சில செய்திகள் இவ்விலக்கியங்களில் காணப்படுகின்றன. இக்குறிப்புகள் இவ்விரு சமயங்களுக்கு இடையேயான ஒட்டு உறவினைக் காட்டுவதாக உள்ளது.
காசியின் சிறப்பு
          காசிக் கலம்பகத்தில் காசியின் சிறப்பு பலபட எடுத்துரைக்கப்பெறுகிறது. இப்பெருமைகளைப் படிக்கும்போது காசிக்கு சென்றார்க்கு அவை  தாம் கண்டவைகளை மீளவும் மனக்கண்ணில் காணச் செய்யும். காசியைக் காணாதவர்க்குக் காசியைக் காணவேண்டும் என்று ஆவலை ஏற்படுத்தும்.
                    நகரமாய்மறைச் சிகர மானதால்
                    மகர மாயினான் நகரில் காசியே (காசிக்கலம்பகம் 68)
காசி நகரம் வேதங்கள் கூறும்  மெய்ப்பொருளின் சிகரமாக விளங்குவதாகும். அங்குள்ள இறைவன் உயிர்களின் ஆணவ மலத்தை அழிக்கக் கூடியவன் என்று இதன் பெருமையைப் பாடுகிறார் குமரகுருபரர்.  
          காசியில் சொல்லப்படும் சொல் எல்லாம்  வேதச்சொற்களே ஆகும். அங்கு நல்லறமே எங்கும் நிறைந்திருக்கும். முக்திக்கு ஏதுவாக அமைவது இத்தலமே என்று காசி முக்தியளிக்கும் தலமாகக் காட்டப்பெறுகின்றது.  
          ”சொல்லாவது மறையே சொல்லுவது நல்லறமே
          இல்லாவது முத்திக்கு ஏதுவாம் இத்தலமே”(20)
காசியானது மனிதர்களுக்குப் பெருவாழ்வு நல்கும் என்று போற்றப்பெறுகிறது.  மனிதரின் நிறைவுக் காலத்தில் அவர்களுக்கு முதுமை வந்து சேரும்போது அடைக்கலமாக அடையவேண்டிய நகரம் காசியாகும். இந்நகரில் இறப்பதால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனை வலியுறுத்தும் நிலையில்
          ‘‘படுத்த பாயுடனே பிணி மூழ்கினும் பல்விழுந்து நரைத்து அறமூப்பினும்    
          அடுத்தது ஈங்கு இவர்க்கே பெருவாழ்வு எனும் அப்பெரும் பதி எப்பதி என்பீரேல்
          விடுத்துவிட்டு இந்திரத் திருவும் புவி வெண்குடைக்குள் இடும் அரசாட்சியும்
          கடுத்ததும்பு களத்தரைத் தேடுவார் காதலித்து வருந்திருக் காசியே” (24)
என்ற நிலையில்  மூப்படையும் காலத்தில் பெருவாழ்வு பெறவேண்டுமானல் காசிக்கு வரவேண்டும் என்கிறார்  குமரகுருபரர்.  இப்பாடலில் உள்ள வெண்குடைக்குள் இடும் அரசாட்சி என்பது காசி நகர அரசாட்சியை மறைமுகமாகக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
          காசிக்கு மற்றொரு பெயர் அவிமுத்தம். இப்பெயராலும் காசியைப் பாரட்டுகிறார் குமரகுருபரர்.
          ‘அகமே அவிமுத்தம் ஐயர் இவர்க்கு ஆகம்
          சகமேழும் ஈன்று எடுத்ததாயே – மிகமேவும்
          எண்ணம் பரமே எமக்குஅளித்தல் முச்சுடரும்
          கண்அம் பரமே கலை” (33)
சிவபெருமான் இருக்கும் இடம் அவிமுத்தம் எனப்படும் காசியே ஆகும். இச்சிவனாருக்கு உடல் என்பது ஏழு உலகங்களையும் ஈன்ற பெருமாட்டியாகிய உமையம்பிகையின் உடம்பே ஆகும். இவர் எமக்கு பரமுத்தி அளிப்பார். இவருக்குக் கண்கள் முச்சுடர்கள். இவர் அணிந்திருக்கும் ஆடை திசைகளே ஆகும்.
