நூல் மற்றும் ஒலிப் பேழை விமர்சனங்கள்

இராமநாதன் பழனியப்பன் “திருச்செந்தூரின் கடலோரத்தில்” நூல் விமர்சனம்

முனைவர் மு. பழனியப்பன்




பக்தி என்பது அறிதல், அறிவித்தல், அனுபவித்தல் அனுபவித்ததை பகிர்தல் போன்ற நடைமுறைகளைச் சார்ந்தது. பக்தியை அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அறிவிக்கும் பேறு பெறுகிறார்கள். பக்தியை அனுபவித்தவர்கள் அனுபவிக்காதவர்களுக்கு அனுபவிக்கக் கற்றுத்தருகிறார்கள். தொடர்ந்து உருவாகிவரும் இந்த பக்தி இழை அவ்வப்போது சிக்குண்டு, சிதறுண்டு, நெருக்குண்டு கிடந்ததும் உண்டு. நெருக்குதல்கள் பற்பல இருந்தாலும் அதன் தொடர் இழை அறுந்துபோகாலமல் ஞானிகள் காத்தார்கள், காத்து வருகிறார்கள். காத்துவருவார்கள். அவர்களின் சொற்கள்,இலக்கியங்கள் காட்டாதனவற்றைக் காட்டும். கேட்காதனவற்றைக் கேட்கச் செய்யும். புரியாதனவற்றைப் புரியச் செய்யும். அறியாதனவற்றை அறியச் செய்யும். அனுபவிக்காததை அனுபவிக்கச் செய்யும்.
பக்தி என்பதன் அடிப்படையை மக்களிடத்தில் உணர்த்தவேண்டிய காலக்கட்டம் இது. மக்களைப் பயபக்தியில் ஈடுபடுத்தும் வன்மையான காலக்கட்டம் இது. மக்களை அவர்களின் அறியாமையைக் காட்டிப் பயமுறுத்திக் கடவுளைக் காசாக்கி வணக்க வைக்கும் இந்தக் காலக்கட்டத்தில் பக்தியின் உண்மையை, நன்மையை, அதன் அன்புருவை வெளிக்காட்ட வேண்டிய பல பணிகள் இன்றைக்குத் தேவைப்படுகின்றன.
முரட்டு பக்தியாக உடலை வருத்தும் குழுக்கூட்டம் ஒருபுறம். திரட்டு பக்தியாக மக்கள் திரளைக் கூடச் செய்யும் கூட்ட பக்தி ஒருபக்கம். களிப்புகளுக்கு இடம் தந்து ஆடல், பாடல், கரகாட்டத்துடன் இயங்கும் களிப்பு பக்தி ஒருபுறம். கவலை பக்தி ஒருபுறம். காக்க வேண்டும் என்ற காவல் பக்தி ஒருபுறம். இவ்வகை நடப்புகளை உடைய ஆரவார பக்தியில் அமைதி பக்தி, ஆன்ம பக்தி காணாமல்போய்க் கொண்டிருக்கிறது. இச்சூழலில் உண்மையான, நன்மையான, இனிமையான பக்தியின் பாங்கினை துறைதோறும், துறைதோறும் துணைக்கருவிகள் பல கொண்டு அறிவிக்கவேண்டி இருக்கிறது.
காலம் காலமாக அறிவின் ஆற்றல் பெருகி வந்தாலும் அறியவேண்டியனவாகவே உயிர்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த உயிர்களுக்குப் பக்தி வழியில் பகவானை அடைந்த பேரின்பவாதிகளை அறிமுகப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் உயிர்களின் அறியாமை களைந்துபோகும். இவ்வினிய முயற்சியில் திட்டமிட்டு திடமுடன் இறங்கி இருக்கும் அருளடியார் இராமநாதன் பழனியப்பன் அவர்களின் இனிய நூலான திருச்செந்தூரின் கடலோரத்தில் நூலைக் காணும், படிக்கும், ருசிக்கும், துதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முருகனைச்,சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைக் கடம்பனை அணுஅணுவாக ரசித்து உலகமெல்லாம் அவனடியில் கிடப்பதை எடுத்துரைக்கும் அருள் அனுபவ நூல் திருச்செந்தூரின் கடலோரத்தில் என்ற நூலாகும்.
வடமொழியில் ஆதி சங்கர மாமுனிவர் அருளிய சுப்பிரமணிய புஜங்கத்தின் அருமையான அருள் தமிழ்ப் பதிப்பு திருச்செந்தூரின் கடலோரத்தில். சங்கரர் தனக்கு ஏற்பட்ட நோவு நீங்க ஜெயந்திபுரம் என்ற திருச்செந்தூருக்கு வருகை தந்துப் பாடிய அருள் பாடல்கள் முப்பத்து முன்றின் இனிய சர்க்கரைப் பிழிவு இந்த நூல். முருகப் பெருமான் காலடியில் கிடந்த கரும்பாம்பு நீங்கியதாகச் சங்கரருக்கு இப்புஜங்கம் பாடும்போது கிடைத்த அருள் அனுபவம் அவரின் நோவைத் தீர்த்தது. முப்பத்து முன்று என்ற எண்ணிக்ககை முப்பத்து முன்று கோடி தேவர்கள் என்ற எண்ணிக்கையின் உள்ளடக்கக் குறியீடு ஆகும்.
இந்த நூலின் அமைந்திருக்கும் சிறப்புகள் பற்பல. உரைநடை வளமும், காட்சி நயமும், கவிதை வளமும், எளிமையும், இனிமையும் அருளும், அனுபவமும் முற்றி முதிர்ந்திருந்து இந்நூலை அணி செய்கின்றன. இணையதளம் முதல் இனியவன் கோயில் கொண்டிருக்கும் அனைத்துத் தலங்கள் பற்றிய உண்மைத் தகவல்களுடன் நேர்த்தியான கட்டுமானம், ஓவியங்கள், படங்கள் என்று வீட்டின் சூழலைக் கூட கோயிலாக மாற்றிவிடும் வலிமை பொருந்தியது இந்நூல்.
முருகப் பெருமானின் திருச்செந்தூர் பற்றியும், தலப் பெருமை, தலநூல்கள் என அனைத்தையும் தந்து எண்ணூறு பக்கங்களுக்கு விரிகிறது இந்நூல். முன்னதாக அறிமுக இயலில் முக்தி அனுபவம், முருக வரலாற்றின் சிறப்பு, உலக முருகன் கோயில்கள், ஞானவான்களாம் அருணகிரிநாதர், இரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், சங்கரர் அருள் வரலாறு முதலிய தக்க சான்றுகளுடன் எடுத்துக்காட்டப் பெறுகின்றன.
படங்களும் சித்திரங்களும் கலந்து நிற்கும் இந்நூலில் ஆங்காங்கே வண்ணமிட்டுக் கட்டம் கட்டி முக்கியமான தகவல்கள் இணைக்கப் பெற்றிருக்கின்றன. இதனைக் கண்ணூற்றாலே பல அறியாச் சிக்கல்கள் அழிந்து போகின்றன. அறியச் செய்கின்றன.
இரண்டாம் பகுதியான புஜங்க இயலில் சுப்பிரமணிய புஜங்கத்தின் வடமொழி, தமிழ் வடிவம் , விரிவான உரை முதலிய எடுத்துரைக்கப் பெறுகின்றன.
முன்றாம் பகுதி இணைப்பாக முருகப் பெருமானின் அருள் வெள்ளத்தைப் பாடிப் பரவும் பக்திப் பனுவல்கள் இணைக்கப் பெற்றுள்ளன.
இம்முன்று நிலைகளில் அமைந்துள்ள இந்நூல் சுப்பிரமணிய புஜங்கத்தின் புகழை இனிது நிலை நிறுத்துகிறது. புஜங்கம் என்பது தோளால் நகரும் முறைமை என்று பொருள். பாம்பின் நகர்ச்சி போன்ற ஓசையுடன் இது வடமொழியில் பாடப் பெற்றுள்ளது. தமிழ் வடிவில் கவிதை நடைக்கு ஒட்டிய இந்த இசை இணையும் முறை பின்பற்றப் பெற்றுள்ளது. எனவே இது புஜங்கம் என்று பெயர் பெற்றது.
மச்சக் காவடி, சர்ப்ப காவடி பற்றி சரியான தகவல்களை இந்நூல் பதிவு செய்துள்ளது. சர்ப்பகாவடி என்பது பாம்பினைப் பச்சை மண்பாத்திரத்தில் கொண்டு வந்துத் திருச்செந்தூர் சீரலைவாய்ப் பகுதியில் விட்டுவிடுதல் என்ற முறைமை கொண்டது என்ற செய்தி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மச்சக் காவடி என்பது திருச்செந்தூரில் கிடைத்த மீனை முன்று கூறிட்டு மஞ்சள் நீரில், மஞ்சள் துணிமுடப்பட்டு கொண்டுவருவது என்றும், இம்மீனை கடலில் விட்டால் இறந்தமீன் துள்ளித் திரியும் என்றும் தரும் கருத்து இறையிருப்பை உணர்த்துவதாக உள்ளது.
இதுபோன்ற பல புதிய தகவல்களுடன் இந்த நூல் அமைந்து சிறக்கிறது.
தீராத வியாதிகளான வலிப்பு, தீமைமிகு காசம்
குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்ப்புண்
புற்றுநோய், பிசாசு, பொல்லாத மனப்பயம்,
இன்னபிற நோய்கள் அனைத்தும்
தாரகனை வதம் செய்தவனே
பன்னீர் இலையில் மடித்த உன் திருநீற்றைப்
பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடுமே(25)
என்ற புஜங்கப் பகுதி திருச்செந்தூரின் இடப் பெருமைக்கும், சொல் பெருமைக்கும், பொருள் பெருமைக்கும் சான்றாக அமைவது ஆகும். இது போன்று முப்பத்து முன்று வடமொழிப் பாடல்களுக்கும் இனிய தமிழாக்கம் ஆசிரியரால் தரப் பெற்றுள்ளது. இப்பாடல்களுக்குச் சொல்லுக்குச் சொல் விளக்கம், பொருள் விளக்கம், இட விளக்கம், வரலாறு விளக்கம் என்று விளக்கங்களின் வரிமை இந்நூலை விரிதாக்கி படிப்பவரின் பாராட்டைப் பெறுகின்றது. இன்னும் படிக்கலாம் என்பது போன்ற ஆசிரியரின் இனிய நடை புத்தக உலகில் புதிய நடை முறைமையைக் கொண்டுவந்துச் சேர்த்துள்ளது.
இந்நூலின் ஒவ்வொரு பகுதி எழுதப்படும்போது அதற்கு தொடர்புடைய பல அருளனுபவங்கள் ஆசிரியருக்குக் கிடைத்துள்ளன. மலேசிய நாடு சார்ந்து தண்ணீர் மலை முருகனுக்கு தேங்காய்கள் உடைப்பதை ஓருமுறை கண்ட இவருக்கு பல முறை முருகனையும் அவள் அருள் வெள்ளத்தையும் காண எண்ணம் சென்று கொண்டே இருக்கிறதாம். மேலும் சங்கரரின் பிறந்த இடமான காலடியைப் பற்றி இவர் எழுத முற்பட்டபோது அந்தக் காலடிக்கு இவர் காலடி வைக்கவேண்டிய சிறப்பு நிகழ்ந்துள்ளது.
தண்ணீர் மலை முருகன் வரும்போது தேங்காய்கள் உடைக்கின்ற நிகழ்ச்சி இவருக்கு வேறுபட்ட அனுபவத்தைத் தந்துள்ளது. அதாவது தேங்காயின் இளநீர் கொண்டு தண்ணீர் மலையான் வரும் வழி முழுவதும் கழுவப் படுவதாக ஆசிரியர் வரைகிறார். இவ்வாறு அருள் அனுபவம் கலந்து இந்நூல் செய்யப் பெற்றுள்ளது.
நகரத்தார்களின் இனிய முருக பக்தியும், அவர்கள் அயல் நாடுகளுக்குச் செல்கையில் பழனியாண்டவனை வழிபட்டதிறமும், அன்னதான மடம் ஏற்படுத்திய அறக் கொடையும், பழனி பாதயாத்திரை பற்றிய வரலாற்று ஆவணங்களும் இந்நூலின் சக்தியைப் பெரிதும் கூட்டுகின்றன.
முருகப் பெருமான் பற்றிய ஒரு கலைக்களஞ்சியம் என்று சொல்லத்தக்க அளவில் நல்ல அருமையான வடிவில் அழகன் முருகனுக்கு பல்லாண்டு பாடும் சிறப்பான நூல் இது.
நம்மைப்போன்றோர் கரங்களில் இருந்தால் நமக்கு பயம் அணுகாது. படபடப்பு அணுகாது. துணை இதுவே ஆகும். இந்நூல் கொண்டு சங்கரர் என்ற குருவை இனம் காண முடியும். அவரின் அத்வைத தத்துவத்தை அறிந்து கொள்ளமுடியும். அதன் வழி நடக்க முடியும். முருகனின் பாதத் துளிகளைத் தலைமேல் கொள்ளமுடியும். வடமொழியை வணங்க இயலும். தமிழால் வாழ்த்த இயலும். புராணம் கற்கலாம். புனிதம் கற்கலாம். இன்னும் எத்தனையோ எத்தனையோ பயன்கள் தரக்கூடிய கிட்டக் கூடிய கிடைத்தற்கரிய பொக்கிஷம் இந்நூல்.
என்றும் இதுபோன்ற பல நல்ல பணிகளை ஆசிரியர் செய்ய கந்தக்கடவுள் அருள் துணை கூட்டும்.
நூல் விபரம்
விற்பனை உரிமை. பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25. பீட்டர்ஸ் சாலை, சென்னை, 14
நூலின் விலை ரு 600
ஆசிரியர் முகவரி இராமநாதன் பழனியப்பன், ஸ்ரீ புவனேஸ்வரி, 3362ஏஎக்ஸ் 11ஆவது மெயின் ரோடு, அண்ணாநகர் மேற்கு, செனனை 40, 04426211194
-------------------------------------------------------------------------------------------------