இவ்வளவில் குமரகுருபரர் தனக்கு பரமுத்தி அளிக்கும் கடவுளாகக் காசிக்கடவுளை வணங்கியுள்ளார். மேலும் இவரின் பாடல்களைக் காசிநாதர் விரும்பிக் கேட்கிறார் என்பதையும் மற்றொரு பாடலில் பதிவு செய்துள்ளார். ‘‘காது கொண்டு எம் கவிதை கொண்டு ஆட்கொண்டகாசி நாதர் கருத்து ஏது அறிகிலேம்”  (36) என்ற பாடலடிகள் குமரகுருபரரின் பாடல்களைக் கேட்டுக் காசிநாதர் ஆட்கொண்டுள்ளார் என்பதை அறிவிப்பனவாக உள்ளன. குமரகுருபரருக்கு காசிநாதர் ‘அடித் தொழும்பு செய்து ஒழுகும் இவ்வேலை ஈந்தார் எமக்கு” (92) என்று அடிமைத் தொழில் செய்ய வழிவகை செய்தாராம்.
இவ்வாறு பல இடங்களில் தன்னை உளப்படுத்திக் காசிக்கலம்பகத்தைப் பாடியுள்ளார் குமரகுருபரர்.
மேலும் காசி நகருக்குச் சென்று காசிநாதருக்குப் பூ, பச்சிலை கொண்டு அர்ச்சனைகள் செய்ய வேண்டுவதில்லை. இருந்தாலும் காசி வந்தவர் அனைருக்கும் சாரூபப் பதவியை அருள்பவர் காசிநாதர் என்கிறார் குமரகுருபரர். ‘‘போது கொண்டு ஒரு பச்சிலை கொண்டுதாம் பூசை செய்திலர் புண்டரிகப்பதம்  ஏது கொண்டு கொடுப்பர்” (36) என்பது குமரகுருபரர் மொழியாகும். காசியில் விசுவநாதரை வணங்காதவர்களும் இருந்துள்ளனர் என்பது இதன்வழி தெரிகிறது. வணங்காதவர்க்கும் முக்தியளிப்பவர் காசிநாதர் ஆவார்.  காசிக்கு வந்து சேர்ந்தவர் யாவரும் முக்தி பெறுவர் என்பது இதன்வழி அறியத்தக்கது.
காசி நகரில் பாதுஷாவைச் சந்திக்கச் சென்ற அனுபவங்கள் சில குறிப்பாகக் காசிக்கலம்பகத்தில் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளது.
“தடமலர்ப் படப்பைத் தண்டலைக் காசிக்
கடிநகர் புரக்குங் கண்ணுதற் செல்வன்
வேம்புங் கடுவுந் தேம்பி ழி யாகச்
செஞ்செவி கைப்பயான் றெரித்த சின்மொழி
அஞ்செவி மடுத்தாங் களித்தன னதனால்
வேத்தவை வியப்ப விரைத்தேன் பில்கும்
தேத்தமிழ் தெளிக்குஞ் செந்நாப் புலவீர்
மண்மகள் கவிகைத் தண்ணிழற் றுஞ்சப்
புரவுபூண் டிந்திர திருவொடும் பொலிந்து
முடிவினு முடியா முழுநலங் கொடுக்கும்
செந்நெறி வினவுதி ராயி னின்னிசைப்
பாத்தொடுத் தடுத்த பரஞ்சுடரை
நாத்தமும் பிருக்க வேத்துமி னீரே” (101)
என்ற இந்தப் பகுதியில்  குமரகுருபரரின் சொற்கள் வேம்பம்பழம், கடுக்காய் போல் முதலில் கசப்பாக இருந்தது  என்று குறிக்கப்படுகிறது. இச்சொற்கள் பின்பு  வேந்தவை வியக்கும் வகையில் அமைந்தன என்றும் குறிக்கப்படுகிறது. ஆகவே புலவர்களே நல்ல தமிழ்ப்பாடல்களைக் காசி நாதர் மீது பாடுக என்று குறிப்பால் தான் வேந்தவையில் வெற்றி பெற்ற செய்தியை நிறைவுப் பாடலான காசிக்கலம்பகத்தின் நூற்றி யொன்றாவது பாடலில் வைக்கின்றார். இவ்வாறு பாடுவதால் இந்திரனை ஒத்த பதவி அடைய முடியும் என்ற நிலையில் இப்பாடல் கடைக்காப்பு பாடலாக அமைகின்றது.  ‘‘   மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்      பண்கண்டளவில் பணியச் செய்வாய் ” என்று மேலும் ஒரு குறிப்பு சகல கலாவல்லி மாலையில் இடம்பெறுகின்றது. காசிநகர் மன்னர் குமரகுருபரர் பாடும் பாடலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற வேட்கை இந்த மாலையில் காணப்படுகிறது.
          இவ்வளவில் வடநாட்டுக்குச் சென்று பிற மத ஆட்சியில் சைவம் தழைக்கக் குமரகுருபரர்  முயன்ற முயற்சிகளை அறிந்து கொள்ளமுடிகின்றது.
          காசியிலேயே தன் நிறைவு காலம் வரை வாழ்ந்து அங்கேயே தன்னை ஐக்கியமாக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணினார் குமரகுருபரர். அந்த விழைவும் காசிக்கலம்பகப் பாடல் ஒன்றில் பதிவு செய்யப்பெற்றுள்ளது.
          ‘‘காணும்காணும் நதிகள் எல்லாம் புனல் கங்கையே அங்கு உள தெய்வம்யாவையும்
          தாணு எங்கள் அகிலேசரே மற்றைத் தலங்கள் யாவும் தடமதில் காசியே
          பூணும் ஆசை மற்று ஒன்றே உடல்விடும்போது நன்மணிகர்ணிகை பூத்துறை
          பேணுமாறு பெற வேண்டும் அப்புறம் பேயோடு ஆடினும் ஆடப் பெறுதுமே” (17)
குமருகுருபரருக்கு பார்க்கும் நதி எல்லாம் கங்கையாகத் தெரிகின்றது. ஆற்றின் கரையில் உள்ள தெய்வங்கள் எல்லாம் சிவனாகவே காட்சி தருகிறது. பார்க்கும் கோயில்கள் எல்லாம் விசுவநாதர் ஆலயமாகவேத் தெரிகிறது. ஆனால் கங்கைக்கும் மற்ற நதிகளுக்கும் உள்ள வேற்றுமை கங்கையில் உள்ள மணிகர்ணிகை என்ற நீர்த்துறையே ஆகும். அங்கு  இறந்தோர் காதுகளி்ல் பிரணவ மந்திரம் ஓதப்படும். மணி என்றால் பிரணவம் என்று பொருள். பிரணவ மந்திரம் ஓதப்படுவதன் காரணமாக இறந்த உடல், உயிர் ஆகியன மீளும் பிறவாமை என்ற பெருநெறியில் நிற்கும். முக்தி கிடைக்கும். பேயுடன் ஆடும் பிரான் போல் அவர்கள் பண்பு ஆகும். ஆகவே அந்நிலை அடைவதே தனக்குத் தக்கது என்கிறார் குமரகுருபரர்.
          இவ்வாறு காசி என்ற புண்ணிய தலத்தை மனித உயிர்கள் நிறைநிலையாகக் கொள்ளவேண்டும் என்று காட்டித் தானும் அந்த வழியில் நின்று நிலைத்த வாழ்வு பெற்றவர் குமரகுருபரர் . அவரின் பனுவல்களில் காசிக் கலம்பகம் காசி நகரின்  முக்தித் தன்மையைப் பாடுவது. காசி நகரத்தின் சமய நிலையைப் பாடுவது. காசிநகரின் மரபழகைப் பாடுவது. அவ்வகையில் இச்சமய இலக்கியம் பண்பாட்டு நோக்குடையதாக விளங்குகிறது.
---------------------------------------------------------
https://puthu.thinnai.com/?p=39070

நாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்

முனைவர் மு. பழனியப்பன்

இணைப்பேராசிரியர்,

மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருவாடானை
பாண்டியநாடு தமிழ் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்கு வகித்த நாடு ஆகும். பாண்டிய நாடு, சங்க காலத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது. பக்தி இலக்கிய காலத்தில் ஞான சம்பந்தப் பெருமானை அழைத்து வந்து சைவம் செழிக்க வைத்தது. தொடர்ந்து குமரகுருபரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் என்று நாளும் பக்திப் பயிர் வளர்க்கும் பகுதியாக பாண்டியநாட்டுப்பகுதி விளங்கி வருகின்றனது.