சித. சிதம்பரம் அவர்களின் பூம்புகார்க் கவிதைகள் பரப்பும் புதுமணம்

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்

சித. சிதம்பரம், பூம்புகார்க்கவிதைகள், முருகப்பன் பதிப்பகம், பழனியப்ப விலாசம், 48. முத்துராமன் தெரு, முத்துப்பட்டணம், காரைக்குடி, 630001- 2011 ஆகஸ்டு, விலை ரு. 60
கவியரங்கம் என்ற கலைவடிவம் மிக்க ஆளுமை உடையதாக சென்ற இருபதாண்டுகளுக்கு முன்னர் அதாவது கவியரசு கண்ணதாசன் காலத்தில் விளங்கியது. மக்கள் முன்னிலையில் கவிதையைப் படைத்து அவர்களின் கைத்தட்டலில் பெருமை பெற்ற சிறப்பினை கவியரங்கங்கள் பெற்றன. பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு போன்ற சிறப்பு நாள்களில் ஊடகங்களிலும் இவை நடைபெற்றுப் பெருமை சேர்த்தன.
ஏறக்குறைய மேடைப் பேச்சின் சாயலுடன் மேடையில் உள்ளோரை, எதிரில் உள்ளோரை அழைத்து அவர்களின் கவனத்தையும் இழுத்து கவிதை படைக்கும் நேர்த்தி மிக்க கலைவடிவம் கவியரங்கமாகும். தமிழைப் பாடுதல், தலைவரைப் பாடுதல், உடன் பாடுவோரைப் பாடுதல், வந்திருந்தோரைப் பாடுதல் என்ற மரபுசார் வடிவமைப்புகளைத் தாண்டித் தலைப்பிற்கேற்ற கவிதை படைத்து, அதனை திறம்பட சொல்லி மகிழ்விக்க வேண்டிய கடப்பாடு கவியரங்கக் கவிஞனுக்கு உண்டு.
இன்னும் சொல்லப்போனால் ஒரு காலத்தில் நூலை அரங்கேற்றும் மரபு போன்ற நிலைப்பாட்டை உடையது கவியரங்கம் என்ற அமைப்பு. உ.வே.சாமிநாதய்யரின் ஆசிரியரான மகாவித்வான மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவுடையார் கோயிலில் அக்கோயிலின் புராணத்தை அரங்கேற்றிய செய்தியை உ.வே.சா தன் என் சரிதம் என்ற தன்னூலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கவியர்டங்கக் கவிதைகளுக்கு என்று தனித்த இலட்சணங்களும் உண்டு. எளிமை நடை, சொல் விளையாட்டு, சொற்செட்டு முதாலன பல இலட்சணங்கள் அதற்கு உண்டு. அதில் இருந்து மீறாமல், மீற முடியாமல் கவியரங்கக் கவிதைகள் வளர்ந்து வந்துள்ளன.
புதுக்கவிதையின் நுழைவு அரங்கக் கவிதைகளையும் விட்டுவைக்கவில்லை. புதுக்கவிதை நடையிலேயே தமிழ்ப்புலவர்கள் கவிதைக் கலையை ஆக்கத் துணிந்துவிட்டனர். எப்போதாவது மரபு சார் விருத்தங்களைக் காது குளிரக் கேட்க முடிகிறது. இந்தச் சூழலில் மரபின் தெரிப்புகளுடன் புதுக்கவிதைக் கலப்புடன் வெளிவந்துள்ள ஒரு நூல் பூம்புகார்க் கவிதைகள் என்ற நூலாகும்.
கவிஞர் சித. சிதம்பரம் அவர்கள் படைத்துள்ள இந்த நூல் பூம்புகாரில் தொடர்ந்து அவர் கவியரங்கேறிய காலத்தில் பாடப்பட்டன. பூம்புகாரைத் தொடர்ந்து காரைக்குடி கம்பன் கவியரங்கம் போன்றவற்றில் அவர் பாடிய கவிதைகளும் இதில் காற்றில் கலந்து சென்றுவிடாமல் பதிவாக்கப் பெற்றுள்ளன. பூம்புகார் பற்றியும், பூம்புகாரில் எழுந்த காப்பியமான சிலப்பதிகாரம் பற்றியும் எழுந்த தலைப்புகளில் கவிஞர் படைத்த கவிதைகளின் தோரணம் இந்நூல்.
இதனுள் காவிரியாறு, நெடுஞ்செழியன்,கோவலன் என்ற சிலப்பதிகாரம் சார்ந்த கவிதைகளும், ஒன்று, நான்கு என்று எண் சார்ந்த கவிதைகளும், நகரத்தார் மகன், மாற்றூர் என்ற சமுகம் சார்ந்த கவிதைகளும், கம்பன் இன்று வந்தால் பாட்டாளியாவன் என்ற கவிதையும் காது, நெருப்பு என்ற தலைப்பிலான கவிதைகளும் கலந்து இனிக்கின்றன.
கவியரங்கங்கள் இன்னும் பல வைக்கப் பெற்றால் எத்தனை கவிஞர்கள் தோன்றுவார்கள். எத்தனைக் கவிதைகள் தோன்றும். இனிமேல் வருமா கவியரங்கத்திற்கு ஒரு வசந்த காலம் என்ற எண்ணத்தை இந்தத் தொகுதி ஏற்படுத்தி நிற்கிறது.
இந்தக் கவிதைத் தொகுப்பில் தன்னை ஆங்காங்கே கவிஞர் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். அத்தனையும் உண்மை கலந்து அவர் நிற்கும் இடங்களாகும்.
அடிப்படை வாழ்க்கைக்கும்
அகப்படை வாழ்க்கைக்கும்
தொழில் கூட்டு முதலீடு கடன்
பொருளாதார போதிப்புகள்
புதிய புதிய சாதிப்புகள்
வயிற்றிற்காக மனசை
விற்கமுடியாமல்
வாழ்க்கை முடிய பாதிப்புகள்
முப்பத்திநான்கு வயது
தழும்புகளைத் தாங்கிக் கொண்டு
வரும்புகழை வாங்கிய நேரம்
என் கட்டிலுக்குக் கால் ஒடிந்தது
ஒற்றையானேன்

காதலை நனைந்த நாட்களைத் தாண்டி
காமம் நிறைந்த பொழுதுகளை விரட்டி
பசித்த பொழுதில் தண்ணீர் அருந்தி
சமரசம் புரியாமல் சாகசம் செய்யாமல்
தகுதியாகலே தான் அடைந்த தலைமை நாற்காலி
(பக்.4344)
என்ற கவிதைக்குள் கட்டுண்டு கிடக்கும் அகவாழ்வின் துயரம், அதை ஆற்றிக் கொண்ட விவேகம் இத்தனைக்கும் மேலாயக் கவிதை ஊற்றெடுக்கும் உள்ளம் என்று இவற்றை ரசிக்கையில் படிப்போர் உள்ளம் கவிஞரைத் தொடுகின்றது.
அரங்கக் கவிதைகளைத் தான் புதுக்கவிதைகளாய் வடிப்பது பற்றிக் கவிஞருக்கு ஒரு கவலை வந்திருக்கிறது. மரபு சார் கவிவாணர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கையில் இந்தக் கவலை வரவேண்டிய ஒன்று தான்.
அரசி என்றழைக்கப்படும் கவிவாணர் தலைமையில் பாடப்பட்ட கவிதையில் இதுபற்றிக் கருத்தறிவிக்கிறார் கவிஞர்.
நீங்கள் மாவுத்தன்
மரபு யானையைக் கட்டி வைக்கிறீர்கள்
நானோ ராவுத்தன்
புதுக்கவிதைக் குதிரைக்குப்
பொட்டுவைக்கிறேன் அதையும்
உங்கள் காலைத் தொட்டு வைக்கிறேன் (ப.28)
என்ற நிலையில் புதுக்கவிதையின் புதுவேகத்திற்கு குதிரையை ஒப்புமையாக்கியிருப்பதையும், மரபின் ஓட்டத்திற்கு யானையின் வலிமையையும் அதன் வேகத்தையும் பொருத்தியிருப்பது சரியான வேறுபாடாகின்றது. யானையாய்க் கவிதை அசைந்து வந்தால் என்ன, குதிரையாய்க் கவிதை பறந்து வந்தால் என்ன அதன் அழகிற்கு, அதன் ரசிப்பிற்கு ஏங்கி நிற்கவேண்டும் வாசகன். அந்த ஏக்கத்திற்கும் ரசிப்பிற்கும் உரியனவாக இவரின் கவிதைகள் நிற்கின்றன என்பதில் ஐயமில்லை.
இவரின் கவிதைக்குள் சொற்களின் அடுக்கைச், சொற்களின் பொருள் சேர்க்கையைப், பொருள் மாற்றத்தை நிறைய காணமுடிகிறது. புகார் என்ற சொல்லும், மாற்றூர் என்ற சொல்லும் எப்படியெல்லாம் நின்று பரிணமிக்கறது என்பதைப் பின்வரும் சான்றுகள் காட்டும்.
பூம்புகாரே புராதன நகரே
வெளிப்பகைவர் உட்புகார்
உன் நிலத்தார் வெளிப்புகார்
புகார் என்னும் பெயர்
பூண்ட தன்மையைப்
பண்டைய இலக்கியம்
பறைகள் சாற்றும்
ஆனால்
புகார் என்னும் புகழுடை உன் நாமம்
கடந்த காலத்தில் கறைபட்டுப் போனதே
புகார் மீதும் புகார் வந்ததே (ப.20)
என்ற கவிதை புகார் மீது புகாரை அள்ளி வீசுகின்றது.
கூற்றுதனை மாற்றூர், கொடுமையினை மாற்றூர்
ஏற்றமுன் தீவினையை எரித்தே மாற்றூர்
ஊற்றூரும் நீராகி உயிர்காக்கும் மாற்றூர் (ப.47)
இப்படிச் சொல்லுக்குள்ளே சோதி மிக்க நவகவிதையை எடுத்தியம்பும் இவரின் வரையறைகள் இன்னும் மகிழ்விப்பன.
இவர் மகனுக்குத் தரும் வரையறையாக
மகன் நான்
பெற்றவர்கள் பிரதிநிதி
தந்தைக்கு அந்தாதி
ஆண் எனும் சந்ததி (ப. 61)
என்ற கவிதை அமைகின்றது.
இன்னும் சற்று ஒருபடி மேலே சென்று இந்த மகன் கவிதை பெற்றோரின் பேரின்பத்தைப் பாடுகின்றது.
நான் சம்பாதித்தால் அவர்கள்
பெட்டி நிறைகிறது
நான் தளிர்க்கையில் அவர்கள்
பூக்கிறார்கள்
நான் உழைக்கையில் அவர்கள்
வேர்க்கிறார்கள்
என்ற இந்த மகனின் உயர்வும், அதற்கும் பெற்றோர் தரும் மதிப்பும் இருக்கும் குடும்பங்கள் பல்கலைக்கழகங்கள் ஆகும் என்பதில் ஐயமில்லை.
வாழ்க்கையின் கணக்கைக் கவிஞர் பின்வருமாறு பிரதி எடுக்கிறார்.
கீழ்ப்புள்ளி பூமி
மேற்புள்ளி சாமி
கீழ்ப்புள்ளி உழைப்பு
மேற்புள்ளி சிறப்பு
கீழ்ப்புள்ளி புத்தி
மேற்புள்ளி வெற்றி ( ப. 85)
என்ற வாழ்க்கைக் கணக்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் காற்புள்ளியாகவே கணக்கெடுக்கிறது. முழுப்புள்ளி எப்போது ஆவோம் என்பதுதான் இந்தக் காற்புள்ளி தரும் எதிர்பார்ப்பு மகத்துவம்.
சில சொற்களுக்குக் கவிஞர் பொருளெழுதி பெருமை கொள்ளுகின்றார்.
காது ஒரு சித்திர வடிவம்
புள்ளி வைக்கா கேள்விக்குறிபோல்
புலப்படும். கேள்வி அதனால்தான் பெறப்படும் (ப. 52)
என்று காதிற்குப் பொருள்தருகிறார் கவிஞர்.
தாய்க்கு அவர் தரும் பாருள் சித்திரா பௌர்ணமி வானத்தில் சிரித்துக் கிடக்கும் சந்தனப் பொய்கை (ப. 57) என்பது படிக்கப் படிக்கச் சுவை கூட்டுவது.
தாயையும் தந்தையையும் பற்றிய இன்னொரு கவிதை படிக்கப் படிக்கச் சுவை கூட்டுவதாகும்.
நான்குவிழிச் சந்திப்பில் நான் பிறந்தேன்.
வாங்கினாள் தாய் வழங்கினார் தந்தை
தாங்கும் வயிற்றில் தவமாய்க் குடிபுகுந்தேன் (ப.39)
இவ்வாறு இவரின் கவிதைகள் எங்கு தொட்டாலும் சொற்களில் சுவை பிறக்கச் செய்கின்றன.
நகரத்தார் சமுகத்தவர் பற்றிய இவரின் கவிதைப் பதிவு ஒன்று அழியாப் பதிவாக விளங்குகின்றது.
தனவணிகர் பண வணிகர்கள்
முளை இவர்களுக்கு முலதனம்
கணக்கு இவர்களின் கைத்துணை
கருக்கடை இவர்களின் கை நேர்த்தி
அக்கறை இவர்களது ஆயுதம்
அர்ப்பணிப்பு இவர்களின் போர்முறை
இணக்கம் இவர்களின் திட்டம்
ஈட்டலும் பெருக்கலும் சட்டம்
ஈகையும் காத்தலும் உச்சம்
விலாசம் தான் இவர்களுக்கு வெளிச்சம்
(ப. 59)
இக்கவிதையை நகரத்தார்கள் தமக்கான கவிதையாக வரித்துக் காள்ளலாம். சட்டங்களாக எழுதி மாட்டி வைத்துக் கொள்ளலாம்.
இத்தனைக் கவிதைகளை எடுத்தியம்ப வைத்த அரங்கங்களுக்கு மிக்க நன்றி. அதனைப் பதிவாக்கிய கவிஞருக்கும் மிக்க நன்றி.
காலக்கணக்கன் கணக்கை முடித்தாலும்
கவிதைக் கனத்தில் காலத்தை முறிப்பேன் (ப. 45)
என்ற இவரின் ஆழமான கவிதை நேசிப்பு வரிகள், சாதிப்பு வரிகள் இன்னும் சாதிக்கும் என்பதற்கு இன்னும் பல நூல்கள் வரும் என்பதே சாட்சி.
எடுத்துக் கொண்ட பொருளை எள் முதல் பனை வரை பார்த்துத் தேறும் கவிதை வடிக்கும் கவிஞரின் வெற்றி மிக்க கவிதைப் படைப்புகளில் இதுவும் ஒன்றாக அமைகின்றது.