பக்தியும் தமிழும் ஒருசேர வளர்க்கும் பாண்டியநாட்டின் பல பகுதிகளுக்கு அருணகிரிநாதப்பெருமான் வருகை புரிந்து முருகன் உறையும் இடங்களைத் தேடிக் கண்டறிந்து, திருப்புகழ்பாடிப் பரவியுள்ளார். குளந்தைநகர் (பெரிய குளம்), தனிச்சயம், மதுரை, ஸ்ரீ புருஷமங்கை (வானமாமலை), இலஞ்சி, குற்றாலம், ஆய்க்குடி, திருப்புத்தூர், திருவாடானை, உத்தரகோசமங்கை, இராமேசுவரம் போன்ற பல பாண்டி நாட்டுத் தலங்களில் உள்ள முருகப்பெருமானைத் துதித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.
திருவாடானை என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை அருணகிரிநாதர் பாடியுள்ளார். திருவாடானை என்ற தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று பல நிலைகளிலும் பெருமை வாய்ந்தது. வாருணி என்ற தேவன் துர்வாச முனிவரால் யானை உடலும் ஆட்டுத்தலையும் உள்ள விலங்காக மாறச் சாபம் பெற்றான். அவ்வுருவத்துடன் வந்து வழிபட்ட தலம் திருவாடானை ஆகும். ஞானசம்பந்தப் பெருமான் இங்கு வந்து இங்குள்ள ஆதி இரத்தினேஸ்வரப்பெருமானைப் பாடிப்பரவியுள்ளார். இங்குள்ள அம்மன் சிநேக வல்லி ஆவார். இக்கோயிலின் சுவாமி சன்னதிக்குச் செல்லும் நுழைவாயிலில் ஞான தண்டாயுதபாணியாக முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.
உள்ளே சுவாமி சன்னதியின் சுற்றுப்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் நின்று அருள்பாலிக்கிறார். இவ்விரு மூர்த்தங்களுள் வெளியில் உள்ள தண்டாயுதபாணியே அருணகிரிநாதரால் பாடப்பெற்றிருக்கவேண்டும் என்று முடிய முடிகின்றது. திருவாடானைத் திருப்புகழில் ஞானாகமத்தை அருளும் முருகன் எனக்குறிப்பு இருப்பதால் இம்முருகனே அருணகிரிநாதரால் பாடப்பெற்றிருக்கவேண்டும் என்று முடியமுடிகின்றது.
திருவாடானை தண்டாயுதபாணி நான்கடி உயரம் உடையவராக அன்னாந்து பார்க்கும் நிலையில் காட்சி தருகிறார். அவரைக் காணுகையில் ஞானம் நிரம்பிய முகமும், அமைதி தவழும் வடிவமும் கண்முன் நிற்கின்றது.
அருணகிரிநாதர் இம்முருகனைப் பின்வரும் திருப்புகழ் கொண்டுத் துதிக்கின்றார்.
ஊன்ஆரும் உள் பிணியும் ஆனாக கவித்த உடல்
ஊதாரி பட்டு ஒழிய உயிர்போனால்
ஊரார் குவித்துவர ஆவா எனக்குறுகி
ஓயா முழக்கமெழ அழுது ஓய
நானா விதச் சிவிகை மேலே கிடத்தியது
நாறாது எடுத்து அடவி
நாணாமல் வைத்துவிட நீறாம் எனிப்பிறவி
நாடாது எனக்கு உன் அருள் புரிவாயே
மால்நாகம் துத்திமுடி மீதே நிருத்தம் இடு
மாயோனும் அட்டொழுகு
வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் எட்டிசையும்
வானோரு மட்டகுல கிரியாவும்
ஆனா அரக்கருடன் வானார் பிழைக்கவரும்
ஆலாலம் உற்ற அமுது அயில்வோன் முன்
ஆசார பத்தியுடன் ஞானாகமத்தை அருள்
ஆடானை நித்தமுறை பெருமாளே
(திருப்புகழ், 985, பகுதி 5, கழக வெளியீடு)
என்று நாளும் ஞானம் உரைக்கும் பெருமானாக திருமுருகனை அருணகிரிநாதர் காணுகின்றார்.