நம்பிக்கை என்னும் ஆணிவேர்

முனைவர் மு. பழனியப்பன்

தமிழாய்வுத் துறைத்தலைவர்
மன்னர் துரைசிங்கம்அரசு கலைக்கல்லூரி
சிவகங்கை
மனிதர்கள் மென்மையான உள்ளம் n;க்hண்டவர்கள். தற்கால மனிதர்களின்  மனம் மிகச் சிறிய தோல்வியைச் சந்தித்தால் கூட துவண்டு நம்பிக்கை அற்றுப் போகின்றது. துன்பங்களில் ஈடுபடுவதை மனித மனம் அடிப்படையில் விரும்புகின்றது. துன்பத்தின் துவளுதல் காரணமாக செயலற்றுப் போவதை மனித மனம் விரும்புகின்றது. இந்தத் துன்ப விருப்பத்தில் இருந்து மனித உள்ளத்தை மீட்டுக் கொண்டு வரவேண்டும். துன்பத்தால் செயலற்றுப் போகும் ;மனத்தை அதன் இயல்பிலிருந்து மாற்றி எப்போதும் செயல்படும் மனமாக நிலைக்க வைக்கவேண்டும். மனித மனத்தை என்றைக்கும் சக்தியுள்ளதாக வைத்திருப்பதன்மூலம் மாபெரும் வெற்றிகளை, சாதனைகளை இந்த சமுதாயம் பெற்றுக் கொண்டே இருக்கமுடியும்.
மனித  உள்ளங்களைக் காயப்படாமல் காக்க வேண்டியது சக மனிதர்களின் கடமையாகும். தமிழ் உலகில் வள்ளுவர் தொடங்கி அனைத்துச் சான்றோர்களும் மனிதருக்கு மன ஊக்கத்தை வார்த்தை மருந்துகளால் தந்துள்ளனர். தம் சத்தி மயமான கவிச்சொற்களால் அவர்கள் அளித்த ஊக்கம் இன்னும் வாழையடி வாழை என வளர்ந்து கொண்டே வருகின்றது. மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு என்பது வள்ளுவ வாக்கு. இவ்வாக்கு மனித உயர்வை மனத்து உயர்வாக கணக்கிடுகிறது. எனவே மனத்தைச் செம்மையாக்கும் நல்ல சொற்களைக் கொண்ட நூல்கள் என்றைக்கும் தேவைப்படுவனவாகின்றன.
தன்னம்பிக்கையை  என்பது மனிதரின் மூலதனம் என்று உணரப்பட வேண்டும். அப்படி உணரப்பட்டால் உணர்த்தப் பட்டால் மனிதர் அனைவரும் ஆற்றல் மிக்க சக்திகள் என்பது உண்மையாகும்.  எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் அதற்கு மூலதனம் என்ற ஒன்று தேவை. மூலதனத்தை வைத்துத்தான் உழைத்து முன்னுக்கு வர இயலும். மனித வாழ்வை நடத்தவும் அது போன்ற மூலதனம் தேவை. மனிதருக்கான அந்த மூலதனம்தான் தன்னம்பிக்கை என்பது.
~~வெறும் தன்னம்பிக்கை என்ற ஓர் உணர்வு மட்டுமே உள்ள ஒருவர் அந்த உணர்வையே மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் காலந்தள்ள முடியுமா? சாதனை செய்யும் தகுதி அவருக்கு உண்டா? அப்படி முடியும் என்றால் அது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்விகளுக்கு ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியும். அது வரலாறு என்பதுதான். ஆம். வரலாறு என்பது ஒரு ஒட்டு மொத்தப் பதிவேடு” என்று தன்னம்பிக்கையின் மூலதன முக்கியத்துவத்தை உணர்த்துகிறார் அகநம்பி. அவரின் வெற்றியின் ஏணிப்படிகளாகக் காணும் சிறு நூல் தன்னம்;பிக்கை என்பது ஒரு மூலதனம் என்பதாகும். நூற்றியரண்டு பக்கங்களைக்கொண்ட இந்நூல் மனித சமுதாயத்தைத் தட்டிக்கொடுத்துத் தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல நூலாகும். குறிப்பாக மாணவர்கள் தம் இளவயதில் வெற்றிகளைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்க இந்நூல் பெரிதும் வழிகாட்டும்.
~~பாலக்கனியின் மேல்தோலை நீக்கிவிட்டு அதிலுள்ள பசையை அப்புறப்படுத்தி அதன் உள்ளே உள்ள இனிய சுளையை எப்படி ருசிக்கின்றோமோ… அனுபவிக்கின்றோமோ.. அதைப் போன்றதுதான் வாழ்க்கை. மேலோட்டமாகப் பார்க்கும்போது வாழ்க்கை ரொம்பவும் கடினமானதாகத் துயரம் நிறைந்து இருப்பது போலத் தோன்றும். அந்த ihயத் தோற்றம் நீங்கிவிட்டால் பின்னர் தோன்றுவது நல்லதொரு காட்சியேதான்” என்று வாழ்க்கையை அதன் துன்பப்படலத்தை, இன்பச் சுவையை காட்சிப்படுத்தி வாழ்க்கையை வளமாக வாழக் கற்றுத் தருகிறார் அகநம்பி.
வளமான வாழ்;க்கை, நம்பிக்கை மிக்க வாழ்க்கை வாழ்வதற்கு மிகப் பெரிதும் தடையாக இருப்பது மனதில் எழும் ;அச்சம் என்கிறார் அகநம்பி. இந்த பயம்  ஏன் தோன்றுகின்றது என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லிவிடமுடியும். தேடிக் கண்டுபிடித்து மிகச் சரியான பதிலைத் தருகிறார் அகநம்பி. ~~ஒருவர் மனதில் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணம் இருந்தால் மட்டும்தான் பயம் என்ற உணர்வு அவர் மனதில் உருவாகும். அதனால் எவருக்கும் தீங்கு தரும் செயலை ஒரு துளி அளவு கூடச் செய்ய நினைக்காமல் இருந்தாலே போதும் என்ற கருத்து பயம் என்ற தடைக்கல்லைத் தூள் தூளாக்கிவிடுகின்றார் இவர்.
குழந்தைகள் ஆளுமை மிக்கவர்களாக ஆக்குவதற்கு இவர் கூறும் இனிய எளிய வழி எல்லோரும் ஏற்றுப் பின்பற்ற வேண்டிய வழியாகும். ~~முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று ~நான் நல்ல திறமை மிக்கவனாக வருவேன்…. சாதனைகள் பல செய்வேன்.” என்று மனதிற்குள் கூறிவரும்படிக் குழந்தைகளைப் பழக்குங்கள். வளர் பருவத்தில் உங்கள் குழந்தைகள் பிறர் விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். தேவையில்லா வார்த்தைகளைப் பேசாமல் இருக்கப் பழக்குங்கள். குழந்தைகள் வீட்டுப்பாடம் படித்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் அருகில் இருந்து அந்தப் பாடங்களைச் சரியாகப் படித்துக் கொண்டிருக்கிறார்களா? இல்லை ஏதேனும் தவறுதலாக அவர்களது படிப்பு போய்க் கொண்டிருக்கிறதா? எனக் கவனித்து வாருங்கள்” இந்த அடிப்படையைப் பெற்றோர்கள் உணர்ந்து கொண்டுச் செயல்பட்டால் நல்ல குழந்தைகளை நாட்டிற்கு அவர்கள் தரஇயலும்.
குழந்தைகளுக்கு நினைவுத்திறன் பெருக மூலிகை மருத்துவத்தை எடுத்துரைக்கிறது இந்நூல். குழந்தைகளின் மறதியைப் போக்கத் துளசி இலையைத் தண்ணீரில் ஊற வைத்து குழந்தைகளுக்கு அந்த நீரைக் குடிப்பதற்குக் கொடுங்கள். வில்வ இலைகளை அரைத்துச் சாறு குடித்தால்     ஞாபக சக்தி அதிகரிக்கும். தூதுவளைக் கீரையைக் குழம்பு வைத்துச்சாப்பிட்டால் மிக நல்லது என்று தமிழ் மருத்துவக் குறிப்புகளை அவ்வப்போது வழங்குகின்றது இந்நூல்.
வளர் பருவம் சார்ந்த மாணவர்களுக்கும் இவர் அளிக்கும் நம்பிக்கை உரைகள் பலவாகும். பாடங்களைப் படிக்கும் முறையை நெறிப்பட வழங்குகிறார் இவர். ~~பாடத்தின் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நினைவுக்குக் கொண்டு வருவதற்காகக் திரும்பத் திரும்ப சொல்லிப் பாருங்கள். உங்களுக்கு நீங்களே மாதிரித் தேர்வு எழுதிப் பழகுங்கள். பதற்றம் கொள்ள வேண்டாம்|| என்ற வழிமுறை பாடங்களைப் படிக்க நினைவில் வைத்துக் கொள்ளச் செய்யும் எளிய படிநிலையாகும்.
~~வகுப்பறையில் உங்கள் படிப்பில் கவனக்குறைவு அல்லது நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக ஆசிரியர் உங்களைத் திட்டினால் வருத்தப்படாதீர்கள். மாறாக ஏன் திட்டினார் எனச் சிந்தித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் செய்த தவறு உங்களுக்குத் தெரியவரும்.  உலகப் புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர் லியோனார் டோடாவின்சி, அணுக்கரு அமைப்பை விளக்கிய டேனிஷ்நாட்டு விஞ்ஞானி நீல்ஸ்போகர் கணித விஞ்ஞான நிபுணர் சர் ஐசக் நியுட்டன், தாமஸ் ஆல்வா எடிசன் போன்ற சாதனையார்கள் எல்லாரும் படிப்பின்போது தங்களது ஆசிரியர்களிடம் கடுமையான திட்டு வாங்கியவர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.|| என்ற அறிவுரை மாணவப் பருவத்தில்  அடிக்கடி நிகழும் திட்டுக்களில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடம் என்பதில் ஐயமில்லை.
தேர்வு எழுதுவது குறித்தும் பல மதிப்புரைகளை இவர் வழங்கியுள்ளார். ~~தேர்வுக் கூடத்தில் நுழைந்தவுடன் அமைதியாக வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். கேள்வித்தாள் கொடுத்ததும் அனைத்துக் கேள்விகளையும் ஒரு முறை முழுமையாகப் படித்துவிடுங்கள். அதில் நன்றாகத் தெரிந்த பதில்களை மட்டுமே விடைத்தாளில் முதலில் எழுதுங்கள். நீங்கள் எழுதும் எழுத்துக்கள் மிக அழகாக இருக்க வேண்டும். அழகிய எழுத்துக்கள் என்றுமே எவரையும் கவரும் தன்மையுடையது. அதற்குக் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்”  என்ற குறிப்புகள் தேர்வுக்குச் செல்லும் அனைத்து நண்பர்களுக்கும் உரிய அறிவுரையாகும்.
குழந்தைகள்,மாணவர்கள் இவர்களைத்தவிர ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இவர்களுக்குமான நம்பிக்கைத் தெளிவுரைகள் இந்நூலில் வகுத்து வழங்கப் பெற்றுள்ளன.  மனசாட்சி, அன்பு, தன்னம்பிக்கை, கட்டுப்பாடு, அடக்கம், நேர்மை, எல்லா உயிர்களையும் நேசித்தல் போன்ற அறநெறிகளைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும் என்பது இவ்வாசிரியரின் அன்பான கட்டளை. ~ஆசிரியர் மாணவர் உறவானது, இறைவனுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு போல இருக்க வேண்டும். மாணவர்கள் மனச் சோர்வு ஏற்படாமல் பாடங்களைப் படித்து வர ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்பது ஆசிரியர் உலகிற்கு இவர் வைக்கும் வேண்டுகோள் ஆகும்.
இளைஞர்களிடம் இருக்கும் குறைகளையும் இந்நூலில் இவ்வாசிரியர் சுட்டுகின்றார். கோபம் என்பதுதான் இவர் கண்டறிந்த மிகக் கொடுமையா மனித குணம் ஆகும். அதனைக்கட்டுப்படுத்த இவர் அருமையான வழி தருகின்றார்.  ~~உடலும் உள்ளமும் பலவீனமானவர்களுக்குத்தான் கோபம் வரும். எனவே உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றைப் பலப்படுத்துங்கள்.  உங்கள் கருத்தைச் சாந்தமான முறையில் பிறருக்குத் தெரிவியுங்கள். இந்த வழிமுறை கோபத்தை தணிக்கும் வழிமுறையாகும். இதுபோன்று பொறாமை, சோம்பல் முதலானவற்றைப் போக்கவும் வழிகளைத் தொடர்ந்து இவ்வாசிரியர் வழங்குகின்றார்.
நட்பு வட்டத்தைப் பெருக்கவம் அகநம்பி சொல்லும் வார்த்தைகள் உலகை அன்பால் வளைக்கும் திட்டமுடையது. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள சாதனையாளர்களின் சுயசரிதைகளைப் படிக்கச் சொல்லும் அகநம்பி, அதனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்காக  பத்துச் சான்றோர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகத் தந்துள்ளார். இவ்வகையில் மிக முக்கியமான தன்னம்பிக்கை வளர்க்கும் நல்ல நூலினை வழங்கியுள்ள பத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர் அகநம்பி இன்னும் பல தன்னம்பிக்கை நூல்களை வழங்கவேண்டும். படிக்கும் ஒவ்வொரு மனிதரும் மாமனிதராக வேண்டும். இந்நூலினை இயற்கை சக்தி பப்ளிகேஷன்ஸ், புன்னமை கிராமம் , சீவாடி கிராமம் (அஞ்சல்) காஞ்சிபுரம்மாவட்டம் என்ற முகவரியில் எழுபத்தைந்து ரூபாய் செலுத்து பெறாலம். தன்னம்பிக்கை பெறலாம்.

திருக்குறளைப் பரப்பும் அலேமன் ரமேஷ்ராவ் அவர்களின் குறுவட்டு

முனைவர் மு. பழனியப்பன்


தமிழ்த்துறைத்தலைவர்
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
சிவகங்கை
அழியா மதிப்புடையது திருக்குறள். அதன் அழிவின்மைக்குக் காரணம் அதனுள் உள்ள உண்மைத்தன்மையும் தற்சார்புத்தன்மையின்மையும்தான். திருக்குறளை அழிவில்லாமல் தினம் தினம் மக்கள் மத்தியில் உலாவச் செய்வதன் மூலம் மக்களிடத்தில் அமைதியையும், தெளிவையும், அன்பையும், அறிவையும், பண்பையும், சான்றாண்மையையும், நாகரீகத்தையும் மேம்பாடு அடையச் செய்ய இயலும். இதற்காக தினம் தினம் திருக்குறளைப் பரப்பும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். சொற்பொழிவுகள், புத்தக வெளியீடுகள் என்ற பதிவுகளைக் கடந்து தற்போது திருக்குறள் டிஜிட்டல் மீடியா எனப்படுகிற எண்வழி சாதனங்களிலும் இடம் பெறத் தொடங்கிவிட்டது. திருக்குறளை உரையோடு தரும் இணையப்பக்கங்கள், திருக்குறள் இசைவட்டுகள் என்று பரவி வரும் திருக்குறளின் பரவல் எளிமையாகத் திருக்குறளை  மக்களிடம் சென்று சேர்ப்பதாக உள்ளது. இவ்வழியில் திருவரங்கத்தில் வசித்து வரும் அலேமன் ரமேஷ் ராவ் என்பவர் புதிதாக எம்.பி. 3 வடிவில் ஒரு திருக்குறள் குறுவட்டினை உருவாக்கியுள்ளார்.

‘‘காவிரி நாடு வழங்கும் திருக்குறள்- தமிழ் ஆங்கில உரை’’  என்ற பெயருடைய இக்குறுவட்டில் திருக்குறளின் மூலப்பகுதி ஒலி வடிவில் தரப்பெற்றுள்ளது. இம்மூலப்பகுதிக்கு ஏற்ப ஆங்கில விளக்கம், தமிழ் விளக்கம் ஆகியன ஒலி வடிவில் வழங்கப் பெற்றுள்ளன. அலேமன் ரமேஷ் ராவ் அவர்களின் குரலில் பதிவு செய்யப் பெற்றுள்ள மூலப்பகுதிக்குத் தனித்த சிறப்பு உண்டு. திருக்குறளை ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படும் ஓசை நயத்துடன் தந்துள்ளார். ஒரு மனிதரின் வாழ்க்கைச் சூழல் எவ்வாறு அவரது படைப்புகளுக்குள் பணிபுரிகின்றது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. திருவரங்கத்தில் வசித்து வரும் அவருக்குள் ஆழ்வார் பாசுரங்களைக் கேட்டு, கேட்டு அதன் வாயிலாக எழுந்த தாக்கம் திருக்குறளை அவர் ஒலிவடிவாகத் தரும்போது செயல்புரிந்துள்ளது. இந்த மூலப்பகுதியை வாசித்து முடிக்கும் சூழலில் அதற்கு ஒத்திசைவாக ஒரு சிறு மணியொலி தரப்பெறுகிறது. இந்த மணியொலி குறள் படித்து முடித்தாகிவிட்டது என்பதை அறிவிக்கும்படியாகவும் உள்ளது.

இந்த மூலப்பகுதியை முதன்மைக் கோப்பாக வைத்துக் கொண்டு இதற்குத் துணை ஒலிக் கோப்புகளாக ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய ஒலிக் கோப்புகள் இணைத்துக் கொள்ளப் பெற்றுள்ளன. இதன் காரணமாக ஆங்கிலத்தில் விளக்கம் கேட்கும் போதும், தமிழில் விளக்கம் கேட்கும்போதும் மூல வடிவத்தினை இருமுறை கேட்டுக் கொள்ள முடிகின்றது. இருமுறை கேட்பதன் வாயிலாக திருக்குறளின் மூலப்பகுதி அப்படியே மனதிற்குள் பதிந்துவிடுகின்றது. ஆங்கிலத்திலும், தமிழிலும் அமைந்துள்ள உரைப்பகுதிகள் எதிரொலி செய்வனவாக அமைக்கப் பெற்றுள்ளன. அவை உரைப்பகுதிகள் என்பதைக் கேட்பவர் உணரவேண்டும் என்பதற்காக இவ்வேற்பாடு செய்யப் பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஒலிக்கோப்பு திருக்குறளுக்கு அணிசெய்யும் நல்ல கோப்பு. ஒவ்வொரு மனிதருக்கும் திருக்குறளுக்குத் தன்னால் ஆன ஏதாவது ஒரு தொண்டினைச் செய்தாக வேண்டும் என்ற கடப்பாடு உண்டு. அம்மனிதர் தமிழ் மண்ணில் பிறந்த்தற்கு, வாழ்ந்ததற்கு அதுவே அடையாளமாகும். அலேமன் ரமேஷ் ராவ் என்ற இந்த குறுவட்டு உருவாக்குநர் பிறப்பில் தெலுங்கர். வசிப்பது வாழ்வது தமிழகத்தில். ஆங்கிலத்தைப் பரப்புவது, இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுவது அதற்கான நிகழ்வுகளை நடத்துவது என்பது இவரது தொழில். இவ்வகையில் தமிழகத்தில் வசித்த்தன் பயனாக திருக்குறளை நுகர்ந்து, அதனை மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்லும் நல்ல முற்சியை இவர் மேற்கொண்டுள்ளார். முன்னே சொன்னதுபோல இவரின் கடப்பாட்டை இனிமையுடன் நிறைவேற்றியுள்ளார்.

திருக்குறளுக்கு உரை வகுத்து, இருமொழிகளிலும் குரல் தந்துள்ள அலேமன் ரமேஷ் ராவ்  திருக்குறளுக்கான உரைப்பகுதியை கவனமாக கையாண்டுள்ளார். இறைமாட்சி என்பது பொருட்பாலின் முதல் அதிகாரம். இதில் மன்னனுக்கான இலக்கணம் திருவள்ளுவரால் சுட்டப் பெற்றுள்ளது. இவ்வதிகாரத்தில் வேந்தன், மன்னன் போன்ற சொற்களை வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். தற்காலத்தில் மன்னராட்சி முறை இல்லாமையால் அதனை மன்னருக்கான இலக்கணம் என்று இச்சமுகம் விட்டுவிடுமோ என்ற அச்சம் எழுவதுண்டு. ஆனால் அலேமன் ரமேஷ் ராவ் இச்சொற்களுக்குத் தலைவர் எனப் பொருள் கொள்ளுகின்றார்.இதன்  காரணமாக இறைமாட்சி தலைவர்களுக்கு இலக்கணம் காணும் அதிகாரமாகி விடுகின்றது.
‘‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவருக்கும் நல்லாற்றின் நின்ற துணை’’ என்ற இல்வாழ்க்கை அதிகாரக் குறளுக்கு அலேமன் ரமேஷ் ராவின் உரை பின்வருமாறு ‘‘ தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகள் ஆகிய உறவுகளைப் பொறுப்போடு பேணுவது குடும்பத் தலைவனின் இன்றியமையாத கடமையாகும்.” இதில் இயல்புடைய மூவர் என்பதற்கு அவர் தாய், தந்தை, மனைவி ஆகியோரைக் காட்டுகின்றார். இக்காலத்தில் இம்மூவரையும் காக்க இயலாமல் நடுத்தெருவில் விட்டுவிடுகிற சூழலே அதிகமாக இருக்கிறது என்பதால் அவரின் உரை இவ்வாறு அமைந்துள்ளது. இதில் நான்காவதாக குழந்தைகள் என்பது சேர்க்கப் பெற்றுள்ளது. குறளில் மூன்றுதானே உள்ளது உரையில் நான்குபேரைச் சொல்லியுள்ளாரே என்ற சந்தேகம் எழலாம். இயல்புடைய மூவர் என்பதில் தாய் தந்தை மனைவி அடங்குகின்றனர். வழக்கத்தில் இயல்பானது, சிறப்பானது என்று இருபிரிவு உண்டு. இவ்விருபிரிவினரையும் சுட்ட வந்த வள்ளுவர் சிறப்பாக காக்கவேண்டியவர்களும் உண்டு என்பதால் இயல்புடைய மூவர் என்றார். இங்கு குழந்தைகள் என்பவர்கள் சிறப்பு நிலைப்பட்டவர்கள். மக்கட்பேறு என்று தனிநிலையில் குழந்தைகள் பற்றி சிறப்புகள் தனி அதிகாரத்தில் குறிக்கப்படுவதால் இக்குறுவட்டின் உரையாசிரியர் இயல்பான மூவரையும் காட்டிச்  சிறப்பாக குழந்தைகளையும் காட்டி  இக்குறளுக்கு அணிசேர்த்துள்ளார்.

இதுபோன்று பல குறட்பாக்கள் தற்காலச் சிந்தனையின் விளைந்த உரைகளைக் கொண்டு அமைந்துள்ளன. ‘‘விருந்து புறத்த்தாத் தான்உண்டல் சாவா மருந்து எனினும் வேண்டற்பாற்று அற்று””” என்ற குறளுக்கு சாவா மருந்தினை உண்டுகொண்டு இருந்தாலும் விருந்தினர் வீட்டில் வெளியில் நின்றால் அவ்வாறு உண்ணும் அமிழ்தத்தை விட்டுவிட்டு விருந்தினரை வரவேற்று உபசரிக்க வேண்டும் என்று புதுப் பொருள்  கொள்ளுகின்றார் இவ்வுரையாசிரியர். இதுவரை சாவா மருந்து என்றாலும் விருந்தினர்களை வெளியில் அமரவைத்துவிட்டுத் தான் மட்டும் உண்ணக் கூடாது என்று பொருள் கொண்டு வந்த நிலை இங்குச் சற்று மாறியிருப்பதை உணரமுடியும்.

முக நக நட்பது நட்பன்று என்ற குறளுக்கு இவர் அளித்துள்ள விளக்கம் ‘‘ முகத்தில் மட்டும் புன்னகை பூத்து வருவது நட்பைக் குறிப்பது அல்ல. நல்ல நட்பு மனமகிழ்ச்சியோடு சந்திக்கும் நண்பர்களிடம் வெளிப்படுவது’’ என்பதாகும். கவிதை கலந்த்தாக இந்த உரை அமைக்கப் பெற்றுள்ளது. இதனை ஒலிவடிவில் கேட்கும்போது குறளுக்கு கவிதை வடிவான உரையோ என்று எண்ணத்தக்க அளவிற்கு சொற்சேர்க்கை அமைந்துள்ளது.

இவரின் உரைப்பகுதி பல இடங்களில் இரத்தினச் சுருக்கமாக நாகரீகமாக அமைந்துள்ளது. தகை அணங்குறுத்தல் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள நோக்கினாள் நோக்குஎதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து” என்ற குறளுக்கு  தலைவியின் பார்வை ஒரு படையே பார்ப்பதைப் போன்று இருந்த்து என்று பொருள் கண்டுள்ளார். ‘‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறறியும் ஐம்புலனும் ஒண்டொடிக் கண்ணே உள” என்ற குறளுக்கு இவர் அளித்துள்ள விளக்கம் ‘‘பெண் என்பவள் ஐந்து புலன்களையும் உயிர்ப்பிக்கும் சக்தி உடையவள்” என்பதாகும். இது ஒரு நாகரீகமான இரத்தினச் சுருக்கமான உரைப்பகுதி ஆகும்.

ஆங்கிலத்தில் வழங்கியுள்ள உரைப்பகுதிகள் கேட்பதற்கு இனிமையாகவும், உயர்தரமான ஆங்கில உச்சரிப்புடனும் உள்ளது. பல இடங்களில் இவரின் திருக்குறளுக்கு ஆங்கில மொழியாக்கம் சிறப்புடையதாக உள்ளது.  கடவுள் வாழ்த்து என்தற்கு ஆங்கில ஆக்கமாக Trust in the almighty  என்பதைக் கொண்டுள்ளார். அறன் வலியுறுத்தல் என்பதன் ஆக்கமாக  good virtue என்பதைக் கையாண்டுள்ளார். ஆங்கில உரை ஆக்கமும் சிறப்புடைய ஒன்று. மேற்காட்டிய தமிழ் உரைவடிவச் சிறப்புகள் அப்படியே ஆங்கிலத்திலும் பின்பற்றப் பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
இந்த வகையில் பற்பல உரைப் புதுமைகளையும் கேட்க இனிமையையும் பயன்படுத்த எளிமையையும் கொண்டு விளங்கும் இந்தக் குறுவட்டு திருக்குறளைப் பரப்பும். உலக அளவில் ஒலிவடிவில் பரப்பும். இதனைப் பெற விரும்பும் அன்பர்கள் arameshrao@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளுங்கள். இக்குறுவட்டின் விலை ரூபாய் 150 மட்டும். இதனை சீமானூர் எஸ். பிரபு வெளியிட்டுள்ளார். இதன் வெளியிட்டு விழா மற்றும் அறிமுக விழா சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 21.12.2012 அன்று மாலை மூன்று மணி அளவில் நடைபெற்றது. இக்குறுவட்டினை உலகத்திருக்குறள் பேரவையின் தலைவர் தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள் வெளியிட்டார். அலேமன் ரமேஷ் ராவ் அவர்கள் உடனிருக்கு இந்நிகழ்வு நடைபெற்றது, திருக்குறளை திசைதோறும் பரப்பும் முயற்சிகளுக்கும், பரப்பும் அன்பர்களுக்கும் தலைவணங்குவோம்

கவிகங்கையின் ஞானஅனுபவம்

முனைவர் மு. பழனியப்பன்

தமிழ்த்துறைத்தலைவர், அரசு கலைக்கல்லூரி, முதுகுளத்தூர்

கவிதை எழுதுபவர் கவிஞர். கட்டுரை எழுதுபவர் கட்டுரையாளர். கட்டுரையைக் கவிதையாக எழுதுபவருக்கு என்ன பெயர் தருவது? கவிதைகளைத்  திறனாய்வாளர்கள் திறனாய்ந்தால் அதன் வாயிலாகக் கவிநுட்பம் வெளிப்படும். சான்றோர் கவிதைகளைக்  கவிஞர் ஆராய்ந்தால் என்ன வெளிப்படும்? கவிதைகளில் சொற்கள் இருக்கும். பொருள், அணி, யாப்பு இருக்கும். இவற்றைத் தாண்டி, கவிதைகளில் தத்துவம், யோகம், மறைபொருள் விளக்கம் போன்ற பல அறியப்படாதன புதைந்திருக்கலாம். இவற்றை எல்லாம் வெளிப்படுத்தி நிற்கும் எழுத்திற்கு என்ன பெயர் தரலாம்?
இப்படி அடுக்கிய கேள்விகளுக்கு பதில் ஒன்றுதான். அருட்கவி கு. செ. இராமசாமி என்பதுதான் அந்த பதில். இவர்தான் கட்டுரையைக் கவிதையாக எழுதுபவர். இவர் படைக்கும் கட்டுரைகளில்; திறனாய்வாளர்களால் கண்டுணரப்படாத கவித்துவம் வெளிப்பட்டு நிற்கின்றது. தன்னுடைய எழுத்தில் தத்துவம், யோகம், மறைபொருள் விளக்கம் எல்லாவற்றையும் உருவேற்றித் தருகின்ற உன்னதமான சொற்சாகசக்காரர்;.  இவரின் ஆக்கங்களுக்கு “அருள்மணக்கும் எழுத்துகள்” என்று பெயர் தரலாம். எழுதும் இவருள்ளும் அருள் மணக்கும். படிக்கும் நம் உள்ளத்திலும் அருள் மணக்கும். மொத்தத்தில் உலகத்திற்கே அருள்மணக்கும் எழுத்துக்களை வற்றாத ஜீவகங்கையாக சிவகங்கையில் இருந்து எழுதிவரும் கவிகங்கை இவர்.
சொல்ல வந்ததை எளிமையாக, வெற்றுச்சொல் கலவாமல் கூர்மையுடன் தரும் தனிவகை எழுத்து இவருடையது. அவ்வப்போது பல இதழ்களில் எழுதிய நாற்பத்தோரு கட்டுரைகள் “நல்லதமிழ் ஞானத்தமிழ்” என்று நூல்வடிவில் வருவது உலகை அருள்மணக்க வைப்பதற்கான முயற்சியாகும்.
இந்நூலில் உள்ள இவரின் ஞானத்தமிழ்க் கட்டுரைகளில் இராமாயணம், பாகவதம், பாரதம், கந்தபுராணம், திவ்யபிரபந்தம், திருவாசகம், தேவாரம் போன்றனவும், பட்டினத்தார், அருணகிரியார், குமரகுருபரர் போன்றோரின் பாடல்களும், தொட்ட தொட்ட இடங்களில் எல்லாம் தோன்றுகின்றன. இவைதவிர சோதிட ஆராய்ச்சிக் குறிப்புகள், அறிவியல் சிந்தனைகள், அறவியல் சிந்தனைகள், பக்திமார்க்கம், மந்திர உச்சாடனம், வரலாற்றுச் சிந்தனைகள் போன்ற பற்பல செய்திகளின் கருவூலமாக இக்கட்டுரைத் தொகுப்பு அமைந்திருக்கிறது.  சிந்தனையும், சிரிப்புமாக நகரும் கட்டுரைகள் படிப்போர்க்குப் புதுவகை இன்பம் தருவன.
சிவச்சின்னங்களை முதல் மூன்றுகட்டுரைகள் விளக்குகின்றன. திருநீறு, உருத்திராட்சம், பஞ்சாட்சரம் என்ற மூன்றின் நீள, அகலங்களை விளக்கும் இவைகள் ஞானத்தமிழ் நூலுக்கு நுழைவாயிலாக அமைகின்றன. ”குருமுகமாய்க் கிடைத்த மந்திரத்தை ஒருமுகமாய் இருந்து உருவேற்றுதல் ஜபயோகம். வரையறையின்றி உருவேற்றினால் அது தவம். வரையறை செய்து கொண்டு உருவேற்றினால் அது ஜபம்” என்ற இவரின் விளக்கத்தால் எளியோருக்கு ஜபயோகம், தவம், ஜபம் புரிந்துபோகின்றன. தொடரும் விநாயகர், முருகன் குறித்த கட்டுரைகள் சிவகுடும்பத்தில் நம்மையும் ஒன்றுசேர்ப்பன. சிவோகம் சாமியார் பற்றிய  கட்டுரை ஞானிகளின் இயல்பை உணர்த்துகின்றது. இந்தக் கட்டுரையைப் படிக்கையில் ஞானிகள் உலக இயல்புக்கு மாறானவர்கள் என்ற கருத்து விளங்குகிறது. ஞானிகள் உலக உயிர்களைக் காப்பதில் கவனம் செலுத்துபவர்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
திருவரங்கத்துப்பெருமாள் அழகை ஆராதிக்கும் கட்டுரை”உறங்காவில்லிதாசர்”. ”சாதி மதங்களைப் பாரோம்” என்ற அடிப்பொருளில் இந்நூல் செல்லுகின்றது என்பதற்கு இந்தக் கட்டுரையும் ”சாதிக்கு அப்பாற்பட்ட சமுதாயம்” என்ற கட்டுரையும் நல்ல சான்றுகள்.  சம்பந்தரின் முதல்பதிகமான ”வேயுறு தோளிபங்கன்” என்ற தொடக்கமுடைய பாடலைப் பாடி எந்தச் செயலைச் செய்தாலும் வெற்றிமுகம்தான் என்று படிப்பவரின் இன்னலைத் தீர்க்கிறார் இந்நூலாசிரியர். இப்பதிகத்தின் அடுத்த பாடல் உரையாளர்களுக்கு சவால்விடும் பாடல். ஒன்பதொடு ஒன்றொடு ஏழு என்ற இந்தப் பாடல்தொடருக்கு உண்மைப் பொருளைக் காட்டியிருக்கும் இவரின் அருட்கொடை ஞானத்தமிழுக்கு வளம் சேர்ப்பதாகும்.
நினைந்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும் ஆனந்தத் தேன்சொரியும் பரம்பொருளின் திருவடிகளை மாணிக்கவாசகர் கண்ட முறைப்படி ”ஆனந்தத்தேன்” என்ற கட்டுரை எடுத்துரைக்கின்றது. கச்சிஏகம்பனை, கள்ளக் கம்பனாகக் கண்ட  சுந்தரத்தமிழ் அருட்கவியாரால் இனம் கண்டுகொள்ளப் பெற்றுள்ளது.
தற்பெருமை கொள்ளாதவன் அனுமன் என்று விஸ்வரூப  அனுமனின் புகழ்பாடுகிறது மற்றொரு கட்டுரை. எழுத்தாளர் பாலகுமாரனுக்குப் பதில் தருவதாக ஜோதிடம் பற்றிய மற்றொரு கட்டுரை. ஒன்றுக்கு ஒன்பது பொருளைத் தருவன ”இட்டுக் கெட்டவன்” என்ற கட்டுரையும் ”பித்தன் மேல் விழுந்த பிரம்படி” என்ற கட்டுரையும். சப்த மாதர்கள் பற்றிய கட்டுரை இத்தொகுப்பில் உள்ள அரிய பொக்கிஷம். சப்த மாதர்களின் சிறப்பையும் வழிபாட்டையும் சக்தி உபாசகராக இருந்து இவர் அறிவிக்கிறார்;. இக்கட்டுரையைப் படிப்பவரின் உடல் முறுக்கேறுகிறது என்றால் எழுதியவரின் கரங்களில் எத்தனை சக்தி இருந்து செயல் பெற்றிருக்க வேண்டும்.
பட்டினத்தாரின் புகழைப் பேசும் கட்டுரை ”சிறைமீட்ட செந்தமிழ்” ‘‘வைத்தியநாதர், வயிரவர்” இவர்கள் மேல் பாடப்பெற்றுள்ள பதிகங்கள் இந்நூலின் சக்தியை அதிகரிக்கின்றன. நுழைவாயிலில் முக்கண்ணன் புகழ்பாடிய ஆசிரியர் நூல்நிறைவில் முக்கண்ணுடைய தேங்காயைப் பற்றிய செய்திகளை விரித்துரைக்கிறார். தெய்வ ஆராதனையில் தேங்காய் நிறைவில் வரும். இத்தொகுப்பையும் அதுவே நிறைவிக்கின்றது.
துவண்டு கிடக்கும் மனிதனை, பக்தனை ”நான் இருக்கிறேன் எழு, நம்பிக்கை தரும் என் எழுத்து இருக்கிறது” என்று சொல்லும் இனிய பதங்களால் ஆன கட்டுரைகளால் நூல் வடிவமைக்கப் பெற்றுள்ளது.
நாள்தோறும் எழுதுவதே தொழில் என்று அதிகாலையில் எழுந்து எழுதிவருபவர், தன்னை நாடி வருபவர்களைத் தன் மனத்தாலும், சொல்லாலும், தமிழாலும், சோதிட நுட்பத்தாலும் தாங்கி, சமுதாயப் பெருவெளியில் அவர்கள் நலமோடு, வளமோடு வாழ நம்பிக்கை விதைகளை அவர்களுக்குள் நடுநிசி வரை நட்டுவருபவர் அருட்கவி கு. செ. இராமசாமி;.
பிறந்தது மாணிக்கவாசக மண்ணில். கற்றது காரைக்குடி மண்ணில். நடத்தியது நடந்தது மன்னை, புதுகை, கங்கை மண்ணில். புரந்தது சிவகங்கை மன்னர் வள்ளன்மை. என்றும் இருப்பது பழகியோர் நெஞ்சில்.
உண்பது உள்ளங்கை அன்னம். உடுப்பது துவராடை. படுப்பது வீட்டின் வெளியில். ஆங்கிலமும், தமிழும், சம்ஸ்கிருதமும் இவருள் துள்ளிவிளையாடும். எழுபது வயதிலும் மேற்சொன்ன அத்தனையும் இவரை இளமையாக என்றும் வைத்திருக்கின்றன. இதனால் இவர் தமிழும் இளமையாய் இருக்கிறது. இனிமையாய் இருக்கிறது.
இவரின் இளமையை, இனிமையை நிலைநிறுத்த நாம் கரம் சேர்ப்போம். இவரின் அடுக்கிய நூல்களை வாங்கி வாசிப்போம். நண்பர்களுக்கு வாங்கித்தருவோம். நூலகங்களுக்குப் பரிசளிப்போம். உதவுவோம் உயர்வோம்.

அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை – நூல் அறிமுகம்

முனைவர் மு. பழனியப்பன்


img_0066

கோயில்கள் மாபெரும் கலைப்படைப்புகள். அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, பாடல்கலை, ஆடல்கலை, இயல்கலை போன்ற கலைகளின் இருப்பிடம். அவை சார்ந்து எழுந்த வேதம், ஆகமம், திருமுறை, தத்துவம், திருப்புகழ் போன்றன கோயில்களின்  ஒலிநிலை உயர்வுகள். புராணம், இதிகாசம், சிற்றிலக்கியங்கள் போன்ற படைப்புக்கலை உயர்ச்சிகள். கோயில் பற்றியதான கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றன அழியாத வரலாற்றுச் சான்றுகள். கோயில் அமைவிடம், சுற்றுச் சூழல், நீர்நிலை போன்றன மண்வள மேம்பாடு சார்ந்தன. கோயில் திருவிழாக்கள் பக்தி அடிப்படை மட்டும் வாய்ந்தன அல்ல. சமுதாயக் கட்டுமானம், சமுதாய ஒத்திசைவு ஆகியன சார்ந்துன.
இந்நிலையில் ஒரு கோயிலைக் காண்பதென்றால் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் கண்டுவிட்டுச் சென்றுவிட  இயலாது. அதன் பருப்பொருள், நுண்பொருள் ஆகியனவற்றை உணர்ந்தாக வேண்டும். உணர்ந்ததை வெளியுலகிற்கு உணர்த்தியாகவேண்டும். இவ்வாறு  தமிழகத்தின் ஒவ்வொரு கோயிலும் தக்கப் பின்னணியோடு ஆவணப்படுத்தும் முயற்சி தற்போது தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
ஆஸ்திரேலியாவைச் சார்ந்த தமிழன்பர் அன்பு ஜெயா அவர்கள் தமிழகக் கோயில்களில் ஒன்றாக விளங்கும் திருவதிகை பற்றிய அவரின் பதிவை, மேற்சொன்ன அத்தனை உயர்ச்சிகள் சார்ந்து ஒரு நூலாகத் தந்துள்ளார். அந்நூலின் பெயர் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை என்பதாகும். மலேசியா நாட்டில் சேலாங்கூர் பகுதியில் அமைந்துள்ள திருபீடம் அமைப்பு இதனை வெளியிட்டுள்ளது.
அன்பு ஜெயா என்ற பெயரை  முதன்முதலாக மதுரைத்திட்டத்தின் சிலப்பதிகாரப் பதிப்புப் பணியாற்றிய பெருமக்களுள் ஒருவராக அவரைக் கண்டுகொள்ள முடிந்தது. முன்னேற்றமான  சிந்தனைக்குரியவர் அன்பு ஜெயா என்பதன் அறிகுறி அது. தொடர்ந்து பல கருத்தரங்குகள், சந்திப்புகள், இணைய இயங்கு வட்டம் போன்றவற்றில் அவர் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ள வாய்ப்பளித்தது.
அவர் திருவதிகை பற்றி எழுதியுள்ள இந்நூலில் மிக முக்கியமான சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக திருவதிகைக் கல்வெட்டுகளை அவர் மீள்பதிவாக்கம் செய்துள்ள முறைமை அவரின் வரலாறு சார் வளமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலும் திரிபுரம் எரித்த நிலையில் அவ்வெப்பத்தைத் தணிவிக்க வேகாக் கொள்ளைக்குச் சிவபிரான் சென்ற நாட்டுப்புற வழக்கும் நூலில் தரப்பெற்றிருப்பது உரிய மதிப்பினை மக்கள் இலக்கியத்திற்கும் அளித்துள்ள பாங்கினை வெளிப்படுத்துவதாக உள்ளது.
நூல் ஏழு பகுதிகளைக் கொண்டுவிளங்குகிறது. திருவதிகை வீரட்டானேஸ்வரர், கோயில் அமைப்பு, சுயம்புலிங்க வழிபாடு, தீரத்தங்களும் திருவிழாக்களும், திரிபுரங்களின் தோற்றமும் அழிவும், திருநாவுக்கரசு சுவாமிகள், கல்வெட்டும் திருப்பணிகளும், திரவதிகைப் பாடல்கள் ஆகியன உட்தலைப்புகளாக அமைக்கப்பெற்றுள்ளன. நூலின் இடை இடையே அழகான வண்ண நயமிக்க புகைப்படங்கள் இணைக்கப்பெற்றுள்ளன. இதன் காரணமாக திருவதிகையை நேரடியாகக் கண்டதுபோல் ஓர் உணர்வு படிக்கும்போது ஏற்படுகிறது.
அன்பு ஜெயா இந்நூல் எழுதும்போது உருகி நின்ற இடம் மூலட்டானத்தி்ன் சுற்றுச்சுவர் பகுதியாகும். அங்குள்ள சிற்ப கலை நயங்களைக் கண்ட வண்ணம் அங்கேயே அன்பு ஜெயா நின்றிருந்திருக்க வேண்டும். எத்தனை மணிநேரம் நின்றாரோ. மேலும் திரிபுரம் அழித்த தேர்க்கோலத்தைக் கண்டு கண்டு அவர் மெய் உருகுகிறார். இராவணன் ஆணவமழித்த இறைவனை அவர் பெரிதும் போற்றுகிறார்.
இந்நூலின் கூடுதல் இணைப்பு திருநாவுக்கரசு சுவாமிகள். அவரின் தொண்டு, அவரின் உடன்பிறந்தார் திலகவதியின் சிறப்பும் உருவமும் இந்நூலில் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளது. அப்பெருமாட்டி அழகுடன் வெள்ளைக்கலை உடுத்தி பூக்குடலையுடன் நம்மை வணங்குகிறார்.
அரிமோகினி கதை திருவதிகைக்கே உரிய கதை. இதுவரை வெளிப்படுத்தப்படாத கதை. இதுபோன்ற பற்பல சிறுகதைகளை உள்ளடக்கிய பெருநூல் இந்நூல். சைவம் தழைக்க வைத்த ஊர் திருவதிகை. அதிகை என்ற இவ்வூரின் பெயர் அதிகமான அளவில் சைவத்திற்குத் தொண்டு செய்தமையால் பெற்றதாகும். அதிகைக்கு ஒரு அன்பு ஜெயா. அதுபோல் மற்ற கோயில்களுக்கும் அன்பு ஜெயாக்கள் பெருகுக.

விலை- 120 ரூபாய்.
நூல் காந்தளகம், சென்னையில் கிடைக்கிறது.
----------------------------------------------------------
https://puthu.thinnai.com/?p=34043

உத்தமபுத்திரா புருஷோத்தம்

– தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை சேர்க்கும் நல்லதொரு படைப்பு

முனைவர் மு. பழனியப்பன்

தமிழாய்வுத் துறைத்தலைவர்
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
சிவகங்கை, 630562
9442913985