உயிர்கள் இளமை, முதுமை பருவங்களை அடைந்து இறப்பை எய்துகின்றன. இறப்பின்போதுதான் இறந்த உயிருக்கும், இறந்த உயிரை எரியூட்டும் உயிர்களுக்கும் வாழ்க்கை நிலையாமை உடையது என்ற பொருள் புரிகின்றது,
நோய்களில் வெளிப்பிணி, உட்பிணி என்று இருவகை இருப்பதை அருணகிரிநாதர் இப்பாடலில் எடுத்துரைக்கின்றார். உட்பிணி என்பது உடலுக்குள்ளே உடலை உடையவருக்குத் தெரியமாலே கொள்ளும் நோய் ஆகும். உட்பிணி என்பது ஒரு நோய் மட்டுமல்ல. ஒரு நோய் வந்தால் பல நோய்கள் வந்து சேர்ந்துவிடும். அவ்வகையில் பல நோய்களின் வயப்பட்டு ஊதாரிப்பட்டு உடல் அழிந்து உயிர் போகும் காலம் வந்துவிட்டால் அ்வ்வுடலைப் பிணம் என்று சுற்றத்தார் கிடத்திவிடுவார்கள். இதுவரை அந்த உடலுக்கு இருந்த இயக்கம், மரியாதை எல்லாம் போய் முற்றத்தில் கிடத்தி விடுவார்கள்.
சுற்றத்தார் கூடி நின்று அழுவார்கள். அரற்றுவார்கள். துர்நாற்றம் வந்துவிடுவதற்கு முன்பாக பல்வகை அலங்காரம் கொண்டப் பல்லக்கின் மீது ஏற்றி அந்தப் பிணத்தைச் சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்வார்கள். நாணாவிதச் சிவிகை என்று அருணகிரிநாதர் சாவுப் பலக்கைப் பாடுகின்றார். அவர் காலத்திலும் சாவுப் பல்லக்கு பல்வித அலங்காரங்களுடன் இருந்துள்ளது. இக்காலத்திலும் பல்வகை அலங்காரங்கள், ஊர்திகள் என அது வளர்ந்துள்ளது.
இதன்பின் அந்த உடல் எரியில் வெந்து சாம்பலாகிப் போய்விடும். இந்த இழிநிலை வாராது என்னைக் காப்பாய் என்று மன்னுயிர்களின் சார்பாக வேண்டுகின்றார் அருணகிரிநாதர்.
திருவாடானைத் தலத்தில் உறையும் முருகன் உள்நோய்கள் வாராமல் காக்க அருளும் திறம் உடையவன் என்பதும், இழிவான சாவு நேரமால் அமைதியான உயிர்ப்படக்கம் தர வல்லவன் என்பதும் இப்பாடல் வழி அறியப் பெருகின்றது. அந்த அளவிற்கு அருளும் அமைதியும் நிரம்பியவராக திருவாடனைத் திருத்தல முருகன் காட்சி தருகின்றார்.
திருவாடானையில் உள்ள சிவபெருமானை வாழ்த்துவதாக பாடலின் அடுத்த பகுதி அமைகின்றது, காளிங்க நாகத்தின் மீது ஏறி நடனம் புரிந்த திருமாலும், தாமரை மலரில் நீங்காது உறையும் வேதநாயகன் நான்முகனும், தேவர்களும், எட்டிசைக் காவலர்களும், மலையில் வாழ்பவர்களும், அரக்கர்களும் வாழுமாறு ஆலகால விஷத்தை உண்டவர் சிவபெருமான். அவர் முன்பு ஆசார பக்தியுடன் ஞானாகமத்தை அருளும் முருகனாக திருவாடானை முருகன் காட்சியளிக்கிறார்.
வெளியில் நின்ற கோலத்தில் முருகப் பெருமான் நிற்க, கருவறையில் சுயம்பு லிங்கமாக ஆதி இரத்தினேசுவரர் தாழ்ந்து அமர்ந்து இருக்க -முருகன் ஞானாகமத்தை உபதேசிக்க அதைக் கேட்பவராக சிவபெருமான் இருப்பதாக அருணகிரிநாதருக்கு திருவாடனைத் திருக்காட்சி அமைகின்றது.
அன்னாந்து பார்க்கும் உயரத்தில் முருகப்பெருமான் காட்சிதருவதன் உட்பொருள் இதனால் இப்போது விளங்குகின்றது, மேலும் சிவகீதை இங்குதான் உபதேசிக்கப்பெற்றது என்ற வரலாறும் திருவாடானைக்கு உண்டு. அவ்வகையில் ஞானம் விளையும் பூமியாக திருவாடானை விளங்குகிறது. இங்குள்ள முருகன் ஞானமுருகன். நாளும் ஞானம் தரவல்லவன். அவனைத் தொழுதால் ஞானம், ஆகம் அனைத்தும் பெறலாம். திருவாடனைத் திருமுருகனை நினைவால் வழிபடுவோம். நித்தம் அமைதியும் அருளும் பெறுவோம்.
---------------------------------------------

Comments