படைப்பு மனம் வேறுபட்டது. மற்ற மனங்களை விட அது மிகவும் மாறுபட்டது. நுழையாத வாசல்களிலும் அது நுழைந்து பிரிக்கமுடியாத இழைகளையும் அது பிரித்து சேர்க்க முடியாத சேர்மானங்களைச் சேர்த்து, தொடர்பற்றவற்றை தொடர்புபடுத்தி, தொடர்புடையவற்றைத் தொடர்பிலாததாக்கி படைப்பு மனம் செய்யும் புதுமை  காலகாலத்திற்கும் விரிந்து கொண்டே போகின்றது.
முழுவதும் எழுதிவிட்ட வள்ளவருக்குப் பின் என்ன எழுத இருக்கிறது. ஆனால் இருந்து கொண்டுதானே இருக்கிறது. இன்னும் படைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டுதானே இருக்கிறது. எழுதும் கலைஞர்களை நாளும் உலகம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அவர்கள் எழுதுவதைப் பற்றிச் சிந்திந்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
எழுதுவது என்பது ஒருவகையான  சித்தநிலை.- அறிவு நிலை- அனுபவநிலை. எழுதத் தொடங்கிவிட்டால் எழுத்தெல்லாம் அதுவே நிறையும். பார்ப்பதெல்லாம் அதுவாக நிறையும். சுவாசிப்பது, பசிப்பது எல்லாம் அதுவாக படைப்பது என்பது ஒருவகையான சித்தநிலை.
படைப்பாளனின் உள்ளே நி்ன்று எது எழுதத் தூண்டுகின்றது. அவன் எழுதுவதெல்லாம் சரியா? எழுதும் மனோநிலையில் எண்ணறிய தத்துவங்கள் வந்து குவிந்துவிடுமா? படைப்பாளனின் தன் படைப்பிற்குள் அறிந்தது அறியாததெல்லாம் எப்படி வந்து ஒன்றாய்க் கூடுகட்டி நிற்கின்றது. இந்தப் புதிர்த்தன்மையால்தான் படைப்பாளிகள் தனித்த மனிதர்களாக சமுதாயத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சமுதாயத்தில் ஒன்றாமலும் விலகாமலும் நிற்கிறார்கள்.
படைப்பாளன் எழுத்துகளைத் தொடர்ந்து அமைந்து ஒரு சங்கிலியை உருவாக்குகின்றான். இந்தச் சங்கிலிக்குள் பொருள் நீள நிற்கின்றது. அழகு தோகை கட்டுகின்றது. தத்துவம் மையமாக பரிணமிக்கின்றது. இப்பொதுத்தன்மையில் இருந்துத் தற்போது எழுத்துக்களுக்குள் தொடர்புகள் (லிங்க்) பல வந்து தொடரும்படியான முயற்சி வந்துசேர்ந்துள்ளது.
கணினி அறிஞர்கள் அறிவியல் சார்ந்தவர்கள். படைப்பு மனம் சார்ந்தவர்கள். இவர்கள் இயந்திரத்தை இயக்கும்போது இந்த இரண்டு பண்புகளும் அவர்களிடத்தில் அளவுகடந்து நிற்கவேண்டும். இவர்கள் புதிய இலக்கியப் படைப்புகளைப் படைக்கும்போது அவர்களின் அறிவியல், படைப்பியல், தொடர்பியல் அறிவும் இணைந்தே் படைப்பிற்குள் செயல்படத் தொடங்கிவிடுகின்றது. எனவே கணினி சார்ந்த படைப்பாளர்களின் படைப்பில் புது மெருகு தென்படுகின்றது. அப்படி ஒரு புதுமெருகு கொண்ட கணினியாளர் –படைப்பாளர் உத்தமபுத்திரா புருஷோத்தம்.
இவர் கணினித் துறையில் மென்பொருள் வல்லுநர். இவரின் மென்கரங்கள் பட்டு கடினமானவையும் எளிமையாயின. இவரின் கரம் பட்டு தமிழ்க்கவிதை உலகம் புத்துலகிற்குப் பயணிக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.
ஒரு கவிதைக்குள் எத்தனை தொடர்புகளை ஏற்படுத்த இயலுமோ அத்தனை தொடர்புகளைப் படைப்பாளராகவும், மென்பொருள் வடிவமைப்பாளராகவும் இருந்து அவர் தொடுத்துள்ளார். இந்தச் சிந்தனை எப்படி அவருக்கு வாய்த்தது.கனவில் வாய்த்தது. மனத்தின் சித்த நிலையில் வாய்த்தது.
மரபுக் கவிதை எப்படி அவருக்கு வாய்த்தது. மரபு சரியாக இருக்கிறதா! என்று பத்துமுறை பார்த்தும் தளைதட்டுகிற தமிழாசிரியர்களின் நிலைக்கு மேலாக அவரிடத்தில் வெண்பாவும் ஆசிரியமும் கலித்துறையும் எவ்வாறு கலிநடம் புரிகின்றன. ஒரு பாடலைப் படித்தவுடன் அதன் அலைவரிசை அவர் மனதிற்குள் உட்கார்ந்து கொண்டுவிடுகின்றது. அந்த மரபில் தானும் செய்யப் பழகிய அவர் மரபுக் கவிதையினை எளிமையாகக் கற்றுக் கொண்டுள்ளார். தமிழின் தலைசிறந்த மரபுக்கவிதைகளின் வாசகராகவும் அவர் உள்ளார். கண்ணதாசனும், அபிராமிப்பட்டரும், குமரகுருபரரும் அவரின் நூலக நண்பர்கள்.
நான்கு அடி வெண்பாவில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஒரு விருத்தமாக அவர் மொழியில் ஐந்து சொல்- நான்கடி (அதாவது இருபது வார்த்தைகள்) என்ற நிலையில் விரிகின்றது. அவரின் படைப்பாற்றலை படைப்புத் தொடர்பினை அவரே நூலின் தேவையான பக்கங்களில் விளக்கியுள்ளார் என்றாலும் முப்பெருந்தேவியருக்கு நூறு பாடல்கள் என்ற அமைப்பில் வெண்பா ஒன்றுக்கு பதினாறு சொற்கள், இரு வெண்பாவிற்கு முப்பத்தியிரண்டு சொற்கள். முப்பத்தியிரண்டு சொற்களில் தொடரும் முப்பதியிரண்டு கவிதைகள். இவை அந்தாதியாகவும் தொடரும். இதுபோன்று மூன்று அன்னையருக்கும் படைத்துள்ளார். இவைதவிர  கடவுள் வாழ்த்து, பாயிரம் என்ற நிலையில் நூற்றெட்டுப் பாடல்களை படைத்துக்கொண்டுள்ளார். கவிதையைப் படைத்தது மட்டுமில்லாமல் அதற்கான உரைகளையும் வரைந்து, நல்ல தலைப்புகளையும் தந்து அத்தத்தலைப்புகளையும் இணைத்து ஒரு கவிதையாகவும் ஆக்கி இவர் செய்துள்ள படைப்பின் தொடர்புபடுத்தும் தன்மை இதுவரைத் தமிழ்க் கவிதையுலகிற்குக் கிடைக்காத புதிரான அதிசயத்தன்மையாகும்.
இப்பெருநூலில் கவியழகும், சொல்லழகும், தத்துவழகும், எண்அலங்காரம் போன்ற நலன்களும் சிறந்துள்ளன. மொத்தத்தில் இந்தக் கவிதை நூலை மென்பொருள் நிலையில் படைத்துள்ளார் என்பது சுருக்கமான கருத்தாக இருக்க முடியும்.
தாயறிவாய் ஒருமனத் திருகண்
முக்குணச் சதுர்மறை
நாயகியாய் ஐம்பொறி அறுசுவை
ஏழிசை நல்லறச்
சேயகமாய் எண்திசை நவரசப்
பற்றாகித் தீதெனும்
பேயகலப் பிணயிகலப் பேணுவித்து
வாலறிவாய் பேதித்தவளே (கலைமகள் அந்தாதி, 13)
என்ற பாடலில் கலைமகளை எண்ணலங்காரம் செய்து அலங்கரிக்கிறார் கவிஞர். ஒன்றாய் நிற்கிறாள் கலைமகள். அதே நேரத்தில் வேறாய்ப் பேதித்தும் நிற்கிறாள் என்பதை இக்கவிதை ஒன்றில் தொடங்கி ஒன்பதில் முடிந்து உணரத்துகின்றது.
இவர் செல்வத்தைப் புரக்கும் இலக்குமிக்கும் அந்தாதியை அழகாகப் பாடியுள்ளார். அன்றைக்கு வந்த எங்கள் இலக்குமி என்றைக்கும் நீங்காமல் வளர்ந்து வாழ யாருக்கும் அருளும் அந்தாதி இது.
பெருஞ்சிகைப் பெய்வளையே! பெருநிதியம்
பெறுனர்பால் பெரும்பலந்
தருஞ்சிகை அகநெய்வார் தகைப்பேணி
முனைவர்பால் தனமளக்கும்
அருஞ்சிகை அளவறிந்து செயலாக்கும்
அனைவர்பால் அமுதளிக்கும்
நெருஞ்சிகை நெய்வாச நறுமதிநின்
நெஞ்சின்பால் நெடியோனே!
(திருமகள் அந்தாதி, 11)
என்ற இந்தப்பாடலில் ‘‘முனைவர் பால் தனமளக்கும் ’’ என்ற தொடர் இலக்கியச் சிறப்பும் மந்திரச் சிறப்பும் மிக்க தொடராகும். இச்செய்யுளில் பெருநிதியம், அமுதம் ஆகியன குறிக்கப்பெற்றுள்ளன. இவை திருமகளோடு பாற்கடலில் உடனாகப் பிறந்தவையாகும். எனவே திருமகளையும் செல்வத்தின் குறியீடுகளையும் இல்லத்தில் வந்துசேர்க்கும் நலமிக்க பாடல் இதுவாகும்.
‘பராபரையாய் பகுத்தளித்த பராசக்தியைப்
பரிந்துவக்கப் பகிருதலும்
பராமரித்துப் பிறர்களிக்கப் பண்ணுதலும்
பரானுபவப் பரமானந்தத்
தராதரமாய் துய்ப்பதிலும் துன்பமதைத்
துடைப்பதிலும் ஐம்புலத்துச்
சராசரமாய் உள்ளமதாய்ச் சலனிப்பதும்
சுவாசிப்பதுவும் கடவுளுறையே (அம்பிகை அந்தாதி, 10)
என்ற பாடல் அம்பிகையைப் போற்றும் நல்ல பாடல். சிவதத்துவத்தையும், சக்தி தத்துவத்தையும் முழுமையாய் விளக்கும் பாடலும் இதுவாகும். பாரசக்திக்குத் தன்சக்தியைப் பகுத்தளித்த பிரானுக்கு உரிய நிலையில் உதவுவதும், துன்பமதைத் துடைப்பதுவும்,  உடலுக்குள் உயிராக சலனிப்பதுவும் அம்பிகையின் இயல்பென மொழிகின்றது  இப்பாடல்.
தமிழ்க் கவிதைகள் தத்துவம், கவித்துவம், சொல்வளம், பொருள்வளம், மந்திர வளம், இலக்கிய வளம், அருள்வளம் பெற்றவை என்ற நிலையில் இதுவரை இருந்து வந்ததன. கவிதையின் சொற்கூட்டம் என்பது வெற்றுச் சொல்கூட்டம் அல்ல. அச்சொற்களுக்குள் எண்ணிலா தொடர்பலைகளைச் சேர்க்கமுடியும். அதன்வழி தமிழ்க்கவிதையை வலிமைப்படுத்த முடியும் என்ற புது நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் உத்தமபுத்திரா புரஷோத்தம்.
இவர் நல்ல கவிஞர். நல்ல உரையாசிரியர், நல்ல தொகுப்பாளர். நல்ல நண்பர். நல்ல எண்ணங்கள் விளைவிக்கப் பாடுபடுவர். அவரின் கவிதை வழி பெருகட்டும். கலைகளும்,செல்வமும், வலிமையும் நம் அனைவரின் வாசலுக்கும் வந்துசேரட்டும். முதல் நூல் இது என்பதை இவரின் படைப்பாற்றலுக்கு இது கடவுள் வாழ்த்து. இனி தொடரட்டும் அவரின் வளமான படைப்புகள்.
இவர் இந்நூலை இணையத்திலும் இட்டுள்ளார். இவரின் வலைப்பூ முகவரிகள்
http://thamilkavithaikal.blogspot.in/2014/02/4.html
ivraman.wordpress.com
http://kuralamutham.blogspot.in/2009/06/blog-post_12.html
-----------------------------------------------------------------------------------------

பகைவனும் நண்பனே – நூல் பற்றிய கண்ணோட்டம்

முனைவர் மு. பழனியப்பன்

தமிழாய்வுத் துறைத்தலைவர்

மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,
சிவகங்கை


ஏன் எழுத வேண்டும்? எதற்காக எழுத வேண்டும்? எப்படி எழுதவேண்டும் போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு சொல்தான் பதில். அனுபவம். அனுபவித்ததை எழுதவேண்டும். மற்றவர்கள் அனுபவிப்பதற்காக எழுதவேண்டும். அனுபவித்தபடி எழுதவேண்டும். அனுபவங்கள் எழுதத் தூண்டும் ஊற்றுக்கண்கள். நம்பிக்கை வறட்சி ஏற்பட்டுவிடுகின்றபோது அனுபவ எழுத்து ஊற்றுகளே வாழ்க்கையை வளமாக்கும் அட்சயப் பாத்திரங்களாகி விடுகின்றன. அனுபவங்கள் மட்டும் வழிநடத்தினால் ஏராளமாய் எழுதலாம். கற்பனையாய், உண்மையாய், கவிதையாய், கதையாய் எழுதிக்கொண்டே போகலாம். வெற்றி அனுபவம், வீழ்ச்சி அனுபவம், தோல்வி அனுபவம், நம்பிக்கை அனுபவம் எழுத்து அனுபவம் என்று அனுபவச் சாலையாக விளங்குபவர் அகநம்பி அவர்கள். ‘‘தன்னம்பிக்கை ஒரு மூலதனம்’’ என்ற அவரின் முதல்நூல் என்னை அதிகம் சிந்திக்கவைத்தது. பலரை அந்நூலின் பக்கம் அழைத்துச் செல்ல வைத்தது. இந்த நூலின் வெற்றியை அவர் பறித்துககொண்டிருந்தபோதே அடுத்த நூலுக்கான ஆயத்த வேலைகளில் இறங்கிவிட்டார். நம்பிக்கை அனுபவம் இந்த உலகிற்குத் தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்பது அவருக்கு இந்தச் சமுதாயம் வழங்கியிருங்கின்ற நல்ல பணி. நல்ல கடமை. அந்த நல்ல கடமையை நிறைவாகவேச் செய்திருக்கிறார் அகநம்பி.
‘‘பகைவனும் நண்பனே’’ என்ற இந்த அனுபவ நூலில் ஆங்காங்கே அவரின் தன்னனுபவ நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்வுகள் படிப்பவர்க்கு அவரையும் அறிமுகம் செய்கின்றன. நூலுக்குள் வளத்தையும் கொண்டுவந்து சேர்க்கின்றன. தன்னனுபவத்தோடு, கேட்ட, பார்த்த, படித்த, ரசித்த, விமர்சித்த அனுபவங்களை ஒன்று கூட்டி சுவையான கலவையாகத் தந்துள்ளார் அகநம்பி அவர்கள்.
முதலாவதாக நட்பினைச் சொல்லிப், பகையை இடையில் வைத்து, மீண்டும் நிறைவில் நட்பின் திறம் சொல்லி முடிகின்றது இந்நூல். ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்வில் அருகிருந்து தரிசித்ததைப்போல அகநம்பி பகை பற்றிச் சொல்லிச் செல்கிறார். ‘‘மனித வாழ்க்கையில் எந்த பெரிய பதவியில் இருந்தாலும் சரி அடிமட்டத்தில் உள்ள நபராக இருந்தாலும் சரி அவரவர் தகுதி ஏற்ப பகைவன் அல்லது எதிரி என்ற தவிர்க்கவே முடியாத நபர் நிச்சயமாக இருப்பார். இருந்தேயாக வேண்டும் என்பது யாராலும் மாற்ற முடியாத இயற்கையின்; விதி’’ என்ற கருத்தைப் படிக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிரிகள் என்று புலம்பும் நமது மனத்திற்கு நமக்கு மட்டுமல்ல எதிரிகள் ….. எல்லாருக்கும்தான் இருக்கிறார்கள் என்று இந்தப் புத்தகம் சொல்லுவதாகக் காதுகளுக்குக் கேட்கின்றது.
பகைவர்களும் நண்பர்களே…. நண்பர்களும் பகைவர்களே….. இதுவே பகையின் விநோதம். ‘‘பகைவன் என்பவன் வேறு யாரும் அல்ல… அவர் நமது முன்னாள நண்பரேதான்… நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இணையாக நம்மோடு கைகோர்த்தும் நமது தோளில் ஆறுதலாகக் கைபோட்டும் நடந்து வந்த நண்பர் என்றாவது ஒருநாள் அதில் இருந்து மாறுபட்டு செயல்படும்போது அங்கே நட்பு பகையாகின்றது’’ என்ற தெளிவு பகை, நட்பு என்ற இரண்டுக்கும் உள்ள தொடர்பின் ஆழத்தை எடுத்துக்காட்டுகின்றது.
பகை பற்றிய ஒரு நல்லத் திறனாய்வு இந்நூல். பகையின்றி வாழும் பாடத்தை இந்நூல் நமக்குச் சொல்லித்தருகின்றது. எத்தனை நூல்கள் படித்தாலும் எத்தனை சொன்னாலும் பகை வந்துவிடுகிறதே என்றால் அந்தப் பகையையும் முன்னேற்றத்திற்கான வழியாக இந்நூல் காட்டும் புதிர் அனுபவத்தை அகநம்பி அவர்களி;ன் வார்த்தைகள் கொண்டு கற்றாலே விளங்கிக்கொள்ள இயலும்.
யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது என்று இராமனுக்கு அறிவுரை சொன்னார் வசிட்டர். இதனைக் கற்றுக் கொண்டு உலகமெல்லாம் நடந்த இராமனுக்கும் அளப்பரிய பகை வந்து சேர்ந்தது. பகை தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அதனால் தளர்ச்சியடையாமல் வாழவேண்டும் என்று கற்றுத் தருகின்ற அருமையான நூல் இந்தநூல்.
இனிய பேச்சுககாரர் அகநம்பி. இனிய சொற்களுக்குச் சொந்தக்காரர் அகநம்பி. இனிய நடைக்கும் அவரே சொந்தக்காரர். அவர் மனித குலத்திற்கு ஒரு நன்னம்பிக்கை முனை. அவரை நம்பி இந்த உலகம் நம்பிக்கை நடைபோடட்டும். நாளும் வெற்றிகள் வந்து சேரட்டும்.
ஏன் எழுத வேண்டும்? எதற்காக எழுத வேண்டும்? எப்படி எழுதவேண்டும் போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு சொல்தான் பதில். அனுபவம். அனுபவித்ததை எழுதவேண்டும். மற்றவர்கள் அனுபவிப்பதற்காக எழுதவேண்டும். அனுபவித்தபடி எழுதவேண்டும். அனுபவங்கள் எழுதத் தூண்டும் ஊற்றுக்கண்கள். நம்பிக்கை வறட்சி ஏற்பட்டுவிடுகின்றபோது அனுபவ எழுத்து ஊற்றுகளே வாழ்க்கையை வளமாக்கும் அட்சயப் பாத்திரங்களாகி விடுகின்றன. அனுபவங்கள் மட்டும் வழிநடத்தினால் ஏராளமாய் எழுதலாம். கற்பனையாய், உண்மையாய், கவிதையாய், கதையாய் எழுதிக்கொண்டே போகலாம். வெற்றி அனுபவம், வீழ்ச்சி அனுபவம், தோல்வி அனுபவம், நம்பிக்கை அனுபவம் எழுத்து அனுபவம் என்று அனுபவச் சாலையாக விளங்குபவர் அகநம்பி அவர்கள். ‘‘தன்னம்பிக்கை ஒரு மூலதனம்’’ என்ற அவரின் முதல்நூல் என்னை அதிகம் சிந்திக்கவைத்தது. பலரை அந்நூலின் பக்கம் அழைத்துச் செல்ல வைத்தது. இந்த நூலின் வெற்றியை அவர் பறித்துககொண்டிருந்தபோதே அடுத்த நூலுக்கான ஆயத்த வேலைகளில் இறங்கிவிட்டார். நம்பிக்கை அனுபவம் இந்த உலகிற்குத் தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்பது அவருக்கு இந்தச் சமுதாயம் வழங்கியிருங்கின்ற நல்ல பணி. நல்ல கடமை. அந்த நல்ல கடமையை நிறைவாகவேச் செய்திருக்கிறார் அகநம்பி.
‘‘பகைவனும் நண்பனே’’ என்ற இந்த அனுபவ நூலில் ஆங்காங்கே அவரின் தன்னனுபவ நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்வுகள் படிப்பவர்க்கு அவரையும் அறிமுகம் செய்கின்றன. நூலுக்குள் வளத்தையும் கொண்டுவந்து சேர்க்கின்றன. தன்னனுபவத்தோடு, கேட்ட, பார்த்த, படித்த, ரசித்த, விமர்சித்த அனுபவங்களை ஒன்று கூட்டி சுவையான கலவையாகத் தந்துள்ளார் அகநம்பி அவர்கள்.
முதலாவதாக நட்பினைச் சொல்லிப், பகையை இடையில் வைத்து, மீண்டும் நிறைவில் நட்பின் திறம் சொல்லி முடிகின்றது இந்நூல். ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்வில் அருகிருந்து தரிசித்ததைப்போல அகநம்பி பகை பற்றிச் சொல்லிச் செல்கிறார். ‘‘மனித வாழ்க்கையில் எந்த பெரிய பதவியில் இருந்தாலும் சரி அடிமட்டத்தில் உள்ள நபராக இருந்தாலும் சரி அவரவர் தகுதி ஏற்ப பகைவன் அல்லது எதிரி என்ற தவிர்க்கவே முடியாத நபர் நிச்சயமாக இருப்பார். இருந்தேயாக வேண்டும் என்பது யாராலும் மாற்ற முடியாத இயற்கையின்; விதி’’ என்ற கருத்தைப் படிக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிரிகள் என்று புலம்பும் நமது மனத்திற்கு நமக்கு மட்டுமல்ல எதிரிகள் ….. எல்லாருக்கும்தான் இருக்கிறார்கள் என்று இந்தப் புத்தகம் சொல்லுவதாகக் காதுகளுக்குக் கேட்கின்றது.
பகைவர்களும் நண்பர்களே…. நண்பர்களும் பகைவர்களே….. இதுவே பகையின் விநோதம். ‘‘பகைவன் என்பவன் வேறு யாரும் அல்ல… அவர் நமது முன்னாள நண்பரேதான்… நமது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இணையாக நம்மோடு கைகோர்த்தும் நமது தோளில் ஆறுதலாகக் கைபோட்டும் நடந்து வந்த நண்பர் என்றாவது ஒருநாள் அதில் இருந்து மாறுபட்டு செயல்படும்போது அங்கே நட்பு பகையாகின்றது’’ என்ற தெளிவு பகை, நட்பு என்ற இரண்டுக்கும் உள்ள தொடர்பின் ஆழத்தை எடுத்துக்காட்டுகின்றது.
பகை பற்றிய ஒரு நல்லத் திறனாய்வு இந்நூல். பகையின்றி வாழும் பாடத்தை இந்நூல் நமக்குச் சொல்லித்தருகின்றது. எத்தனை நூல்கள் படித்தாலும் எத்தனை சொன்னாலும் பகை வந்துவிடுகிறதே என்றால் அந்தப் பகையையும் முன்னேற்றத்திற்கான வழியாக இந்நூல் காட்டும் புதிர் அனுபவத்தை அகநம்பி அவர்களி;ன் வார்த்தைகள் கொண்டு கற்றாலே விளங்கிக்கொள்ள இயலும்.
யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது என்று இராமனுக்கு அறிவுரை சொன்னார் வசிட்டர். இதனைக் கற்றுக் கொண்டு உலகமெல்லாம் நடந்த இராமனுக்கும் அளப்பரிய பகை வந்து சேர்ந்தது. பகை தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அதனால் தளர்ச்சியடையாமல் வாழவேண்டும் என்று கற்றுத் தருகின்ற அருமையான நூல் இந்தநூல்.
இனிய பேச்சுககாரர் அகநம்பி. இனிய சொற்களுக்குச் சொந்தக்காரர் அகநம்பி. இனிய நடைக்கும் அவரே சொந்தக்காரர். அவர் மனித குலத்திற்கு ஒரு நன்னம்பிக்கை முனை. அவரை நம்பி இந்த உலகம் நம்பிக்கை நடைபோடட்டும். நாளும் வெற்றிகள் வந்து சேரட்டும்.

(பகைவனும் நண்பனே – ஆசிரியர் அகநம்பி, விலை ரூ.120. கோசலை நினைவு அறக்கட்டளை, இயற்கை சக்தி பப்ளிகேசன்ஸ், புன்னமை கிராமம். சீவாடி கிராமம், காஞ்சிபுரம்மாவட்டம், 9585480754
--------------------------------------

பேராசிரியர் அர. வெங்கடாசலம் – திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை – வள்ளுவ ஆன்மீகம்

முனைவர் மு. பழனியப்பன்

தமிழாய்வுத் துறைத்தலைவர்
மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,சிவகங்கை,
திருக்குறளின் கவிதை வடிவம் செறிவானது. அதன் சொற்கட்டமைப்புக்குள் தத்தமக்கான பொருளைக் கற்பவர்கள் பொருத்திக்கொள்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. திருக்குறள் காட்டும் பொதுப்பொருள், சிறப்புப் பொருள், தனிப்பொருள், தொனிப்பொருள் என்று அதற்குப் பொருள் காணப் பெருவழிகள் பல உள்ளன. அறிவியல் சார்ந்தும் அறவியல் சார்ந்தும் பொருளியல் சார்ந்தும் தத்துவம் சார்ந்தும் பண்பாட்டியல் சார்ந்தும் மொழியியல் சார்ந்தும் மரபியல் சார்ந்தும் பல கோணங்களில் திருக்குறளை ஆராய்வதற்கு வழிவகை செய்து வைத்துள்ளார் வள்ளுவர். அவரின் குறுகத் தரித்த குறளே விரிவான பொருள் புரிதலுக்குத் துணைநிற்கிறது. திருக்குறளின் இரு அடிகளை விரிக்கலாம். ஒரு அடியை விரிக்கலாம். ஒரு சொல்லை விரிக்கலாம். இப்படி விரிந்து கொண்டே போகின்றபோது திருக்குறளுக்கு தரப்பெறுகின்ற பொருள் கடல்போல் விரிந்து படிப்பவர் முன் நிற்கின்றது.
திருக்குறள் கருத்துக்களை உளவியல் அடிப்படையில் விரித்துக் காண முனைவர் அர. வெங்கடாசலம் முயன்றுள்ளார். அவரின் திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை என்ற நூல் இத்தகு முயற்சியில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. உளவியல் அடிப்படையில் அமைந்த விரிவுரை என்ற அடிப்படையை அர. வெங்கடாசலம் அவர்கள் இந்நூலில் சுட்டியிருந்தாலும் வள்ளுவ ஆன்மீகம் என்ற தனிப்பாதையை அவர் இந்நூலுக்குள் கொண்டு வந்துச் சேர்த்திருக்கிறார்.
~~திருவள்ளுவர் மனிதனின் இவ்வுலக வாழ்க்கை ஒரு பயிற்சிக் காலம் என்று கூறுகிறார். எதைப் பற்றிய பயிற்சி? மனிதனின் ஆன்மாவைப் கடவுளர் உலகு புகுவதற்குப் பக்குவப்படுத்தும் பயிற்சி. மனிதனின் உயிர் அல்லது ஆன்மா கடவுளர் உலகினை அடைந்து பேரானந்தத்தை அடைய வேண்டுமெனில் அது அதற்குத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். திருக்குறள் முழுவதும் கூறப்படும் அறவழிகளைக் கடைபிடித்து வாழ்ந்தால் ஒருவனுடைய ஆன்மா அவ்வாறான செம்மையை எய்தும். இவ்வுலகமும் பொருள்களும் அப்பயிற்சிக்கான களங்களும் பொருள்களுமாகும். || (ப.134) என்று வள்ளுவ ஆன்மீகத்தைத் தெளிவுபடுத்துகிறார் அர. வெங்கடாசலம்.
மனிதன் பயிற்சிக் காலத்தில் வாழ்கிறான். அவன் பயிற்சிக்காலத்தில் பயிலவேண்டிய நூல், பாத்திட்டம் திருக்குறளாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மனித ஆன்மா தற்போது உள்ள நிலையைவிட மேன்மையான நிலையை அடையும் என்பதே இந்நூல் தரும் உண்மையாகும். அவர் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமானால் ~~விண்ணுலக வாழ்க்கைக்குத் தகுதிபெற மண்ணுலக வாழ்க்கை ஒரு பயிற்சிக் களம்! திருக்குறளில் வரும் 1330 குறட்பாக்களும் பயிற்சிக்கான சிலபஸ். இதுதான் திருக்குறளின் பொருள்.|| (ப. 136) என்பது இந்நூலாசிரியரின் வாய்மொழி.
திருக்குறளை இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும் என்று ஆசிரியர் எண்ணுகிறார். ~~திருக்குறள் வாழ்க்கைத் திறன்களைக் கற்பிக்கும் ஓர் அற்புதமான நூல். மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீகக் கல்வியைத் தரும் நூல். தமிழ் இளைஞர்களுக்கு மிகச் சிறுவயதிலேயே திருக்குறளோ நெருங்கிய உறவை ஏற்படுத்திவிட்டால் அவ்வுறவு அவர்களை அறவழியில் நடத்தும்||( ப. 149)
இவ்வகையில் திருக்குறள் காட்டும் ஆன்மீக வாழ்வினை திருக்குறளில் இடம்பெறும் ஐநூறு திருக்குறள்களுக்குமேல் எடுத்துக்காட்டி இவர் திருக்குறளைச் செழுமைப்படுத்தியுள்ளார். அர. வெங்கடாசலத்தின் வழியில் இந்தச் சமுகம் திருக்குறளை எண்ணினால் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற எல்லையில் படிப்போர் அனைவரும் வள்ளுவக்குடியினராக ஆகிவிடுவோம். தமிழ் மொழி அழியும் தருவாயில் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறும்போது மனம் வருந்துகிறது. ஆனால் சாதியும் மதமும் இன்னும் சில காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று கணிப்பாளர்கள் குறிப்பிடுகின்றபோது உள்ளம் இப்போதே மகிழ்கிறது. அப்படி ஒரு சாதி, சமய மற்ற சமத்துவ சமுதாயத்தைக் கொண்டு வருவதற்கும் அதனைப் பாதுகாப்பதற்கும் திருக்குறளைத் தவிர நிலையான நியாயமான நூல் தமிழர்க்கு இல்லை என்பதை ஏற்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.
பேராசிரியர் அர. வெங்கடாசலம் ஏறக்குறைய பாதியளவில் திருக்குறள்களை எடுத்துக் கொண்டு உரை கண்டுள்ளார். மீதப்பாதியை விடுத்ததற்கான காரணம் படிக்கும் வாசகரை அவ்வழியல் தூண்டி அவரை எழுதச் செய்ய, நினைக்க செய்ய வேண்டிய கடப்பாடாக இருக்கலாம்.
குறிப்பாக திருக்குறளின் முதல் குறளை விடுத்துள்ளார். கடவுள் வாழ்த்துப் பகுதியில் பல குறள்களை விடுத்துள்ளார். இந்த விடுதல்கள் ஆச்சர்யமாக இருந்தன. ஆனால் அவரின் தேர்ந்தெடுத்தல் முறையில் அவருக்கான விடுதலை இருக்கிறது என்று அமைதி கொண்டாலும், வள்ளுவ ஆன்மீகத்தில் மதக்குறிகள், அடையாளங்கள் ஆகியவற்றிற்கு இடமில்லை என்பதை எண்ணிப் பார்த்தால் அவர் கடவுள் வாழ்த்தில் பல பகுதிகளை விட்டதற்கான காரணம் புலப்படுகிறது.
பல அதிகாரங்களை அப்படியே பத்துக் குறள்களுக்கும் விளக்கம் தந்து முழுமைப் பத்தியுள்ளார். இப்பத்துக் குறள்களும் விடமுடியாத அளவிற்கு பெருமைக்கு உரியன என்பது இதன்வழி தெரியவருகின்றது. ஒழுக்கமுடைமை, ஊக்கம் உடைமை, ஆள்வினை உடைமை, கண்ணோட்டம், வினைத்தூய்மை, வினை செயல்வகை, தெரிந்துவினையாடல், வெருவந்த செய்யாமை போன்ற பல அதிகாரங்கள் இவ்வகையில் முழுமையான இவரின் உரை வீச்சுக் களமாகியுள்ளன. இவ்வதிகாரங்களே இன்றைய நிலையில் அதிகம் வேண்டத்தகுவன என்பது இங்குப் பெறத்தக்கக் குறிப்பாகும்.
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு (351)
என்ற குறளுக்கு ~~ஈகோவிற்குத் தீனி போடும் ஐம்புலன்களின் நுகர்பொருளை அவற்றின் பயன்பாடென்ன என்ற அடிப்படையில் அவை நம் ஏவல்களென்பதை மறந்து அவற்றையே பற்றுக் கோடாக நம் எஜமானர்களாக உண்மைப் பொருள்களாகக் கொண்டு இயங்கும் போக்கு இப்பிறப்பே இழிவான பிறப்பு என்று கருதுமளவுக்கு மீளமுடியாத துன்பங்களுக்கு இடம் கொடுத்து விடுகின்றது|| என்று உளவியல் சார்;ந்த உரையை வெங்கடாசலம் தருகின்றார்.
அங்காங்கே ஈகோ, சூப்பர் ஈகோ ஆகியன முளைவிட்டு உரையில் கிளம்புகின்றன. இருப்பினும் ஆன்மீகத் தேடல் என்பது இந்நூல் முழுவதும் உலவுகின்றது.
குடிசெயல்வகை என்ற அதிகாரத்தில்
~~குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் (1023)
என்ற குறள் இடம்பெற்றுள்ளது. இதற்குப் பொருள் அளிக்கிறார் வெங்கடாசலம். ~~ என் குடும்பத்திற்கு ஆவன செய்வேன் என்று முனைந்து முயல்பவனுக்குக் கடவுள் தானே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வந்து உதவி செய்வான் என்று பொருள் கூறப்படுகிறது. ஆனால் நான் ஊழ் அதிகாரத்தில் கடவுள் தலையிடுவதில்லை. ஆனால் வேண்டியதைச் செய்து வைத்து உள்ளார் என எடுத்துக் கொள்ளவேண்டும். கண்ணோட்டம், ஒப்புரவு, நடுவுநிலைமை, அருளுடைமை ஆகிய பண்புகளை மனித இனத்திற்கு வழங்கி உள்ளார். அவை செயல்படுவதன் மூலம் குடும்பத்தைக் காத்தே தீர்வேன் என்று சூளுரைக்கும் ஒருவனுக்கு உதவி வந்து சேரும். அக்குடும்பத்தில் இருப்பவர் யாரேனும் இடுப்பு வேட்டியை இறுகக் கட்டிக்கொண்டு வந்து உதவி செய்வர். அது கடவுளின் உதவி என்றே கொள்ள வேண்டும்.
இவர் தரும் இவ்வுரையில் முன் உரையெழுதியவர்கள் உரையை இவர் கற்றுள்ளார் என்பது தெரியவருகிறது. சில இடங்களில் மற்ற உரையாளர்களின் உரையை மறுத்துள்ளார். அதற்கும் சான்றுகள் உள்ளன. (வெள்ளத்து அனைய மலர்நீட்டம் குறளுக்குத் தரப்பட்ட உரை) சில இடங்களில் மரபு உரைக்கு உறுதியளித்தல் என்ற பாங்கும் செயல்படுகிறது. அதற்கு மேற்குறள் சான்று.
மனம் அமைதி கொள்ளும் வகையில் பல உரைப்பகுதிகள் அமைந்துள்ளன.
~~ அதிகமான பொறுமையினாலோ அல்லது ஆணவத்தினாலோ ஒருவர் நமக்கு அளவு கடந்து தீங்கு செய்துவிட்டபோதிலும் நாம் அந்தத் தீங்கு நம்மைக் கீழ்மைப்படுத்திவிட்டதாக எடுத்துக் கொள்ளாமல் அவருடைய தவறு என்று எடுத்துக்கொள்வதின் மூலம் பொறுமை காத்து அவரை வென்றுவிடலாம். நம்முடைய தகுதி என்பது மற்றவர்களுடைய கூற்றால் நிர்ணயிக்கப்படுவதன்று. நம்முடைய செயல்களாலும் அடைவுகளாலும் நிர்ணயிக்கப்படுவது என்பதில் உறுதியாக நின்று பிறறால் அவமானப் படுத்தப்படும்போது நாம் அதை மனதளவில் ஏற்கமறுத்தால் நம்மால் பொறுமை காக்கமுடியும்.நம்முடைய பொறுமையினால் எதிராளி தம் நோக்கத்தைக் கைவிட்டுச் சில வேளைகளில் நம்மிடம் மன்னிப்புகூடக் கேட்கலாம் என்ற இந்த உரை ஆழமான பொறுமைக்கான உரையாக அமைகின்றது. இப்பகுதி மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தான்தன் தகுதியான் வென்றுவிடல் என்ற குறளுக்கு வரையப் பெற்ற உரையாகும். மனம் சார்ந்த இந்த உரை மின்னல் படிப்பவர்க்குப் புத்தொளி தருவது.
இதுபோன்ற பற்பல மின்னல் கீற்றுக்கள் இவ்வுரையில் உண்டு. திருக்குறள் சார்ந்து இயங்குபவர்கள், திருக்குறளைப் பரப்பும் நண்பர்கள், தோழர்கள் இந்நூலைப் படித்து இன்னும் பயன் பெறலாம். முடிந்தால் பேராசிரியர் அர. வெங்கடாசலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு, அவரிடம் பழகலாம். கலந்துரையாடலாம். அவரை நம் ஊருக்குப் பேச அழைக்கலாம் . தொண்டுகள் செய்யக் காத்திருக்கும் அவரை நாம் இனம் காணுவோம். பயன்படுத்துவோம். வள்ளுவக்குடியில் செயலாற்றுவோம். (தொடர்பிற்கு – பேராசிரியர் அர. வெங்கடாசலம்> ஏ. 19. வாஸ்வானி பெல்லா விஸ்டா, கிராபைட் இந்தியா ஜங்சன், பெங்களுரூ. 560048
-------------------------------------------------------------------------------------------------

பட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை


முனைவர் மு. பழனியப்பன்

இணைப்பேராசிரியர்
மா. மன்னர் கல்லூரி.
புதுக்கோட்டை

நூலாசிரியர்: சிவசக்தி இராமநாதன்,
வெளியீடு நந்தினி பதிப்பகம், சூர்யா பிரிண்ட் சொலுசன்ஸ்,534. காமராசர் ரோடு, சிவகாசி, 9842124415 விலை. ரு. 150
கிராமங்களில் இருந்து நகரங்களுக்குப் பெயரும் நாகரீக வாழ்க்கை என்பது தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது.  நாடுகள் கடந்துப் பெருநகரத்திற்குப் போகவேண்டிய உயரத்திற்குத் தற்போதைய இந்திய மக்களின் சூழல் வளர்ந்துவிட்டது. இருப்பினும் பிறந்த நாட்டை, பிறந்த தாய்மண்ணை வெளிநாடுகளில் பெயர்ந்து வாழும் இந்தியமக்கள் மறவாமல் இருக்கிறார்கள் என்பது மகிழ்விற்கு உரிய செய்தியாகும். அவ்வகையில் வெளிநாடு செல்ல விரும்புகின்ற மக்களுக்கு வெளிநாட்டு நகரங்களின் வனப்பை, வசதிகளை, காண வேண்டிய இடங்களைத் தொகுத்தளிக்கும் முயற்சியாக பட்டி டு சிட்டி என்ற நூல் உருவாக்கப் பெற்றுள்ளது.
அழகிய அச்சாக்கம், நல்ல வழுவழுப்பான தாள், அத்தனைப் பக்கங்களிலும் வண்ணச் சேர்க்கை என்று படிக்கத்தூண்டும் வகையில் இந்நூல் வடிவமைக்கப் பெற்றுள்ளது.
நூலாசிரியராக விளங்கும் சிவசக்தி இராமநாதன் தன் வாழ்க்கைப் பின்புலத்துடன் நூலைத் தொடங்கி தான் ஒரு பயணியாக உலகம் முழுவதும் சுற்றிய அனுபவத்தை நூலுள் விரித்துரைக்கின்றார். ஒரு பெண், மனைவி, தங்கை, மகள் என்ற குடும்பநிலைகளை வெற்றிகரமாக ஆற்றிக்கொண்டு சிறந்த நிர்வாகியாக வளர்ந்து பயணியாக உலகம் சுற்றிய அனுபவப்பதிவு இந்நூல் என்பது கருதத்தக்கது. இத்தனை எல்லைகளை ஒரு சாதாரணப் பெண் கடக்க வேண்டுமானல் அவளின் மனஉரம், துணையிருப்போர் தரும் வலிமை முதலியன கணக்கில் கொள்ளப்பட வேண்டியன என்றால் அதுமிகையாகாது.
பதினெட்டு பட்டி என்ற நாட்டுப்புற வழக்கு, பதினெட்டு சிட்டிகள் என்ற நகர்புற வழக்காக இந்நூலுள் மாற்றம்  பெற்றுள்ளது. கட்டுப் பெட்டி என்று கட்டுக்குள் இருந்தப் பெண்ணினம் கடல்கடந்து சென்றதன் வெற்றி அடையாளம் இந்த நூல் என்பது  இந்நூல் பற்றிய சரியான விமர்சனமாக இருக்கும்.
சிங்கப்பூர், கோலாலம்பூர், கொழும்பு, துபாய்,லண்டன், நியூயார்க்,சிகாகோ, வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்,ஓர்லாண்டோ, இஸ்தான்புல், ஆம்ஸ்டர்டாம், மெல்பர்ன், ஹாங்காங், ஷங்காய், பாரீஸ், ஜெனிவா என்ற பதினெட்டு சர்வதேச நகரங்கள் பற்றி அவற்றின் நிலவியல், பொருளாதார நிலை பற்றி, அந்நகரங்களின் சிறப்புகள் பற்றி எடுத்துரைக்கும் இந்நூல் உலகை பயணத்தால் அளக்க நினைக்கும் அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
ஆங்காங்கே வண்ணப்படங்கள், பெட்டிச் செய்திகள் என்று படிப்பவரைக் கவரும் பாங்கு சிறப்பானது. நல்ல தமிழை துபாய் சென்றும் மறக்காத ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். எண்ணியிருந்தால் இந்த நூல் ஆங்கிலத்தில் கூட ஆக்கப் பெற்றிருக்கலாம். ஆனால் பட்டியில் இன்னமும் வாழும் மக்கள் சிட்டிகள் பற்றி அறிந்து கொள்ள முடியாமல் போயிருப்பர். இவ்வகையில் உலகம் சுற்றும் முதல் (வாலிபி) பெண் இவர்தான் என்ற துணிச்சலை இந்நூல் வழங்குகின்றது.
டிஸ்னி பூங்காக்களில் ஒன்றான எப்பாட் தீம்பார்க் பற்றி ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.  “இந்த பூங்கா வால்ட் டிஸ்னியின் நான்கு பூக்காக்களில் ஒன்றாகவும் 300 ஏக்கர் பரப்பளவில் மேஜிக் கிங்டம் எனப்படும் பூங்காவைப் போல் இரண்டு மடங்கு பெரியதாகவும் உள்ளது. இது உலகின் எதிர்கால நிலையைக் குறிக்கும் வண்ணம் உள்ளது. …மேலும் ஆச்சர்யமுட்டும் சில வகையான யோசனைகள் நிஜமாகவே ஆவதற்குரிய சாத்தியக் கூறுகள் உள்ளன” என்ற கணிப்பு இவரின் நுண்ணிய அறிவை, ஓரிடத்தைப் பற்றி அறிவிக்க வேண்டிய செய்திகளை அறிவிக்கும் நேர்த்தியை எடுத்துரைப்பதாக உள்ளது.
சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்க, பார்க்க, ரசிக்க உதவும் ஒரு நல்ல புத்தகத்தை ஆசிரியர் வழங்கியுள்ளார். இன்னமும் பல நாடுகள் சுற்றி அடுத்தடுத்து புத்தகங்களை எழுதவேண்டும். இவரின் ஆர்வம்  பதிவுகளாக மாறவேண்டு
------------------------------------------------------------

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்


முனைவர் மு. பழனியப்பன்
இணைப்பேராசிரியர்
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி
புதுக்கோட்டை
கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த இராமாவதாரம் என்ற கம்பராமாயணத்திற்கு நல்ல உரை ஒன்று மறுபதிப்பாகித் தற்போது வந்துள்ளது. தமிழ் வளர்த்துப் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1955 ஆம் ஆண்டில் கம்பராமாயணத்திற்கு ஒரு நல்ல உரையை பதினான்குத் தொகுதிகளில் வழங்கியது. இந்த உரை உருவாக்கத்திற்குச் சொல்லின் செல்வர் ரா. பி . சேதுப்பிள்ளை, இராவ் சாகிப் மு. இராகவையங்கார், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் கோ. சுப்பிரமணியப் பிள்ளை, பேராசிரியர் லெ. ப. கரு இராமநாதன் செட்டியார், பேராசிரியர் அ. சிதம்பரநாதன், திரு. பி.ஸ்ரீ ஆச்சாரியா, திரு நீ. கந்தசாமிப்பிள்ளை, பால்நாடார் திரு மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, திரு. பு.ரா. புருஷோத்தமநாயுடு முதலியோர் பங்காற்றியுள்ளனர். இதன் முலமே அந்த உரையின் மேன்மையைப் புரிந்துக் கொள்ள இயலும்.
இந்த உரை முல பாடலை முதலில் பதச்சேர்க்கையாக முல நூல் வடிவிலேயே தருகின்றது. இதற்கு அடுத்ததாக பாடலைப் பதம் பிரித்து அனைவரும் படிக்கும் வகையில் தருகின்றது. இப்பாடலுக்கு பாடற் பொருள் தொடர்ந்து தரப்படுகிறது. இவற்றுடன் வினைமுடிபுகள், அருஞ்சொற்பொருள், பதவுரை, கருத்துரை, ஒப்புமைப் பகுதி, விசேடக் குறிப்பு, இலக்கணக் குறிப்புகள் முதலாயின தரப்பெறுகின்றன.
குறிப்பாக வால்மீகியில் இருந்து கம்பன் மாறுபடும் இடங்கள், கம்பன் எவ்வாறு மாறுபடுகிறான் என்பதை உணர்த்தும் உரையாகவும் இது செய்யப் பெற்றுள்ளது.
மொத்தம் பதினான்கு தொகுதிகளாக விரிந்துள்ள இந்த உரை நூல் தமிழர்க்கு மீண்டும் கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை.
உரையின் வளமையை உணர பல பக்கங்கள் தேவை என்றாலும் சில பகுதிகளை இக்கட்டுரை தர முற்படுகிறது. சுந்தர காண்டத்திற்கு அதன் பெயர்க் காரணம் தொட்டு அதன் முன்னுரையாக விரிந்துள்ள கீழ் காணும் பகுதி இவ்வுரையின் மேன்மையைத் தொட்டுக் காட்டும்.
இராமாவதாரமாகிய பெருங்காப்பியத்துள் சுந்தர காண்டம் ஐந்தாவது பெரும்பிரிவாகும். இது பதினான்கு படலங்களாகிய சிறுபிரிவில் சற்று ஏறத்தாழ 1350 பாடல்களில் முற்றுப் பெற்று விளங்குவது.
வான்மீகி முனிவர் இயற்றியருளிய வடமொழி இராமாயண சுந்தர காண்டமோ 68 சருக்கங்களில் 2800 சுலோகங்களால் முற்றுப் பெற்றுள்ளது.
…..
சுந்தர காண்டம் என்பது நுவல் பொருள் பற்றி வந்த பெயராகும். அது சுந்தரத்தைக் கூறும் காண்டம் என விரியும். சுந்தரம்  அழகு. காண்டம்  நூலின் பெரும் பிரிவு.
சுந்தரம் என்பது உலக நூன்முறையால் இக்காப்பிய நாயகியாகிய சீதாபிராட்டியின் திருமேனியழகினையும், குணநலன்களையும் உணர்த்தி நின்றது. இக்காவிய நாயகனான இராமபிரானுடைய திருமேனியழகினையும் ஆன்ம குணங்களையும் உணர்த்தி நின்றது எனலும் ஆகும்.
அறிவுனூன் முறையால் சுந்தரம் என்பது இறைவனிணையடிக் கீழிருந்து இயற்றும் பணியிழந்து பிறவிச்சிறையுழந்து நொந்த உயிர்த்தொகை உய்யும் பொருட்டு இலங்கையுள் அசோகவனத்துச் சிறையிருந்த பேறு தருவிக்குமவளாகிய பிராட்டியின் பெருமையினையும், உயிர்களின் குற்றம் கண்டு அவற்றைக் கைவிடாது காக்கவிரையும் இறைவன் பெருங்கருணையினையும் இறைவனைப் பிரிந்து உலகியலால் வெதும்பிய உயிரை இறைவனிடம் சேர்ப்பிக்கும் ஒரு பெருங்குரவனுடைய மாண்பினையும் உணர்த்தி நிற்கும் என்பர் பெரியோர்.
இனி வடநூலார் முறைப்படி பிரிந்த தலைவனும் தலைவியும் ஆகியோர் நிலை (விப்ரலம்பசிருங்காரம்) பேசுதலானும் அந்நிலை அழகுடையதாகவும் சுவை விளைவிப்பதாகவும் இருத்தலானும் இராமபிரானும் சீதா பிராட்டியுமாகிய இருவரது பிரிவுநிலை பேசும் இக்காண்டம் சுந்தர காண்டமாயிற்று என்பாரும் உளர்.
சுந்தரன் என்பது அநுமன் பெயர்களுள் ஒன்று எனக் கொண்டு அவன் செயல் விரித்தலின் இது சுந்தரகாண்டமாயிற்று என்பர் ஒரு சாரார்.
மற்றும் சிலர் சுந்தரம் என்பது இனிமையைச் சுட்டுவதாகக் கொண்டு, இனிமையாகிய (சுந்தரமாகிய காண்டம்) என்று கூறுவர். இக்கூற்றுள் இனிமைப் பொருட்கு இக்காண்டத்தோடு மட்டும் ஒரு தனிச்சிறப்பான இயைபு புலப்பட்டமையாலும் அவ்வினிமை பிற காண்டங்களுடனும் இயைபுடையதாதற்குத் தடையில்லாமையாலும் இக்கூற்று நுவல் பொருள் பற்றிப் பிற காண்டங்கட்கும் வழங்கும் பொது வழக்கொடு மாறு கொள்ளுதலானும் பொருந்துவதாயில்லை.
எனவே சுந்தரம் என்பதற்கு அழகு என்று பொருள் கொண்டு முற்பட விரித்த விளக்கமே பல்லாற்றானும் இயைபுடையதாகும்.
இவ்வாறு சுந்தர காண்டத்திற்குப் பெயர் விளக்கம் காண இவ்வுரை பெரிதும் முயன்று ஒரு முடிவை இறுதியாக்கியுள்ளது.
மேலும் சுந்தரகாண்டத்தை நாடகப் பாங்குடையது என்று இவ்வுரை எடுத்துரைக்கின்றது. அதாவது நாடகத்திற்கு உரிய ஐந்து பகுதிகளான, முகம், பிரதிமுகம்,கருப்பம், விளைவு, துய்த்தல் என்பன சுந்தர காண்டத்துள் உள்ளன என்று சான்றோடு விளங்கும் இவ்வுரை கம்பனைக் கற்போர் நெஞ்சில் இருத்தச் செய்வதாக நிலைக்கின்றது.
பல்லாயிரம் பக்கங்களில் கம்பனை, இராமனை, தமிழை நிலைநிறுத்தும் இந்த நூல்களை வாங்கித் தமிழ் உலகம் மேன்மையடைய வேண்டும். தமிழகத் தமிழாசிரியர்கள் அனைவரும் வாங்கினாலே பல்கலைக்கழகம் அச்சடித்த பிரதிகள் போதாமல் போய்விடும். கல்லூரிகள், பள்ளிகள் நூலகங்களில் வாங்கிச் சேர்த்தால் இன்னும் பன்னூறு பிரதிகள் அச்சிடப்பட வேண்டும். கம்பன் கழகங்கள் முன்வந்து வாங்கினால் இன்னமும் இதன் தேவை அதிகமாகும்.
அயலக, இந்தியத் தமிழர்கள் விரும்பி வாங்குவதற்காக இதன் விலையில் இருபத்தைந்து விழுக்காடு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.
ருபாய் ஆறாயிரத்து ஐநூறு விலையுள்ள இந்தப் புத்தகத்தைத் தற்போது இருப்பத்தைந்து விழுக்காடு குறைத்து ருபாய் நான்காயிரத்துஎண்ணூற்று எழுபத்தைந்துக்கு வாங்கிடலாம்.
நூல்களை வாங்கும் திறன் மிக்க அனைவரும் அணுக வேண்டிய முகவரி
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெளியீட்டுத்துறை, அண்ணாமலை நகர், சிதம்பரம்.

Comments